விதைப் பந்துகள் மூலம் மரம், செடி வளர்ப்பு பிரபலமாகி வருகிறது. மரங்கள் வளர்ப்பது அவசியமாகிவரும் நிலையில் விதைப்பந்துகள் பெரும் பங்களிப்பை அளிக்கிறது.
விதைப்பந்துகளை பயன்படுத்தி மரங்களை உருவாக்கும் முறையை பல ஆண்டுகளுக்கு முன் ஜப்பான் ஷிகோகு தீவின் சிறு கிராமத்தில் இருந்த மசானாபு புகோகா என்பவர் உருவாக்கினார். 'ஒற்றை வைக்கோல்' என்ற தனது நுாலில் இதை அவர் குறிப்பிட்டுள்ளார்.
விருட்சத்தின் உன்னதம்
செம்மண் அல்லது களிமண் மக்கிய எரு அல்லது மண்புழு உரம் மற்றும் மர விதைகள் கொண்டு 5:3:1 என்ற விகிதத்தில் கலந்து விதைப்பந்துகள் தயாரிக்கப்படுகின்றன. மண், எருவை ஒன்றாக கலந்து தேவைக்கேற்ப நீர் சேர்த்து உருண்டையாக உருட்டிக் கொள்ள வேண்டும். உருண்டையின் நடுவே சிறு குழி உருவாக்கி மர விதைகளை உள்ளே வைத்து பந்து வடிவில் உருட்ட வேண்டும். வேம்பு, சீத்தா, நாவல், புளி, கொய்யா, புங்கன், வில்வம், ஆல், அரசு, வாகை விதைகளை கொண்டு விதைப்பந்துகளை உருவாக்கலாம். சிறிதளவு சாம்பலை சேர்ப்பதால் விதைப் பந்துகள் பூச்சித்தாக்குதலில் இருந்து பாதுகாக்கப்படும்.
உருட்டிய விதைப்பந்துகளை முதலில் நிழலிலும், பின் வெயிலிலும் ஒரு நாள் காயவைக்க வேண்டும். இதனால் விதைப்பந்துகளில் வெடிப்பு ஏற்படாமல் இருக்கும்.
விதைகளே பேராயுதம்
விதைப்பந்துகளை விவசாய நிலங்களில் வீசக்கூடாது. தரிசு நிலங்கள், மலைப்பகுதிகளில் வீசலாம். எல்லா காலங்களிலும் விதைப்பந்துகளை வீசலாம் என்றாலும் ஜூன், ஜூலை, அக்., நவ., போன்ற பருவமழை காலங்களில் வீசினால் விதைகள் முளைப்பதற்கு ஏற்ற சூழல் உருவாகும். ''விதைகளே பேராயுதம்'' என்றார் நம்மாழ்வார்.
சுற்றுச்சூழலில் பெரும் மாற்றத்தை உருவாக்கும் வார்த்தைகள் இவை. ஓய்வு நேரங்களில் விதைப்பந்துகளை உருவாக்குவதை வழக்கமாக கொள்ளலாம். அவற்றை உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் கொடுப்பதால் எதிர்காலத்துக்கான விருட்சங்களை உருவாக்க முடியும்.
-பொ.சண்முகசுந்தரம்
தோட்டக்கலை உதவி அலுவலர் மதுரை.
90038 97874
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!