கடந்து போன மகளிர் தினத்தன்று பாராட்டப்பட்ட சாதனை படைத்த பெண்கள் பற்றி படித்துக் கொண்டிருந்த போது கோவை ஈரநெஞ்சம் மகேந்திரன் போட்டிருந்த இரு பெண்கள் பற்றிய பதிவு மனதைத் தொட்டது.
கிட்டத்தட்ட முப்பது ஆண்டுகளுக்கு மேலாக இந்த பெண்கள் எவ்வித பிரதிபலனும் இன்றி அன்னதானம் செய்து வருகின்றனர் என்பதுதான் அந்த செய்தி.
திருமண பந்தத்தை விரும்பாமல் இளவயதிலேயே புதுக்கோட்டை பல்லவன் குளத்தில் உள்ளது வள்ளலார் மடத்திற்கு வந்து சேர்ந்த இருவரும் அங்கேயே தங்கியிருந்து ஆன்மீக பணியில் ஈடுபட்டு வந்தனர்,அநத ஆசிரமத்தில் வசிப்பவர்களின் உணவு தேவைக்காக அன்பர்கள் வழங்கும் உணவுப் பொருட்களை மிச்சம் செய்து வாரத்தில் ஒரு நாள் இருபது பேர்களுக்கு அன்னதானம் செய்துவந்தனர்.ஒரு வேளை உணவு கூட இல்லாமல் இருப்பவர்கள் மத்தியில் நமக்கு மூன்று வேளை உணவு எதற்கு என்று அதை இரண்டு வேளையாக சுருக்கிக்கொண்டு அந்த ஒரு வேளை உணவை சேர்த்துவைத்து வாரத்தில் ஒரு நாள் அன்னதானம் செய்வோம் என்று எண்ணி செயல்பட்ட இந்த பெண்களின் பண்பால் கவரப்பட்ட அக்கம் பக்கம் உள்ள நல்லவர்கள் தங்களால் இயன்றதை நன்கொடையினை கொடுக்கலாயினர்.நன்கொடை கொடுப்பவர்களில் சாதாரண ஏழை எளிய மக்களும் உண்டு அந்தப்பகுதியில் உள்ள ரேசன் கடையில் அரிசி வாங்கும் பல எளியவர்கள் தாங்கள் வாங்கும் ரேசன் அரிசியை இவர்களிடம் கொடுத்துவிடுவர்.உள்ளூர் கிராம நிர்வாக அலுவலகர் ரேகா இவர்களைப்பற்றி விசாரித்து அரசு சார்பில் உதவ நடவடிக்கை எடுத்து வருகிறார்.
நன்கொடையாளர்களின் ஆதரவால் வாரத்தில் ஒரு நாளாக இருந்த அன்னதானம் இரண்டு நாள் மூன்று நாள் என்றாகி தற்போது வருடம் முழுவதும் என்று கடந்த 25 வருடமாக தொய்வின்றி நடைபெற்று வருகிறது..காலையில் நொய்யரிசி,பாசி்பருப்பு,சீரகம,வெந்தயம் சேர்த்து ஒரு அண்டாவிற்கு கஞ்சி காய்ச்சி அது தீரும் வரை வழங்குகின்றனர்,பின் மதியம் 200 பேருக்கு சாப்பாடு சாம்பார் கூட்டு என கொடுக்கின்றனர் சிலர் இங்கேயே உட்கார்ந்து சாப்பிடுவர் பலர் வீட்டிற்கு கொண்டு போய் விடுவர் இங்கே பக்கத்தில் ஆஸ்பத்திரி உள்ளது அங்குள்ள நோயாளிகளுக்கும் அவர்களை பார்த்துக் கொள்ளும் உதவியாளர்களுக்கும் எங்களது சாப்பாடு ஒரு டானிக் போல செயல்படுகிறது .இது போக ஊனமுற்றவர்கள் உழைக்க முடியாதவர்கள் வயதானவர்கள்தான் எங்களின் வள்ளலார் தர்மசாலைக்கு வந்து சாப்பிடுவர்.
இந்த அன்னதான பணிக்காக இவர்கள் யாரையும் வேலைக்கு வைத்துக் கொள்ளவில்லை காரணம் அவர்களுக்கு கொடுக்கும் சம்பளத்திற்கு இன்னும் பத்து பேருக்கு சாப்பாடு போடுவவோமே என்பதால், இதற்காக இவர்கள் இருவருமே எல்லா வேலைகளையும் செய்து வருகின்றனர்.அரிசி பருப்பு காய்கறி வாங்குவது ,சமைப்பது முதல் பாத்திரங்களை சுத்தம் செய்வது வரை இவர்களே பார்த்துக் கொள்கின்றனர் இதற்காக காலை 3 மணிக்கே ஆரம்பித்து விடுகிறது இவர்களது இந்த அறப்பணி மதியத்திற்கு மேல் ஆன்மீகப்பணி அது இரவு வரை தொடரும் பின் மறுநாள் காலை 3 மணி முதன் அன்னதானப்பணி என்று இவர்களது தொண்டு தொடர்கிறது.
பசியோடு இருப்பவருக்கு உணவு அளிப்பதே கடவுளுக்கு மகிழ்ச்சியளிக்கும் செயல் என்று கூறிய வள்ளலாரின் வழி நின்று ஆன்மீகப் பணியோடு பசிப்பிணி போக்கும் அறப்பணியையும் செய்துவரும் இந்த சகோதரிகளின் தொண்டு தொடரட்டும்,பெரியநாயகியுடன் பேச விரும்புபவர்களுக்கான எண்:63844 25322.
-எல்.முருகராஜ்.
அருமை. பசிப்பிணி அகல வேண்டும் என்றார் வள்ளலார். அவர் என்றும் மகிழ்வுடன் உங்களை வாழ்த்துவார் வாழ்க