அமாவாசை நெருங்கினால் ஆலமரத்துப் பேய்க்கு நிலை கொள்ளாது என்பது கிராமத்துச் சொலவடை. அதைப் போல தேர்தல் நெருங்கினால் சில அரசியல் கட்சிகளுக்கும் நிலை கொள்ளாது. குறிப்பாக கம்யூனிஸ்ட்.
எப்படியாவது, 10 கோடியோ 15 கோடியோ பணமும் வாங்க வேண்டும், தொகுதிகளும் வாங்க வேண்டும். அதே சமயம் மீசையில் மண் ஒட்டவில்லை என்றும் காண்பிக்க வேண்டும். கடைசியாகச் சொன்னது சற்று கடினமான வேலை.
அதற்காக சில ஜோடனைகளைச் செய்வர். அதில் ஒன்று தான், சனாதன ஒழிப்பு மாநாடு. சி.பி.எம்., கட்சியின் ஜால்ராவான முற்போக்கு எழுத்தாளர் சங்கம் நடத்திய இந்த தெருக்கூத்தில் பலரும் பேசினர்.
நடிகர் உதயநிதியும் பேசினார். ஏதாவது புதிதாகப் பேசினாரா என்றால் அதுவும் இல்லை. வீரமணி பேசியதை கிளிப் பிள்ளை போல திருப்பிக் கூறினார்.
இவரது அப்பாவும், தாத்தாவும் காலங்காலமாக செய்ததைத் தான் இவரும் செய்திருக்கிறார். தாத்தா புத்திசாலி. ஹிந்துக்கள் எல்லாரும் திருடர்கள் என்று சட்டசபையில் பேசினார்; எதிர்ப்பு வலுத்ததும், அப்படி ஒரு புத்தகத்தில் போட்டிருக்கிறது என்று நழுவிவிட்டார். இன்னும் அழுத்திக் கேட்டால் இந்தப் புத்தகத்தில் போட்டிருக்கிறது என்று, வேறோர் புத்தகத்தை காட்டுவார்.
அதும் பலிக்கவில்லை என்றால் ஏதாவது ஒரு சினிமா விழாவில் எதையாவது பேசி, பிரச்னையை செய்தித் தாள்களில் பின்னுக்குத் தள்ளிவிடுவார்.
இந்த அரசியல் தந்திரம் தெரியாமல், நரி, தானும் கெட்டு, தரிசையும் கெடுத்த கதையாக, எடுப்பார் கைப்பிள்ளையாக பேசியிருக்கிறார். கைப்பிள்ளையா, எடுப்பார் கைப்பிள்ளையா என்பதை, அமித் ஷா தான் சொல்ல வேண்டும்.
எனவே, வீரமணிக்கு மட்டும் பதில் சொன்னால் போதும் என்று நினைக்கிறேன். முதலில், சனாதனம் வேறு; ஹிந்து மதம் வேறு என்று புளுகுகிறார்.
'சனாதனம், 3 சதவீத மக்களுக்கான மதம்; ஹிந்து மதம், 97 சதவீத மக்களுக்கானது' என்று தனக்கு வசதியாக, ஒரு விளக்கத்தை ஏற்படுத்திக் கொண்டு, அந்த குண்டுச் சட்டிக்குள் திராவிடக் குதிரையை ஓட்டுகிறார். அவர்களுக்கு வேதநெறியாகமுறை, நமக்கு கோவில் வழிபாடு, சிவன், மால் முதலிய கடவுள்கள் என்கிறார். வீரமணி எப்போது சைவ வைணவர் ஆனார் என்று புரியவில்லை.
போகட்டும்.
திராவிடச் சைவ தெய்வச் சேக்கிழார் என்ன சொல்கிறார் தெரியுமா?
வேதநெறி தழைத்தோங்க, மிகு சைவத் துறை விளங்க என்று தெளிவாகக் கூறுகிறார். வேதம் என்பது நதியைப் போல. அங்கே நீர் பருகும் படித்துறையைப் போன்றது சைவம், வைணவம் பொன்ற சமயங்கள்.
எங்கே அள்ளிப் பருகினாலும் நீரின் சுவை ஒன்று தான். எந்தப் பிரிவை ஏற்றுக் கொண்டாலும் அதிலுள்ள நம்பிக்கைகள், அடையும் இலக்கு, எல்லா இந்திய மதங்களுக்கும் ஒன்றாகவே சொல்லப்பட்டுள்ளன.
