சொல்லுங்க மம்முக்குட்டி... ஏட்டய்யாவின் 'ஜொள்ளு'
பொங்கல் கொண்டாட்டம் முடிந்து, சித்ராவும், மித்ராவும் திருமுருகன்பூண்டி திருமுருகநாதசுவாமி கோவிலுக்கு சென்றனர். சுவாமி தரிசனம் செய்தவுடன், அருகிலிருந்த பூங்கா பெஞ்சில் சற்றே இளைப்பாறினர்.
போலீஸ் வாகனம் அவ்வழியே செல்லவே, அதனை பார்த்த சித்ரா, ''மித்து, சிட்டி லிமிட்டில், 'செல்வம்' செழிக்க வலம் வந்த ஏட்டு ஒருத்தர், லேடி போலீசிடம் விடற ஜொல்லு தாங்க முடியலைன்னு, டி.ஜி.பி.,க்கு பெட் டிஷன் பறக்கவே, அவரை வேற டிபார்ட்மென்ட் மாத்தினாங்க...''
''ஆனாலும், அவரு திருந்தற மாதிரி தெரியலே. ஏன்னா, அவடேரா 'இம்சை' பொறுக்க முடியாம, ஏட்டோட நெம்பரை பிளாக் பண்ணி வச்சாலும், கூகுள்பேவில் பணம் அனுப்பி டார்ச்சர் பண்றாராம். பணத்தை திருப்பி அனுப்பி 'நோஸ்கட்' பண்ணினாலும் திருந்தலையாம். எப்படி இந்த மாதிரி ஐடியாவெல்லாம் கிடைக்குதோ...'' என்றாள்.
''அக்கா... 'லவ்டுடே' படம் பாக்கலையா. அதில, ஹீரோ இப்டித்தான் பண்ணுவாரு. ஒருவேளை அந்த படத்தை பாத்திட்டு தான் இப்படி பண்றாரோ என்னவோ?'' சிரித்து கொண்டே சொன்னாள் மித்ரா.
சாட்டை சுழலட்டும்...
''சரி விடுடி. புதுசா வந்திருக்கற ஆபீசரிடம், சிட்டி மக்கள் ரொம்ப எதிர்பார்க்கறாங்க. அதுக்கேற்ற மாதிரி, சிட்டியில எல்லா ஸ்டேஷன்களுக்கு ஒரு ரவுண்ட் அடிச்சு, எங்கே என்னென்ன பிரச்னை இருக்குன்னு 'அனலைஸ்' பண்ணிட்டு, களமிறங்க திட்டமாம்...''
''அதில ஒன்றாக, ஸ்டேஷன் ஆபீசர்களுளுக்கு, இரு வாரத்துக்கு ஒரு முறை, முடிந்த வரை ஒரு நாள் லீவு கொடுக்க உத்தரவு போட்டுருக்காராம். இதனால, பொங்கல் 'போனஸ்' கிடைச்ச மாதிரி எல்லாரும் சந்தோஷப்படறாங்க...''
''அடடே... பரவாயில்லீங்களே...'' ஆச்சரியப்பட்ட மித்ரா, ''அக்கா... பாத்திர பட்டறை ஸ்டேஷன் லிமிட்டில், பூசாரியை கொலை செஞ்சது யாருன்னு 'க்ளூ' கிடைக்காம, போலீசார் ரொம்பம் திணறிட்டு இருந்தாங்க. கொலையாளி கிடைச்சா, அதே கருப்பராயன் கோவிலில் 'கிடா' வெட்டுறோம்னு வேண்டியிருந்தாங்களாம்,''
''நாலு நாளைக்கு முன்னாடி., நல்லுார் ஸ்டேஷனில் ஒரு கேஸில் சிக்கிய அவன் தான், பூசாரியை கொன்றது தெரிஞ்சு, அந்த கேஸிலும் அரெஸ்ட் பண்ணிட்டாங்க... அதனால, 'கிடா' வெட்ட நாள் பார்த்துட்டு இருக்காங்க...'' என்றாள்.
''கடைசியில கருப்பராயன் தான் கண்டுபிடிச்சு கொடுத்தாரு போல...'' சொன்ன சித்ரா, ''கார்ப்ரேஷனில்
நடக்குற நிகழ்ச்சி கூட, சேதி சொல்ற ஆபீசருக்கு தெரியாதமா,'' என்றாள்.
''விவரமா சொல்லுங்க்கா...''
சேதி தெரியாதுங்க...
''அந்த ஆபீசில், துாய்மை, குடிநீர் பணியாளர்களுக்கு சீருடை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. இத பத்தி கேட்டதுக்கு, 'அப்டிங்களா... எனக்கு தெரியாதே'ன்னு சொல்றாரு. எத கேட்டாலும் தெரியாதுனு சொல்லறதுக்கா, அவர் அங்க இருக்காரு. எங்க பேனர் வைக்கலாம். எவ்வளவு கல்லா கட்டலாம்னு மட்டும் தான் கவனமா இருக்காரு. இத மேயரும், கமிஷனரும் கண்டுட்டா பரவாயில்லடி...''
