எலுமிச்சை மரங்களை தாக்கும் நோய்களில் மிகவும் முக்கியமானது பாக்டீரியாவினால் உருவாகும் சொறி நோய். இது எலுமிச்சை பயிரிடப்படும் அனைத்து பகுதிகளிலும் தென்படும்.
இலை, கிளை, சிறு கிளைகள், முள், காய் மற்றும் பழங்களிலும் சொறிப்புள்ளிகள் தோன்றும். குச்சிகளில் தோன்றும் சொறிப் புள்ளிகளினால் குச்சிகள் காய்ந்து விடும். காய்களில் தோன்றும் சொறிப் புள்ளிகளை சுற்றிலும் மஞ்சள் நிற வளையம் தோன்றும். பழங்களில் தோன்றும் சொறிப் புள்ளிகளில் வெடிப்புகள் தோன்றும். நோயினால் பழங்களின் தோல் பகுதி பாதிப்பிற்கு உள்ளாகின்றன. பழங்களில் சாறின் அளவும் குறைகின்றது. சொறி நோயுள்ள பழங்களின் சந்தை மதிப்பு வெகுவாக குறைகின்றது. பழத்திலுள்ள சொறிப்புள்ளிகள் மற்றும் வெடிப்புகள் மற்ற அழுகல் நுண்ணுயிர்கள் உட்புக வழி உண்டாக்குகின்றன. சொறி நோயினை ஏற்படுத்தும் பாக்டீரியா, இலைத்துளைகள் மூலமாகவோ அல்லது பூச்சி அல்லது முட்களினால் ஏற்படும் காயங்கள் மூலமாகவோ உட்புகுந்து தாக்குதலை துவங்குகின்றது. ஒரு மரத்திலிருந்து மற்றொரு மரத்திற்கு மழைத்துளிகள், காற்று, இலை துளைக்கும் பூச்சிகள் மூலம் நோய் பரவுகின்றது.
கட்டுப்படுத்தும் நுட்பம்: நோயுற்று கீழே உதிர்ந்து விழுந்து கிடக்கும் இலைகளையும், சிறு குச்சிகளையும் சேகரித்து எரித்து விட வேண்டும் மரங்கள் சிறப்பாக வளர நன்கு பரிந்துரைக்கப்பட்ட அளவு உரமிட்டு முறையாக தண்ணீர் பாய்ச்ச வேண்டும். பழத் தோட்டங்களில் நோயுற்ற மரங்களிலிருந்து நோயுற்ற சிறு குச்சிகளை வெட்டி தீயிட்டு அழிக்க வேண்டும். பின் கவாத்து செய்த உடன் 0.30 சதவீதம் தாமிர ஆக்ஸிகுளோரைடு மருந்து தெளிக்க வேண்டும். இதை தொடர்ந்து மூன்று முறை ஸ்ட்ரெப்டோசைக்கிளின் 100 பி.பி.எம் (100 மில்லி/1 லிட்டர் தண்ணீர்) மற்றும் 0.30 சதவீதம் தாமிர ஆக்ஸிகுளோரைடு கலந்து ஒரு மாத இடைவெளியில் தெளிக்க வேண்டும். மரம் துளிர்விடும் ஒவ்வொரு சமயமும், மரத்தின் அனைத்து பகுதிகளும் நன்றாக நனையுமாறு 0.3 சதவீதம் தாமிர ஆக்சி குளோரைடு கரசைல் (3 கிராம்/1 லி்ட்டர் தண்ணீர்) தெளித்தல் அவசியம். எலுமிச்சையில் தோன்றும் இலைத்துளைப்பான்கள் இந்நோயை பரப்புவதால் அவற்றை பூச்சிக்கொல்லி மருந்துகளை தெளித்து கட்டுப்படுத்துவது அவசியம். வேப்பம் புண்ணாக்கு (5 சதவீதம்) கரைசலை தெளித்தும் நோய் பரப்பும் பூச்சிகளை கட்டுப்படுத்தலாம்.
- முனைவர். ரா.விமலா
பருத்தி ஆராய்ச்சி நிலையம்
ஸ்ரீவில்லிப்புத்துார்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!