முனைவர் லட்சுமி ராமசுவாமி நளினமான நடன கலைஞராக, ஞானமிக்க நடன ஆசிரியராக, ஆழ்ந்த ஆடல்கலை ஆராய்ச்சியாளராக, கலைநயம் கனியும் நடன அமைப்பாளராக பரதநாட்டிய உலகில் தனிமுத்திரை பதித்தவர். சங்க காலத்து ஆடற்கலை நுாலான கூத்தநுாலின் 'இழைகளில்' ஆராய்ச்சி செய்து சென்னை பல்கலைக்கழகத்தின் இசைத்துறையில் பரதநாட்டியத்தின் முதல் முனைவர் பட்டத்தை பெற்றவர். 'நாட்டிய கலா சாரதி'என்ற விருதால் அலங்கரிக்கப்பட்டவர். பல சங்க இலக்கியங்களை நடன வடிவில் கொண்டு வந்தது இவரின் பெரும் சாதனை. ஆங்கிலத்திலும், தமிழிலும் பல நாட்டிய நுால்களை எழுதியிருந்தாலும், இவரது சமீபத்திய 'இந்திய பாரம்பரியத்தில் சுவை' என்ற நுால் தமிழ் இலக்கிய உலகில் இணைந்திருக்கின்ற அற்புத பொக்கிஷம். நடன கலையின் ரசங்களை அறிந்து 40 ஆண்டுகளாக ரசிகர்களை கவர்ந்து வரும் 'கலைமாமணி' லட்சுமி ராமசுவாமியின் நேர்காணல்...
பரதநாட்டிய உலகிற்கு எப்படி வந்தீர்கள்..
என் அம்மாவுக்கு நடனம் என்றால் உயிர். ஏழு வயதில் பரதநாட்டியம் கற்றுக்கொள்ள ஆரம்பித்தேன். அப்பாவும் ஆர்வமூட்டினார். காரக்குறிச்சி வெங்கட்நாராயணனிடம் முதலில், பின் இந்திரா கிருஷ்ணமூர்த்தியிடம் படித்தேன். 16 வயதில் சொந்த ஊர் திருநெல்வேலியில் அரங்கேற்றம் நடந்தது. திருமணமாகி சென்னைக்கு வந்து, என் மகன் 10 மாத குழந்தையாக இருக்கும் போது சித்ரா விஸ்வேஸ்வரனிடம் மறுபடியும் முதல்ல இருந்து கற்றுக்கொள்ள ஆரம்பித்தேன். அவரது நிறுவனத்தில் பயிற்றுவிக்கவும் செய்தேன். பின்னர் ஸ்ரீமுத்ராலயா என்ற நடன பள்ளியை துவங்கி நடத்தி வருகிறேன். இதுவரை ஆயிரம் பேருக்கு மேல் என்னிடம் படித்து கலைஞர்களாக உள்ளனர். பலர் தனியாக நடனப்பள்ளி நடத்தி வருகின்றனர்.
நாட்டிய கலைஞராக இருந்து, பல்கலையில் நாட்டிய பேராசிரியர் ஆனது எப்படி
'உனக்கு நல்ல ஆராய்ச்சி மனப்பான்மை இருக்கிறது' என்று சித்ரா விஸ்வேஸ்வரன் சொல்வார். பள்ளிப்பருவத்தில் இருந்தே எனக்கு நிறைய புத்தகம் படிக்கும் ஆர்வம் உண்டு. பரதநாட்டியத்தை பாடமாக படிக்க விரும்பி, சென்னை பல்கலையில் 2004ல் எம்.ஏ., பரதநாட்டியம் ஆரம்பித்த போது, அதில் சேர்ந்து பட்டம் பெற்றேன். பின்னர் அதே பல்கலையில் பரதநாட்டிய வருகைதரு பேராசிரியராக பணியாற்றி வருகிறேன்.
மரபு வழியாக பரதநாட்டியம் படிப்பது, பரதநாட்டியம் பட்டப்படிப்பு - எது சிறப்பு
மரபு வழியாக பரதநாட்டியம் பயிற்றுவிக்கும் சிறந்த ஆசிரியர்கள் உள்ளனர்; அதில் தவறு இல்லை. பட்டம் படித்தால் பிராட்டிக்கல், தியரி இரண்டும் தெரிந்து கொள்ளலாம்.
உங்கள் 'இந்திய பாரம்பரியத்தில் சுவை'புத்தகம் உருவானது எப்படி
ரஸா, தமிழில் சுவை என்பது எனக்கு பரதநாட்டியத்தில் ஈர்ப்பான விஷயம். நாட்டியத்தில் வெறுமனே உடம்பை வளைத்து, நிமிர்ந்து ஆடுவதை விட மனசை தொடும் விஷயம் தான் ரஸா. இந்திய கலைகளுக்கு தான் இந்த சிறப்பு. எனது பி.எச்.டி.,க்கு கூத்த நுாலை எடுத்து கொண்டேன். அப்போது தமிழ் இலக்கிய, இலக்கண நுால்கள் படித்தேன்.