-----''அக்கா... தி.மு.க., ஆட்சிக்கு வந்த பின்னாடி, ஏ.எம்.டி., வேலைகளுக்கு, டெண்டர் விட்டாங்க. அதுக்கு, கவுன்சிலர்கள் எதிர்ப்பு தெரிவிச்சதால, யூனியன் லெவலில், டெண்டர் நடக்கிறது. போன வருஷத்தோட, டெண்டர் விட்ட வேலைகளுக்கு, சம்பந்தபட்ட ஆபீசர் 'பில்' செட்டில் பண்ணாம இழுத்தடிக்கிறாராம்...'' என, வருவாய் துறை பக்கம் பேச்சை மாற்றினாள் மித்ரா.
''ஏன் இழுத்தடிக்கிறாராம்...''
''வேறென்ன... துட்டு தான்,'' என்ற மித்ரா, ''இதனால, கான்ட்ராக்டர்களுக்கு, பதில் சொல்ல முடியாம, பி.டி.ஓ.,ஸ் புலம்பறாங்களாம். ஆனா, அதே நேரத்தில, 'கமிஷன்' கொடுத்தவங்களுக்கு உடனே, 'பில் பாஸ்' பண்ணிடறாராம்,''
''கவனிக்காமல் இருந்தால், 'போட்டோ' கிளியரா இல்லை என்றெல்லாம் சப்பையான காரணங்களுக்காக, 'பில்' வழங்காமல் இழுத்தடிக்கிறார். அரசு அதிகாரிகள், ஓராண்டில் டிரான்ஸ்பர் ஆகும் போது, இவர் மட்டும், மூன்றரை ஆண்டாக, நங்கூரம் போட்டு, ஒரேயிடத்தில் இருப்பதாக, சக அதிகாரிகளே புகார் வசிக்கின்றனர். கலெக்டர் இனியாது, அந்த ஆபீசரின் 'பில்' விவகாரத்தை கவனித்தால் பரவாயில்லை...'' என மித்ரா சொன்ன போது, சித்ராவின் மொபைல் போன் சிணுங்கியது.
'ட்ரூ காலரில், 'சேகர்' என பெயர் வந்தததை பார்த்து, யோசித்தவாறே அட்டெண்ட் செய்த சித்ரா, ''சாரி... ராங் நம்பர்,'' எனக்கூறி, இணைப்பை துண்டித்தாள்.
''மித்து, கேட்கவே மறந்துட்டேன். இந்த வருஷம் பொங்கல் எப்படி இருந்துச்சு...''
''போன ரெண்டு வருஷத்தை விட இந்தாண்டு சூப்பர்க்கா... எங்க பாத்தாலும், விளையாட்டு போட்டி, தெருவில் மக்கள் ஒன்று கூடி பொங்கல் வைச்சு, செம கலர்புல்லா இருந்துச்சு...''
'டோக்கன்' மிஸ்ஸிங்
''இதேபோல, இந்த தடவ கார்ப்ரேஷன், நொய்யல் பண்பாட்டு அமைப்பு, ஜீவநதி நொய்யல் சங்கம் சார்பில், நொய்யல் கரையில், 3 ஆயிரம் பொங்கல் வைக்க ஏற்பாடு பண்ணியிருக்காங்க... அதுக்காக, 60 வார்டில், தலா 50 குடும்பங்களுக்கு புத்தாடை, பொங்கல் பானை மற்றும் பொங்கல் பொருள் கொடுத்தாங்க...''
''இதில, ஆளுங்கட்சியினர் கவுன்சிலர்களாக உள்ள வார்டுகளில், டோக்கன் அவர்களிடமே கொடுத்து பொருட்கள் வினியோகிச்சாங்க. மத்த கட்சி கவுன்சிலர் வார்டுகளில், ஆளும்கட்சி நிர்வாகிகளிடம் டோக்கன் கொடுத்திட்டாங்க. பொது விழாவில, எப்படி இப்படி பாரபட்சம் பார்க்கிறாங்கன்னு, மத்த கட்சிக்காரங்க புலம்புறாங்க. இதில் என்ன கூத்துனா, கட்சி மாறி வந்த கவுன்சிலர்களுக்கு கூட டோக்கன் தரலையாம்,'' என விளக்கினாள் மித்ரா.
