Load Image
Advertisement

உணவுக்கு இடையே நொறுக்குத் தீனியை தவிர்க்க 5 காரணங்கள்

தங்களின் உணவு நேரத்திற்கு இடையே ஏதாவது கொறிப்பது என்பது அநேகருக்கு இப்போது வழக்கமாகி வருகிறது. இந்த பழக்கம் ஒருவரின் ஆரோக்கியத்தில் என்ன மாற்றம் ஏற்படுத்துகிறது என்பதைப் பற்றி இங்கே நமக்கு சத்குரு விளக்குகிறார்.

1. உடலும் மனமும் மிகச்சிறப்பாக செயல்பட உதவும் காலி வயிறு

சத்குரு:ஒரு நாளில் அவ்வப்போது ஏதாவது சாப்பிட்டால் இன்னும் சுறுசுறுப்பாக செயல்பட முடியும் என்று நீங்கள் நினைக்கலாம். ஆனால் உங்கள் வயிற்றில் உணவு இருக்கும்போது உடல் எப்படி உணர்கிறது என்பதையும், வயிறு காலியாக இருக்கும்போது உங்கள் உடல் எப்படி உணர்கிறது என்பதையும் கவனித்து பாருங்கள். உங்கள் உடலும் மூளையும் உங்கள் வயிறு காலியாக இருக்கும்போதுதான் மிகச்சிறப்பாக செயல்படுகிறது என்பதை நீங்களே உணர முடியும். உணவுப் பொருள் எப்போதும் உங்கள் ஜீரண மண்டலத்திற்கு சென்றுகொண்டே இருந்தால், அது தொடர்ந்து இயங்கவேண்டிய நிலையில் இருப்பதால், ஒரு குறிப்பிட்ட அளவு சக்தி இயல்பாக இதற்கென ஒதுக்கப்பட வேண்டியிருக்கிறது. இதனால் உங்கள் உடலும் மூளையும் அதன் முழு திறனில் இயங்காது.

நீங்கள் உங்கள் முழுதிறனுக்கு இயங்க வேண்டுமானால், எந்த உணவுப்பொருள் 1.5-2.5 மணி நேரத்தில் உங்கள் இரைப்பையில் இருந்து குடல்பகுதிக்கு நகர்ந்து விடுகிறது என்பதை விழிப்புணர்வுடன் கவனித்து அவைகளை எடுத்துக்கொள்ள வேண்டும். குடல் பகுதிக்கு சென்ற பிறகு உடல் அதிகமான அளவில் சக்தியை செலவிடாது. உடலுக்குள் செல்லும் உணவுப்பொருள், அடுத்த பன்னிரண்டு முதல் பதினைந்து மணி நேரத்தில் உடலில் இருந்து முழுமையாக வெளியேறியும் விட வேண்டும் என்பதை யோக மரபு எப்போதுமே வலியுறுத்தி வந்திருக்கிறது.

வயிறு காலியாக இருந்தாலே பசிக்கிறது என்று அர்த்தம் இல்லை. உங்கள் சக்தியளவு குறையும் போதுதான் உங்களுக்கு பசியுணர்வு உண்டாகும். மற்ற நேரங்களில் உங்கள் வயிறு நிச்சயமாக காலியாகவே இருக்க வேண்டும்.

எளிமையான இந்த விழிப்புணர்வை தொடர்ந்து கவனமாக பின்பற்றினால், நீங்கள் இன்னும் அதிகமான பலத்துடன், சுறுசுறுப்பாகவும், கூர்மையுடனும் இருப்பதை நீங்களே அனுபவபூர்வமாக பார்க்கலாம். நீங்கள் எந்தத் துறையை தேர்ந்தெடுத்தாலும், அதில் வெற்றிகரமாக இருக்க தேவையானவை இவ்வளவுதானே. இதுதானே உங்களுக்கு வேண்டும்!

2. உடல், மன ஆரோக்கியம் தரும் உடல் சுத்திகரிப்பு செயல்முறை
வயிற்றில் ஜீரண செயல் நடக்கும்போது, உடலின் திசுக்கள் அளவில் நடக்கவேண்டிய தூய்மைப்படுத்தும் செயலானது கிட்டத்தட்ட முற்றிலுமாக நிறுத்தப்படுகிறது. இதனால், நாள் முழுவதும் அவ்வப்போது நீங்கள் உணவை எடுத்துக்கொண்டே இருந்தால், திசுக்களில் கழிவுகள் அதிகநேரம் தங்கியிருக்கும் நிலை ஏற்படும். நீண்டகால அடிப்படையில் இது பல பிரச்சனைகளுக்கும் காரணமாக மாறுகிறது. உணவுக் கழிவுகள் மொத்தமாக ஒரே தடவையில் குடல் பகுதியில் இருந்து மலக்குடலுக்கு வெளியேறாமல், அவ்வப்போது சென்றுகொண்டே இருந்தால், ஜீரண மண்டலத்திலிருந்து கழிவுகள் வெளியேறுவதும் முழுதிறனில் நடக்காது.