சமஸ்கிருதத்தில் ரஸாவை எப்படி சொல்லியிருந்ததோ அப்படி, தொல்காப்பியத்தின் மெய்ப்பாட்டியல் களங்களுடன் சொல்லப்பட்டு இருந்தது. கூத்த நுாலில் 'சுவை'என்ற வார்த்தை, தொல்காப்பியத்தில் 'மெய்ப்பாடு'என உள்ளது. மெல்லிய உணர்வுகளுக்கு 'இழை'என்ற இனிய பெயர் தருகிறது கூத்தநுால். இழைகளை சொல்வதாக என் ஆய்வு அமைந்தது. இந்த நுாலை ஆராய்ச்சி போன்று எழுதாமல், இரண்டு விதமான, சமஸ்கிருத, தமிழ் பாரம்பரியத்தில் நாட்டிய சாஸ்திரத்தை எப்படி பார்க்கிறார்கள் என்று எழுதியுள்ளேன். ஆய்வு கட்டுரை ஆங்கிலத்தில் இருந்தாலும், அனைவரும் அறிந்திருக்க வேண்டும் என்று நுாலை தமிழில் எழுதினேன். இந்த நுாலுக்கு தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றம் நிதி உதவி செய்தது போற்றத்தக்கது. சிலப்பதிகார இசை, நாட்டிய, நாடக கூறுகள் பற்றிய என் ஆய்விற்கு மத்திய அரசின் சீனியர் பெல்லோஷிப் கிடைத்துள்ளது. அதனையும் புத்தகமாக்க எண்ணம் உள்ளது.
நாட்டிய சாஸ்திரத்தில் சமஸ்கிருதம், தமிழ் பாரம்பரியம் பற்றி அறிந்தவர் நீங்கள். இதில் எது சிறப்பு?
இரண்டிலும் மிகை, குறை என்று இல்லை. ஆனால் சமஸ்கிருத 'ரஸா' தான் நாட்டிய கலைஞர்களுக்கு பிரபலமாக தெரிந்திருக்கிறது. ஆனால் அதனை ஒப்பிட்டால், நமது தமிழ் இலக்கியத்தில் நாட்டியக்கலை கொஞ்சமும் குறைவில்லாமல் உள்ளது.
நாட்டியத்திற்கு தேவை உடல்மொழியா, உணர்வா?
தொல்காப்பியரே, மெய்ப்பாடு என்ற வார்த்தையை பயன்படுத்துகிறார். எந்த நாட்டியமுமே உடல்மொழி தான். பரதநாட்டியத்தில் மனம்சார்ந்த உடல்மொழி தேவை. உதாரணமாக சோகம், மகிழ்ச்சி என்பது முகத்தில் மட்டும் அல்ல; உடல் சார்ந்தது தானே.
எத்தனை நாட்டிய நாடகங்களை அமைத்திருக்கிறீர்கள்?
இதுவரை 26 நாட்டிய நாடகம் அமைத்திருக்கிறேன். சங்க இலக்கியங்கள், நற்றிணை, குறுந்தொகை முதல் பாரதியார் பாடல்கள் வரை கருவாக வைத்து உருவாக்கியுள்ளோம். சங்க இலக்கியத்தின் கதை போக்கு நடனத்தில் வரும்படி உருவாக்குவோம். கிளி பற்றி கூட 'தீம்' உருவாக்கினோம். பலவித பரிமாணங்களில் கிளி எப்படி இருந்தது என்பதே அது.
சங்க இலக்கிய கதாபாத்திரங்களை நடனத்தில் முகபாவமாக எப்படி காட்டுவீர்கள்?
முகபாவம் காட்டுவது சிரமம் இல்லை. அந்த பாடலின் ஆழத்தை படித்து புரிந்து கொண்டால் முகபாவம் காட்டுவது எளிது. காதல், வீரம், வெறுப்பு, பிரிவு என்று அத்தனை மனித உணர்வுகளை அறிந்து உள்வாங்க வேண்டும். நமது முக உணர்வு பார்வையாளர்களுக்கு புரிய வேண்டும். அவர்கள் ஒரு சிரிப்பு சிரித்தால் தான் நமக்கு வெற்றி.
பரதநாட்டியம் பயில இளைய தலைமுறை வருகிறதா?
நிறைய பேர் ஆசையோடு படிக்க வருகிறார்கள். 9ம் வகுப்பு படிக்கும் போது அரங்கேற்றத்திற்கு தயாராகிறார்கள். பலர் கல்லுாரி வரை தொடர்கிறார்கள்; பிறகு வேலை, சம்பளம் என்று வரும் போது கைவிடுகிறார்கள். நான் 24 வயதில் கற்றதை இப்போதுள்ள குழந்தைகள் 11 வயதில் கற்றுக்கொள்கின்றன. அந்த திறமை இந்த தலைமுறைக்கு உள்ளது. இவ்வாறு கூறினார்.
lakshmirramaswamy@yahoo.com
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!