இதைத் தெரிந்து கொண்ட வீரமணி, சனாதனம் என்று ஏதோ தனித்திருப்பது போல பேசுகிறார். சற்று நிதானமாக யோசித்துப் பாருங்கள். அறுமதக் கடவுள்களான சிவன், மால், முருகன், விநாயகர் ஆகியோரை ஒழிப்பேன் என்று இன்றைய காலகட்டத்தில் கூறிவிட்டு, நிம்மதியாகத் துாங்க முடியுமா?
சனாதனப் போர்வைக்குள் ஒளிந்து கொள்வது, இவர்கள் தான் . அதுதான் இவர்களுக்குச் சட்டப்பூர்வமான கவசம்.
அடுத்ததாக, சில உதாரணங்களைக் காட்டி, மொத்த கெடுதல்களுக்கும் ஹிந்துமதம் மட்டுமே காரணம் என்றும், எல்லா நன்மைகளுக்கும் பகுத்தறிவுத் திராவிடமே காரணம் என்றும் வழக்கமான பிலாக்கணத்தை முன் வைத்துள்ளார்.
'ஒரே நாடு, ஒரே தேர்தல், ஒரே ரேஷன் அட்டை, என்று பேசும் நீங்கள் ஏன் ஒரே ஜாதி என்று கூறவில்லை?' என்று கேட்கிறார். ஜாதி இவரைப் பொருத்தவரை சனாதனிகள் சம்பந்தப்பட்டது. ரேஷன் அட்டை, அரசு சம்பந்தப்பட்டது. இரண்டையும் எப்படிக் குழப்பிப் பேசுகிறார்? அதுதான் திராவிடம்.
சரி, எல்லாரையும் பார்ப்பனர் என்றால், எல்லாருக்கும் இட ஒதுக்கீடு போய் விடும். மாறாக எல்லாரும் தாழ்த்தப்பட்டவர்கள் என்று அறிவித்தால், எல்லாருக்கும் இட ஒதுக்கீடு வந்துவிடும், அதன் பின் யாருக்காக நீங்கள் போராட முடியும்? எங்கேயோ இடிக்கிறதே? இனிமேல் கவனமாகப் பேசவும்.
மேலும் சனாதனம் என்பதற்கு, பனாரஸ் சென்ட்ரல் காலேஜ் வெளியிட்ட ஒரு நுாலை ஆதாரமாக காட்டி பிறப்பிலேயே ஏற்றத் தாழ்வை உண்டு பண்ணுகிறது என்று பேசுகிறார்.
ஒரு லட்சம் பாடல்களை உடைய ராமாயணம், ஒன்றரை லட்சம் பாடல்களை உடைய மஹாபாரதம், 2 லட்சம் பாடல்களை உடைய புராணங்கள், ஒன்றேகால் லட்சம் பாடல்களை உடைய உபநிடதங்கள், இவற்றில் எல்லாம் தேடிப் பார்த்துக் கிடைக்காமல், ஒரே ஒரு புத்தகத்தை, அதிலும், 100 ஆண்டுகளுக்கு முன்னால் அச்சிட்டதை காட்டுகிறார்.
வள்ளலார் என்று சொல்லக் கூடத் தகுதியற்றவர், பெருமானையும் வம்பிற்கு இழுக்கிறார். ஜூன் மாதம் 21ஆம் தேதி வடலுாரில் நடந்த வள்ளல் பெருமானின், 200ஆவது ஜெயந்தி விழாவில் பங்கேற்ற கவர்னர் ரவி, சனாதனத்தின் உயரிய நிலையை எட்டியவர் வள்ளலார் என்று பேசியிருக்கிறார்.
வள்ளல் பெருமான் சனாதனத்தை வேரோடு அழிக்க நினைத்தார். அனால் கவர்னர் மாற்றிப் பேசியுள்ளார் என்று வீரமணி பேசியுள்ளார். இதிலும் திராவிடத் திரிபுவாதம் செய்கிறார் ஆசிரியர்.
சுதந்திரம் அடைந்த நாள் முதல் இன்றுவரை, வடலுாருக்குச் சென்று பெருமானுக்கு மரியாதை செய்த ஒரே கவர்னர் ரவி என்பது சிறப்பான செய்தி.
