உலகம் சுற்றும் வாலிபன் திரைப்படம் வெளியாகி 50 ஆண்டுகளாகிறது .இதனை எம்.ஜி.ஆர்.,ரசிகர்கள் சென்னையில் விழா எடுத்து இன்று கொண்டாடினர்.
இந்த விழாவில் எம்.ஜி.ஆரின் தீவிர ரசிகர்கள் சிறப்பாக கவுரவிக்கப்பட்டனர்.அவர்களில் ஒருவர்தான் எம்.ஜி.ஆர்.,சாமி என்றழைக்கப்டும் ராஜப்பா வெங்கடாச்சாரி.அவரைப் பற்றி தினமலர்-வாரமலரில் இன்று சிறப்பு கடடுரை வெளியாகி உள்ளதால் விழாவில் கதாநாயகர் போல வலம் வந்தார்.
இவர் துாத்துக்குடி மாவட்டம், ஸ்ரீ வைகுண்டம் கோவிலின் பரம்பரை ஸ்தானிகர்களில் ஒருவர் வயது 76 .எம்ஜிஆர் நடித்து வெளிவந்துள்ள 134 படங்களையும் பார்த்துள்ளார், இதில் பெரும்பாலான படங்களை முதல் நாள் முதல் காட்சியில் பார்த்தவர். ஒவ்வொரு படத்தையும் திரும்ப திரும்ப பார்க்க கூடியவர்.உலகம் சுற்றும் வாலிபன் படத்தை மட்டும் இதுவரை 252 முறை பார்த்துள்ளார். அந்த படத்தின் முதல் நாள் முதல் காட்சிக்கான டிக்கெட் கட்டணம் நாற்பது பைசா, அந்த டிக்கெட்டைக்கூட பத்திரமாக வைத்துள்ளார்.இது போக எம்ஜிஆரின் 119 படங்களின் ‛சி.டி.,'யும் வைத்துள்ளார் அவற்றையும் திரும்ப திரும்ப பார்க்கக்கூடியவர்.
எம்ஜிஆரின் ஏதாவது ஒரு படத்தை பற்றி சொன்னால் போதும், அந்தப்படம் எந்த ஆண்டு வந்தது? யார் இயக்குனர்? யார் இசை அமைப்பாளர்? என்பது உள்ளீட்ட அனைத்து விவரங்களையும் மடமடவென மனப்பாடமாக சொல்லக்கூடியவர், இப்படி அனைத்து எம்ஜிஆர்.,படங்களின் விவரமும் அவருக்கு அத்துப்படி.
நாடோடி மன்னன் படம் முதலில் சென்னையில் மட்டுமே வெளியானதாம் அந்தப்படம் பார்ப்பதற்காகவே சென்னை வந்திருக்கிறார்,அவரது திருமணத்திற்கு முதல் நாள், ‛இதோ வந்து விடுகிறேன்' என்று, சொல்லிவிட்டு அன்று வெளியான ‛நாளை நமதே' படம் பார்க்க போய்விட்டார், இங்கே மாப்பிள்ளையை காணோம் என்று எல்லோரும் தேடிக் கொண்டு இருந்திருக்கின்றனர்.
எம்ஜிஆரை.,கட்சியை விட்டு நீக்கிய பிறகு அவருக்கு ஆதரவாக தினமலர் மட்டுமே செயல்பட்டதால், அன்று முதல் தினமலர் மட்டுமே வாங்கிப்படிப்பவர், கடந்த 51 வருட தினமலர் வாசகர் என்று பெருமையாக சொல்பவர்.
எம்ஜிஆரை.,இரண்டு முறை துாரத்தில் இருந்தும் ஒரு முறை அருகில் சென்று பேசும் சந்தர்ப்பமும் கிடைத்ததை பாக்கியமாக கருதுபவர்.
அவர் இறந்து 36 வருடமாகிறது இந்த 36 வருடமாக அவர் மறைந்த நாளில் மவுன விரதம் இருந்து வருகிறார் வீட்டில் உள்ள எம்ஜிஆர்.,படத்தை கும்பிட்டுவிட்டுதான் நாளை துவக்குபவர்.
அரசு அலுவலகத்தில் இளநிலை உதவியாளராக சேர்ந்து வட்டார வளர்ச்சி அதிகாரியாக ஒய்வு பெற்றவர். இவரது மூதாதையரை தொடர்ந்து தற்போது கோவில் காரியங்களை பார்த்துக் கொண்டிருக்கிறார். இது போக ஒய்வு ஊதிய சங்க தலைவராக இருந்து சேவை செய்து வருகிறார்.
உள்ளூரில் கண் மருத்துவமுகாம் உள்ளீட்ட பொதுமக்களுக்கு நலன்தரும் விஷயங்களில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டு செயல்படுபவர்.இவரது இயற்பெயரான ராஜப்பா வெங்கடாச்சாரி என்றால் தெரிகிறதோ இல்லையோ? ஆனால் எம்ஜிஆர்.,சாமி என்றால் எல்லோருக்கும் தெரிகிறது. அவரது போன் எண்:94420 63660.அவர் பெரும்பாலும் கோயிலுக்குள் இருப்பவர் என்பதால் போன் உபயோகிப்பதில்லை ஒய்வு நேரத்தில் தனக்கு வந்த மிஸ்டு காலைப் பார்த்து பேசுவார்
-எல்.முருகராஜ்.
பள்ளி பிள்ளைகள் எல்லாம் பாடத்தை திருப்பி திருப்பி இவர் இருநூற்றைம்பது தடவை திரைப்படம் பார்த்தது [போல் மனதில் பதியும் வரை படித்தால் கல்வியிற் சிறந்த தமிழ்நாடு ஆகிவிடும் தமிழ்நாடு.