வேளாண் துறை மூலம் பிரதமர் பயிர் காப்பீட்டு திட்டம் 2019 - 20ம் ஆண்டு காரீப் பருவத்திற்கான பயிர் காப்பீடு காலம் முடிந்துள்ளது. எனினும் சம்பா மற்றும் ராபி பருவத்திற்கு செயல்படுத்தப்பட உள்ளது. இத்திட்டத்தின் கீழ் மாவட்டந்தோறும் வருவாய் கிராம அளவில் நெல் 2 சம்பா, மக்காச்சோளம், துவரை, உளுந்து, பருத்தி, பாசிப்பயிறு, நிலக்கடலை மற்றும் பிர்கா அளவில் கம்பு, சோளம், எள், சூரியகாந்தி ஆகிய பயிர்களுக்கு பயிர் காப்பீடு செய்ய அறிவிக்கை வரவுள்ளது.
அறிவிக்கை செய்யப்படும் பயிர்களை பயிரிடும் குத்தகை விவசாயிகள் உட்பட அனைத்து விவசாயிகளும் திட்டத்தில் சேரலாம். பயிர்க்கடன் பெறும் விவசாயிகள் அனைவரும் திட்டத்தில் கட்டாயம் சேர்த்து கொள்ளப்படுவர். பயிர்க்கடன் பெறாத விவசாயிகள் தங்களது விருப்பத்தின் பேரில் சேரலாம். விதைப்பை தவிர்த்தல், பயிரிட அபாயம் ஏற்படும்
சூழ்நிலை, விதைப்பு முதல் அறுவடை வரை உள்ள பயிர் காலத்திற்கும், அறுவடைக்கு பின் ஏற்படும் இழப்பு, புயல், ஆலங்கட்டி மழை, மண் சரிவு, வெள்ளம் போன்ற உள்ளூர் இயற்கை இடர்பாடுகளால் ஏற்படும் இழப்பு போன்ற இனங்களில் பயிர் காப்பீடு வழங்கப்படும்.
கடன் பெறும் மற்றும் கடன் பெறா விவசாயிகளுக்கு ஒரே விதமான பயிர் காப்பீடுத் தொகை, பிரீமியம் தொகை மற்றும் அதற்கான மானியத்தொகை கிடைக்கும்.
மேலும் விவசாயிகள் பயிர் காப்பீடு திட்டத்தில் இணைய வேளாண் துறையின் அறிவிப்புக்கு பின் பொது சேவை மையங்கள், தேசிய வங்கி கிளைகள், தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள் மூலமாகவோ விவசாயிகள் முன் கூட்டியோ பயிர் காப்பீடு திட்டத்தில் பதிவு செய்யலாம். முன்மொழிவு படிவம், பதிவு விண்ணப்ப படிவம், கிராம நிர்வாக அலுவலர் வழங்கும் அடங்கல் நகல், வங்கி கணக்கு புத்தகத்தின் முதல் பக்க நகல், ஆதார் அட்டை நகல் போன்றவற்றுடன் விண்ணப்பிக்கலாம்.
- த.விவேகானந்தன்
வேளாண் இணை இயக்குனர் (பொறுப்பு)
மதுரை.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!