மலக்குடல் சுத்தமாக இல்லையென்றால் நீங்கள் பிரச்சினைகளை வரவேற்கிறீர்கள் என்று அர்த்தம். சுத்தமில்லாத மலக்குடலுக்கும், மனநிலை சம்பந்தமான தொந்தரவுகளுக்கும் நேரடியான தொடர்பு இருப்பதாகவே யோக மரபில் நாம் குறிப்பிட்டு வந்திருக்கிறோம்./pullquote]

மலக்குடல் சுத்தமாக இல்லையென்றால் நீங்கள் பிரச்சினைகளை வரவேற்கிறீர்கள் என்று அர்த்தம். சுத்தமில்லாத மலக்குடலுக்கும், மனநிலை சம்பந்தமான தொந்தரவுகளுக்கும் நேரடியான தொடர்பு இருப்பதாகவே யோக மரபில் நாம் குறிப்பிட்டு வந்திருக்கிறோம். மலக்குடல் சுத்தமாக இல்லாவிட்டால் உங்கள் மனதை உங்களால் நிலையாக வைக்க முடியாது.

இந்திய பாரம்பரிய மருத்துவ முறைகளான ஆயுர்வேதம் மற்றும் சித்த மருத்துவத்தில், நோயாளிகளுக்கு எந்த தொந்தரவாக இருந்தாலும், முதலில் ஜீரண மண்டலத்தை சுத்தப்படுத்துவதில் இருந்துதான் துவங்குவார்கள். ஏனென்றால், உங்களின் பெரும்பாலான பிரச்சினைகளுக்கு சுத்தமில்லாத மலக்குடலே காரணமாக இருக்கலாம்.

இப்போது மக்கள் உணவு எடுத்துக்கொள்வதை பார்த்தால், அவர்களின் குடல் பகுதியை சுத்தமாக வைப்பதே அவர்களுக்கு பெரும் சவாலாக இருக்கப்போகிறது. நீங்கள் வேண்டுமானால் நமது ஆசிரமத்தில் பின்பற்றுவதைப்போல இரண்டு வேளைகள் மட்டும் நன்றாக உணவு எடுத்துக்கொண்டு, இடையே வேறு எதுவும் எடுத்துக் கொள்ளாமல் இருக்க முயற்சி செய்யலாம். அதிகமான செயல் செய்யவேண்டிய தேவையிருந்தால் இடையில் ஏதாவது பழவகைகளை எடுத்துக் கொள்ளலாம். இப்படி கவனமாக உணவு எடுத்துக்கொண்டால் உங்கள் மலக்குடல் எப்போதும் சுத்தமாக இருக்கும்.

யோகமரபில், ஒரு உணவுக்கும் அடுத்த வேளை உணவுக்கும் இடையே குறைந்தது ஆறு முதல் எட்டு மணிநேரம் வரை இடைவெளி இருக்க வேண்டும் என்கிறோம். இது நடைமுறையில் சிரமமாக இருந்தால், குறைந்தது ஐந்து மணிநேர இடைவெளியாவது அவசியம் வேண்டும். இதைவிட குறைவான இடைவெளியில் உணவு எடுத்துக்கொண்டால் உங்களுக்கு நீங்களே பிரச்சினையை ஏற்படுத்திக் கொள்கிறீர்கள் என்று அர்த்தம்.

3. உடலாக உருமாறும் உணவு

நீங்கள் எதை உங்கள் மனம், உடல் என்று அழைக்கிறீர்களோ அது குறிப்பிட்ட விதமான ஒரு ஞாபக பதிவு. இந்த ஞாபக பதிவு அல்லது தகவல் இருப்பதால்தான் உங்கள் உடல் இந்த வடிவத்தை எடுத்துள்ளது. நாம் உண்ணும் உணவு, இந்த ஞாபகத்தின் அடிப்படையிலேயே உடலாக உருமாறுகிறது. இப்போது, நான் ஒரு மாம்பழம் சாப்பிட்டால், அது எனக்குள் சென்றதும் ஆணாக மாறுகிறது. அதே மாம்பழத்தை ஒரு பெண் சாப்பிட்டால் அது பெண்ணாக உருமாறுகிறது. இதுவே மாம்பழத்தை ஒரு மாடு சாப்பிட்டால் அது மாடாக மாறுகிறது. ஏன் இந்த மாம்பழம் எனக்குள் சென்று ஒரு பெண்ணாகவோ அல்லது ஒரு மாடாகவோ மாறுவதில்லை..? இதற்கு அடிப்படையாக இருப்பது ஒவ்வொரு உடலிலும் இருக்கும் ஒரு குறிப்பிட்ட விதமான ஞாபக பதிவுதான்.