''நொய்யல் கரையில் பொங்கல் திருவிழா துவக்க நிகழ்ச்சியில, விஐபி'ஸ் உட்கார்ந்திருந்த மேடைக்கு பக்கத்தில 'குடி'மகன்கள் சிலர் அலப்பறை செஞ்சிருக்காங்க. இதப்பார்த்த சிட்டி போலீஸ் ஆபீசர், பாதுகாப்பு பணிக்கு இன்சார்ஜா இருந்தவங்களை கூப்பிட்டு 'டோஸ்' விட்டு, 'பார்த்து கேர்புல்லா வாட்ச் பண்ணுங்க...'னு அட்வைஸ் செய்தாராம்,'', சித்ராவும் தன் பங்குக்கு, நொய்யல் கரை பொங்கல் பற்றி கூறினார்.
''அக்கா... பக்கத்துல இருக்கற பல்லடம் கடைவீதியில, சிலர் கரும்பு வியாபாரம் செஞ்சாங்க. இதப்பார்த்த ஆளும்கட்சிக்காரங்க, கடைய காலி பண்ண பிளான் போட்டாங்க. அவங்க பிரஷரால், கடைய காலி பண்ணுங்கன்னு, அதிகாரி சொல்லவே, கடுப்பான வியாபாரிகள், அவரை சரமாரியா திட்டிட்டாங்க. பாவம் அந்த அதிகாரி,''
''எய்தவன் இருக்க அம்பை நோவானேன்'னு சொல்ற பழமொழி இவருக்குத்தான் சரியா பொருந்தும் போல,'' என சித்ரா சொன்ன போது, அருகிலிருந்த ஒருவர், ''ஏம்மா, இந்த ஜெகதீஷ், அப்புறம் குமார் வந்தா மறக்காம எனக்கு போன் பண்ணச்சொல்லு...'' என போனில் சத்தமாக பேசி கொண்டிருந்தார்.
''அதே பகுதியில, அதிகாரிங்களோட பரிபூரண ஆசியால், மண் கடத்தல் ஜோரா நடக்குதுடி. குறிப்பா, வதம்பச்சேரி கிராமத்துல, பட்டா லேண்டுல, வண்டி வண்டியாக மண் கடத்தினதுல, பெரிய குளமே உருவாயிடுச்சுன்னா பாத்துக்கோ...''
''பப்ளிக் சிலர் புகார் செஞ்சதால, சம்பந்தப்பட்ட கிராம அதிகாரி 'அங்க வெறும் புல்தான் இருக்கு'னு சொல்லியிருக்காங்க. இவருக்கு ஒருபடி மேல, உயர் அதிகாரியோ, விசாரிக்கறோம்னு சப்பைக்கட்டு கட்டுகிறார்டி...'' சித்ரா கூறினாள்.
அப்போது, ''அக்கா, சொல்ல மறந்துட்டேன். 'மேகலாவும், சுகுணாவும்,' நேத்து உங்களை கேட்டாங்க...'' என்றாள் மித்ரா.
'கமிஷன்' ஜோர்...
''ஓகே... நான் போன் பண்றேன்னு சொல்லு...'' என்ற சித்ரா, பூங்காவினுள் சிலர் சுத்தம் செய்து கொண்டிருப்பதை பார்த்த அவள், ''அக்கா... கார்ப்ரேஷனில் பணியாற்றும் துாய்மை பணியாளர்களுக்கு, தீபாவளி, பொங்கலுக்கு இலவச சீருடை கொடுப்பாங்க. இதில, சிலர் மாற்றுப்பணி அடிப்படையில், அலுவலகப் பணியாளர்களாக உள்ளனர்,''
''துாய்மை பணியில் இல்லாத அவர்களுக்கும் சீருடை மற்றும் காலணி கொடுப்பதாக, கணக்கு எழுதி 'கணக்கு' பண்ணிக்கிறாங்க. ஆனா, அந்த பொருட்கள் எங்கே போகிறது என்பது யாருக்கும் தெரியவில்லை என்பதும் ஒரு கொடுமை...'' என்றாள் ஆவேசமாக.
''எத்தன சம்பளம் வாங்கினாலும், இப்படி, 'சைடில்' வருமானம் பார்த்தால் மட்டுமே அவங்களுக்கு துாக்கம் வரும் போல...'' என்ற மித்ரா, ''முதலாம் மண்டலத்தில், அதோட வி.ஐ.பி., வார்டில் மட்டும், வாரத்துக்கு ஒரு நாள் தவறாமல் குடிநீர் சப்ளையாகுதாம்,''
''ஆனா, அதே மண்டலத்திலுள்ள மத்த வார்டுகளுக்கு ரெண்டு வாரத்துக்கு ஒரு தடவ தான் வருதாம். இதப்பத்தி, போன வாரம் நடந்த மண்டல கூட்டத்தில, சில கவுன்சிலர்கள் புகார் கூறியும் எந்த மாற்றமும் இல்லையாம்...'' என்றாள்.
''ஓகே., மித்து, கெளம்பலாமா...'' என்ற சித்ரா எழுந்ததும், மித்ரா பின் தொடர்ந்தாள்.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!