கவர்னர், சனாதனம் என்றால் என்ன என்று விளக்கினார். 'மேடையில் இருந்து எனக்கு முன்னால் அமர்ந்திருக்கும் உங்களைப் பார்க்கும் போது, என்னில் ஒரு பகுதியை உங்களிடம் காண்கிறேன். அதே போல் நீங்கள் அனைவரும் என்னைப் பார்க்கும் போது உங்களின் ஒரு பகுதியை என்னில் காண்பீர்கள்.
'இத்தகைய நிலைக்கு எந்த வழி நம்மை இட்டுச் செல்கிறதோ அதுவே சனாதனம். அந்த வகையில் சனாதனத்தின் உயரிய ஒளியாளர் நம் பெருமான்' என்று பேசினார். வள்ளலார் அருளிய அருட்பெருஞ்ஜோதி அகவலில்
'உயிரில் யாமும் எம்முள் உயிர் இவை உணர்ந்தே அருள் நலம் பரவுக' என்று இதே கருத்தை கூறுகிறார். இதில் வீரமணிக்கு என்ன ஆற்றமையோ புரியவில்லை. அறிவு நேர்மை இருந்தால் ஹிந்து மதம் இப்படி ஒரு கருத்தைச் சொல்லவில்லை என்று நிரூபிக்க வேண்டும்.
நால் வருணத்தையும் தோல் வருணத்தையும் ஓட ஓட விரட்டியர் வள்ளலார். உண்மை தான். ஹிந்துமதமும் இதைதானே சொல்கிறது? அதற்கு நீங்கள் சனாதனம் என்று பெயர் வைத்தால், அக்கருத்தும் மாறிவிடுமா?
போகட்டும்.
நாத்திகம் சொல்கின்றவர்தம் நாக்கு முடை நாக்கு
நாக்கு ருசி கொள்ளுவதும் நாறிய பிண்ணாக்கு
சீர்த்தி பெறும் அம்பலவர் சீர்புகன்ற வாக்கு
செல்வாக்கு நல்வாக்கு தேவர் திருவாக்கு'
என்று ஆறாம் திருமுறையில் பெருமான் பேசியிருக்கிறாரே? முடை நாக்கு என்றால் என்ன பொருள் தெரியுமா? இதை நான் 'ட்வீட்' போட்டால் ஜெயில். பெருமானுக்கு என்ன பதில்?
'ராமலிங்கசுவாமி போன்ற புலவர்கள், தான் சாமியார்னு சொல்லி ஊரை ஏமாத்தினான்' என, ஈ.வெ.ரா., பேசியுள்ளார். அப்படியானால் நீங்கள் எல்லாம் வள்ளலாரைப் பற்றிப் பேச என்ன அருகதை இருக்கிறது?
பகுத்தறிவோடு கருணாநிதி சமாதியில், தயிர் வடை வையுங்கள், உங்கள் விருப்பம். ஆனால் வள்ளலாரை விட்டு விடுங்கள். இன்னும் ஆயிரம் ஆண்டுகள் கடந்தாலும், அவரைப் போல ஒரு ஞானி வரப்போவதில்லை. அத்தகைய போற்றுதலுக்குறியவரை, அரசியலாக்காதீர்கள்.
பி.பிரபாகர்
எழுத்தாளர்
சனாதன தர்மத்தின் பிரகாரம் ஆத்திகன் நாத்திகன் என்றால் ஆத்திகன் - கடவுளை முழுவதும் அவன் சனானதன தர்ம நூல்களை படித்தாலும் படிக்காவிட்டாலும். நாத்திகன் என்பவன் - பல சனாதன நூல்களை படித்து அதன் பொருள் உணர்ந்து அதில் உள்ள தவறுகளை திருத்துவதற்காக உள்ளவன்??ஆனால் இப்போதைய அறிவு சூன்யங்கள் ஏதோ ஒன்னு ரெண்டு நூலை படித்துவிட்டு கிறித்துவ முஸ்லீம் முறையில் சனாதன தர்மமா அப்படி என்றால் அது தண்டமான ஒன்று எல்லாம் தெரிந்தவர்களை போல உளறுபவர்கள் தான் தற்போதைய நாத்திக கூமுட்டைகள்