அதிலும், நான் உண்ணும் மாம்பழம் எனது தோலாக மட்டுமின்றி, என் தோலின் நிறத்திற்கு ஏற்றவாறும் எப்படி மாறுகிறது? உள்ளே சென்ற அந்த மாம்பழத்தின் நிறத்தைக்கூட உங்களிடம் எங்கும் பார்க்க முடியாது. இந்த உடலுக்குள் எதை அனுப்பினாலும் சரி, உள்ளிருக்கும் ஞாபக கட்டமைப்பின் வலிமை, இதே மனிதனாகவே உணவு உருமாறுவதை உறுதி செய்கிறது. வேறு யாராகவும் மாற்றுவதில்லை.

உங்களுக்கு வயதாக வயதாக எதை உணவாக உள்ளே அனுப்பினாலும், அதை உடலோடு சேர்த்துக்கொள்ளும் உடலின் இந்த திறன் குறைய துவங்குகிறது. ஏனென்றால், உங்கள் உடலின் மரபணு சார்ந்த ஞாபகம், மற்றும் பரிணாம வளர்ச்சி சார்ந்த ஞாபகத்தின் திறன், உணவை உடலாக மாற்றுவதில் குறைகிறது. நீங்கள் ஆரோக்கியமாகவும், உணவை நன்றாகவே ஜீரணிக்கும் உடலுடனும் இருந்தாலும், அதை மனிதனாக மாற்றுவது என்பது முன்பிருந்த அதே தீவிரத்துடன் நடக்காது. ஞாபகம் குறைவதால், உடலில் ஜீரணம் நடக்கும், ஆனால் ஒரு உயிர் இன்னொரு உயிராக பரிணமிப்பது என்பது அந்தளவுக்கு இருக்காது.

இந்த உடல், அதன் இயக்கத்தில் ஏற்படும் இந்த தாமதத்திற்கு தானாகவே பழகிக்கொள்ளும். ஆனால், நீங்கள் எந்த உணவை எப்படி எடுத்துக் கொள்ளலாம் என்பதில் விழிப்புணர்வுடன் இருந்தால், நீங்கள் இன்னும் சிறப்பாக உடலை அனுசரித்து செல்லமுடியும். நீங்கள் முப்பத்தைந்து வயதை கடந்தபிறகு, உடலளவில் தீவிரமான செயல் செய்ய தேவையிருந்தாலோ அல்லது ஏதாவது மருத்துவம் சார்ந்த பிரச்சினை இருந்தாலோ தவிர, இரண்டு வேளை மட்டும் உணவு எடுத்துக்கொள்வது உங்கள் ஆரோக்கியத்தை நிச்சயமாக மேம்படுத்தும். நீங்கள் அதிகளவில் உணவை உள்ளே அனுப்புவது உடலிற்கு தேவையற்ற சிரமத்தை ஏற்படுத்துகிறது. மேல்நோக்கி வளரும் வளர்ச்சி முடிவடைந்து விடுவதால் உடலிற்கு அதே அளவு உணவு இப்போது தேவையில்லை. கொஞ்சம் பசியாகவோ, சோர்வாகவோ உணர்ந்தால், இடையே ஏதாவது ஒரு பழம் எடுத்துக்கொள்வதே போதுமானதாக இருக்கும். இதை உங்களால் தொடர்ந்து செயல்படுத்த முடிந்தால் நீங்கள் மிக ஆரோக்கியமாக வாழமுடியும். இது உங்கள் பொருளாதார நிலைக்கும், சுற்றுச்சூழலுக்கும்கூட உகந்தது.

