அழகிய பூக்களின் பள்ளத்தாக்கு... இயற்கை பிரியர்களுக்கான விருந்து

கண்ணுக்கு எட்டிய தூரம் வரை கலர்புல் பூக்கள், அழகிய பள்ளத்தாக்கு, நெடிந்துயர்ந்த மலைகள், உலா வரும் விலங்குகள்... இதையெல்லாம் ஒரே இடத்தில் பார்க்க வெளிநாடுகளுக்கு செல்ல வேண்டிய அவசியமில்லை.

நம் இந்தியாவிலேயே பிரமாண்டமான இமயமலை அடிவாரத்தில் இந்த பூக்களின் பள்ளத்தாக்கு உள்ளது. பெயரில் குறிப்பிடுவது போன்று கலர்புல் பூக்களால் அழகாக மூடப்பட்டுள்ளது நந்தா தேவி தேசியப்பூங்கா.

உலகப்புகழ் பெற்ற இந்த நந்தா தேவி தேசியப்பூங்கா உத்தரகண்ட் மாநிலத்தில் உள்ள ஜான்ஸ்கார் பள்ளத்தாக்கு மற்றும் இமயமலைக்கு நடுவில் உள்ள சாமோலி மாவட்டத்தில் அமைந்துள்ளது.

கடல் மட்டத்தில் இருந்து நந்தா தேவி சிகரம் 7,816 மீ., (25,643 அடி) உயரத்தில் உள்ளது. இது இந்தியாவின் 2வது உயரமான மலையாகும். யுனெஸ்கோவின் உலக பாரம்பரிய பட்டியலில் 1988ல் இடம்பெற்றுள்ளது.

இங்கு பாலிகோனாட்டம் மல்டிஃப்ளோரம், நீல பாப்பி, காலெண்டுலா, ஆர்க்கிட்ஸ், டெய்ஸிஸ் உட்பட ஆயிரத்துக்கும் மேற்பட்ட தாவர இனங்கள் காணப்படுகின்றன.

பனிச்சிறுத்தை, நீல செம்மறி, கஸ்தூரி மான், பழுப்பு கரடி, கருப்பு கரடி, முயல், லங்கூர் மற்றும் செரோ உட்பட பல்வேறு அழிந்து வரும் விலங்கினங்கள் பூங்காவில் உள்ளன.

டிரெக்கிங் மூலம் மட்டுமே கோபிந்த்காட்டில் இருந்து 17 கி.மீ., தூரம் சென்றால் இந்த அழகிய பள்ளத்தாக்கு அல்லது பூங்காவை அடைய முடியும்.

அருகிலுள்ள ஜோஷிமத், கங்காரியா போன்ற கிராமங்களில் தங்கும் வசதி உள்ள நிலையில், டிரெக்கிங் செய்பவர்கள் தங்கள் நீண்ட பயணத்துக்குப் பிறகு இங்கு ஓய்வெடுக்கலாம்.

கோடைக்காலத்தில் மட்டுமே அதாவது ஜூன் முதல் அக்., வரை சென்றால் தான் பூக்களின் அழகை ரசிக்க முடியும். அழகிய கலர்புல் பூக்களால் நிறைந்துள்ள பள்ளத்தாக்கு பார்ப்பவர்களின் கண்களுக்கு விருந்து படைக்கிறது.

குளிர்காலத்தில் பனியால் முழுமையாக மூடப்பட்டிருக்கும். முன்னதாக கங்காரியாவில் உள்ள வனச் சோதனைச் சாவடியில் உரிய அனுமதி பெற வேண்டும்.

Web Stories

மேலும் தினமலர் ஸ்டோரீஸ் படிக்க...