4. நேர்மை

ஆன்மீக செயல்முறையின் ஒரு நிலையாக, உங்கள் உடலிலும், உள்ளத்திலும் ஒரு குறிப்பிட்ட விதமான நேர்மையை கொண்டு வர வேண்டியது இருக்கிறது. நேர்மை என்று நாம் குறிப்பிடுவது என்னவென்றால், உங்கள் ஒட்டுமொத்த தன்மையும் ஒரேவிதமாக குவிக்கப்படாமல் ஏனோதானோ என்று இருந்தால், அது எதையுமே அனுபவபூர்வமாக உணரும் தன்மையை இழந்துவிடும். நடப்பது எவ்வளவு அற்புதமானதாக இருந்தாலும், அதை நீங்கள் தவறவிட்டு விடுவீர்கள். இதனால்தான், உங்கள் அனுபவபூர்வமாக பார்க்கும் திறன் மேம்படும் வகையில், உங்களுக்குள் ஒருவிதத்தில் உடலளவிலும் மனதளவிலும் ஒரு நேர்மை இருக்கும் வகையில் ஈஷா யோகா வகுப்புகள் வடிவமைக்கப்பட்டு இருக்கிறது.

அனுபவபூர்வமாக எதையாவது பார்க்க உங்களிடம் இருக்கும் ஒரே கருவி உங்கள் உடல்தான். உங்கள் மனம் என்று நீங்கள் நினைக்கலாம், உங்கள் மனமும் உடல்தான். வெளியில் இருக்கும் ஏதோ ஒன்றை உங்கள் உடலுக்குள் அனுமதிக்கும்போது, உங்கள் உடலின் நேர்மையில் சிறிதளவு இளக்கம் ஏற்படுகிறது. ஏனோ மக்கள் இதைப்பற்றி புரிந்துகொள்ளவில்லை. உங்கள் ஆயுட்காலத்தை நிர்ணயிப்பதில், ஒரு நாளில் எத்தனை முறை உங்கள் உடல் வெளியிலிருப்பதை உள்ளே அனுமதிக்கிறது என்பதற்கும் பங்கு இருக்கிறது. வெளியில் இருக்கும் ஏதோ ஒன்று உள்ளே வருவதை உங்கள் உடல் அடிக்கடி அனுமதித்துக்கொண்டே இருந்தால், உங்கள் ஒட்டுமொத்த உடலும் தளர்வடையும். இதைப்போன்ற உடலால் எதையும் செய்ய முடியாது. ஏனென்றால், தேவையான நேர்மை இல்லை. தேவையான நேர்மை இல்லாதபோது வேறு எதனுடனும் தொடர்பும் இருக்காது. நீங்கள் எப்படியோ உயிருடன் வாழ்ந்துவிட முடியும், அதற்குமேல் எதுவும் நடக்காது.

யோகிகள் அல்லது சாதனாவில் ஈடுபடுபவர்கள் இடையே வேறு எந்தவிதமான உணவையும் எடுக்காமல் ஒருநாளில் ஒருவேளை அல்லது இருவேளை உணவு மட்டுமே எடுத்துக்கொள்வது, தங்கள் உடலை எதற்காகவும் திறக்கவேண்டாம் என்பதால்தான். இந்த உடலில் காற்று மற்றும் நீரை தவிர வேறு எதுவும் அடிக்கடி உட்புகத் தேவையில்லை. ஏனென்றால், அது உடலின் தொடு உணர்வில் இளக்கம் ஏற்படுத்தும். தொடு உணர்ச்சி என்பது உடலளவில் நீங்கள் யார் என்பதன் முதல் வெளி அடுக்கு. உங்கள் உடலின் தொடு உணர்வை கூர்மையாக வைத்திருக்க வேண்டுமென்றால், உங்கள் கண்ணில் படுவதையெல்லாம் உங்கள் உடலுக்குள் அனுமதிக்கக்கூடாது. நீங்கள் நன்றாக உணவு எடுத்துக்கொள்ள வேண்டும், நாம் அதைப்பற்றி பேசவில்லை. ஆனால், ஒருநாளில் எத்தனை முறை உணவு உங்கள் உடலுக்குள் செல்கிறது என்பதை பற்றித்தான் நாம் பேசுகிறோம்.

5. கட்டாயங்களில் இருந்து விழிப்புணர்வு நிலைக்கு

உங்களுக்கு எப்போது உணவு எடுத்துக்கொள்ள வேண்டும் என்று தோன்றுகிறதோ, அப்போது உணவை தவிர்ப்பது என்பது சாதனாவின் ஒரு பகுதியாக இருக்கக் காரணம், கட்டாயமாக உணவு வேண்டும் என்ற உந்துதலில் இருந்து அல்லது உடலின் தன்னிச்சையான செயல்களில் இருந்து நீங்கள் விடுபட வேண்டும் என்பதற்காகதான். உணவு என்பது அத்தியாவசியமான ஒரு தேவை. இதனை அடிப்படையாகக்கொண்டே வாழ்வின் பிற அம்சங்கள் தன்னிச்சையானதாக மாறுகிறது.

நம் ஆசிரமத்திற்கு வந்திருந்தபோது உங்களில் பலருக்கும் இது முதலில் இம்சையாகவே இருந்திருக்கலாம்: உணவு நேரமானதும், நல்ல பசியில், சாப்பிடலாம் என்று பிக்ஷா ஹால் (உணவருந்தும் கூடம்) வந்திருப்பீர்கள். உங்கள் முன் உணவு பரிமாறப்படுகிறது. அப்படியே விழுங்கிவிடும் ஆவலில் நீங்கள் இருக்க, உங்களை சுற்றி இருக்கும் மக்கள் கண்மூடி கைகளை மடிமீது வைத்து உள்ளெழுச்சிப் பாடலுக்காக அமருகிறார்கள். இது எதற்காக என்றால், நீங்கள் நல்ல பசியில் இருந்தாலும், இன்னும் இரண்டு நிமிடங்கள் பொறுத்திருக்க தயாராக இருக்கிறீர்கள். எதுவெல்லாம் உங்களை மீறி தன்னிச்சையாக நடப்பதாக உணர்கிறீர்களோ, அதில் எல்லாம் இதை முயற்சி செய்து பாருங்கள். இப்போதே செய்தே ஆகவேண்டும் என்ற உணர்வை இரண்டு நிமிடங்கள் தள்ளிப்போடுங்கள். அது உங்களை கொன்றுவிடாது, உங்களை மிக வலிமையானவராக மாற்றியமைக்கும்.

உடலில் இருக்கும் இந்த கட்டாயத்தை அகற்றுவது என்பது முக்கியமானது. உங்கள் உடலும் மனமும் ஒரு கலவை. எல்லாவிதமான கடந்தகால நினைவுகளும் சேர்ந்து உங்கள் இயல்பாக வெளிப்படுகிறது. இயல்பு என்றாலே, அது உங்களிடமிருந்து வெளிப்படும் கட்டாயமான செயலாகிவிடுகிறது. நான் என் இயல்பிலேயே இருப்பேன் என்றால், நீங்கள் பரிணாம வளர்ச்சியில் பங்கேற்க வேண்டாம் என்று முடிவு செய்து விட்டீர்கள்தானே. எது என்னை சிறைப்பிடித்தி வைத்திருக்கிறதோ, அதிலேயே நான் சிக்கிக்கொள்கிறேன் என்றுதானே இதற்கு அர்த்தம். இந்த கட்டுப்பாடுகளை உடைத்து, புதிய வாய்ப்புகளை நீங்கள் பார்த்துவிட வேண்டும்தானே.

உணவு என்பது மிக அடிப்படையானதாக, எளிமையானதாக தெரிந்தாலும், இதை நீங்கள் எப்படி கையாள்கிறீர்கள் என்பதை பொறுத்து பல மாற்றங்கள் ஏற்படும். உங்களுக்குள் இருந்து கொண்டு, உங்களை ஆட்டுவிக்கும் தகவல் பதிவுகளில் இருந்து கொஞ்சம் விலகி, இன்னும் விழிப்புணர்வான நிலையில் செயல்பட நீங்கள் மேற்கொள்ளும் பயணம் இது. கட்டுப்பாடுகள் பல நிலைகளிலும் இருக்கிறது. எல்லாவற்றுக்கும் அஸ்திவாரமாக இருப்பது உங்கள் உடல்தான். இதனால்தான் உங்கள் உடல்மீது நீங்கள் கவனம் செலுத்த வேண்டியிருக்கிறது.

"நீங்கள் மிகவும் பசியாக இருக்கும்போது, உங்களுக்கு உணவுக்கான தேவை மிகவும் கடுமையாக இருக்கும்போது, நீங்கள் உங்கள் உணவை வேறொருவருக்கு வழங்கினால் நீங்கள் வலிமை ஆவீர்கள்" இந்த அளவிற்கு கௌதம புத்தர் கூறினார். நான் அவ்வளவு தூரம் போகவில்லை. நான் சொல்கிறேன், "வெறும் இரண்டு நிமிடங்கள் காத்திருங்கள்" - அது நிச்சயமாக உங்களை வலிமைமிக்கவர் ஆக்கும்.



வாசகர் கருத்து (1)

  • மகாலிங்கம், கோவை - ,

    நன்றி சத்குரு.

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
Advertisement