ஒரு மனிதர் எல்லோருக்கும் நல்லவராக இந்த காலத்தில் இருக்கமுடியுமா?
இருக்கமுடியாது என்பதுதான் பலரது பதிலாக இருக்கும்
ஆனால் அப்படி ஒருவர் இருந்தார் அன்பையும் பாசத்தையும் மட்டுமே வெளிப்படுத்தியபடி இருந்த அவரது பெயர் கே.வி.சீனிவாசன் என்ற சீனா
சென்னை இந்து பத்திரிகையின் மூத்த புகைப்படக்கலைஞராக பணியாற்றியவர். கடந்த சில தினங்களுக்கு முன் அவருக்கு பிரியமான பார்த்தசாரதி கோவில் வைகுண்ட ஏகாதேசியை படம் எடுக்கும் நிகழ்வில் இருந்த போது ஏற்பட்ட திடீர் உடல் நலக்குறைவு காரணமாக நம்மைவிட்டு பிரிந்துவிட்ட மிக அருமையான மனிதர் அவர்.
பத்திரிகையாளர்கள் யாராவது திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயிலுக்கு தரிசனம் செய்ய விரும்பினால் அந்த கோயிலின் உயர்அதிகாரியையோ அல்லது ஊழியர்களையோ தேடுவது இல்லை மாறாக நண்பர் சீனிவாசனைத்தான் தேடுவர் அவரும் எத்தனை பேர் எப்போது எங்கு இருந்து வந்தாலும் சளைக்காமல் தரிசனம் செய்து வைப்பார்.
அவரது நட்பு வட்டத்தில் யாருக்காவது திருமணம் என்றால் அவர் மூலமாக வரும் பார்த்தசாரதி கோயில் மாலைகள்தான் முதல் ஆசீர்வாதமாக இருக்கும்.தான் சார்ந்த பத்திரிகைக்கு எந்த அளவிற்கு அர்ப்பணிப்புடன் இருந்தாரோ அதே போல பார்த்தசாரதி பெருமாள் மீதும் அளவற்ற பக்தி கொண்டிருந்தார்.அந்த கோயிலின் அழகை பல்வேறு கோணங்களில் அவர் படம் பிடித்தது பெரிய விஷயமல்ல நேர்த்தியான புகைப்படக்கலைஞரான அவருக்கு அது சிரமமுமல்ல ஆனால் தான் பார்த்து ரசித்ததை உலகமும் பார்க்கவேண்டும் என்பதற்காக புதிதாக அந்தக் கோவிலுக்கு வரும் புகைப்படக்கலைஞர்கள் யாராக இருந்தாலும்,‛ இங்கே இருந்து படம் எடுங்கள் அங்கே ஏறி படம் எடுங்கள்' என்று வழிகாட்டுவார் வந்தவர்கள் வேலை முடிந்ததும் அந்த புதியவர்களுக்கு காபி ,டீ வாங்கிக் கொடுத்து வழியனுப்புவார், அப்படி ஒரு அபூர்வ பண்பாளர் அவர்.
நிறைகுடம் ததும்பாது என்பது பிரதமர் முதல் முதல்வர் வரை யாருடைய நிகழ்விற்கு வந்தாலும் எவ்வித ஆர்ப்பாட்டமும் செய்யாமல் அமைதியாக இருந்து படம் எடுத்துச் செல்வார் மறுநாள் பத்திரிகையில் பார்த்தால் அவரது படம் தனித்துவமாக சிறப்பாக இருக்கும் பாராட்டினால் அவருக்கே உரிய அந்த புன்னகையுடன் பாராட்டை ஏற்றுக்கொள்வார்.
அந்த அவரது சிரிப்பும் புன்னகையும் மிகவும் அன்னியோன்மானது மனதிற்கு நெருக்கத்தை தரவல்லது நீண்ட வருடம் பார்த்து பழகியவர் போன்ற பாசத்தை ஏற்படுத்தும் சிரிப்பு கள்ளம் கபடமற்ற வெகுளித்தனமான சிரிப்பு அது
அவருக்கு மட்டுமேயான சிரிப்பு அது
அந்த சிரிப்பு கடந்த வைகுண்ட ஏகாதேசியன்று நின்று போனது
உண்மையில் அந்த சிரிப்பு நின்று போகவில்லை
மைலாப்பூர் சுடுகாட்டில் அவரது உடல் தகனம் செய்யப்படுவதற்கு முன்பாக , இறுதி அஞ்சலி செலுத்திய போது ‛வாங்க முருகராஜ் சவுக்கியமா' என்று சிரித்தபடி கேட்பது போலவே இருந்தது
அவரது அந்த புன்னகையை மேற்கொண்டு பார்க்க இயலாமல் கணகளில் நீர் திரையிட்டது
அவரது புகைப்படங்கள் மூலம் அவரை அறிந்த அவரது ஆயிரக்கணக்கான ரசிகர்கள் வாசகர்கள் பலர் அவர் இறந்ததை இப்போதும் அறிந்து அதிர்ச்சி தெரிவித்து வருகின்றனர்
அவர்கள் எல்லாம் அவருக்கு மலர் அஞ்சலி செலுத்துவதற்காக இன்று (07/01/2023)சனிக்கிழமை மாலை 6 மணிக்கு திருவல்லிக்கேணி டிபி கோயில் இரண்டாவது சந்தில் உள்ள என்கேடி முத்து ஹாலில் அஞ்சலி நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்துள்ளனர்.
இறையோடு கலந்துவிட்ட அந்த இனிய ஆத்மாவின் ஆசி பெற விரும்புபவர்கள் வந்து கலந்துகொள்ளலாம்.
-எல்.முருகராஜ்
புகைப்பட கலைஞரின் அருமையை ஒரு புகைப்படக் கலைஞன் மட்டுமே அறிய முடியும், மேலும் வேறு ஒரு பத்திரிக்கையில் பணியாற்றினாலும் வேறுபட்டு பாராமல் அவர் பணியாற்றிய பத்திரிக்கையை விட தினமலரில் மிக அருமையாக அவரது சேவையை வாசகர்களுக்கு மட்டும் இல்லை அன்னாரது குடும்பத்துக்கும் அவரை நோக்கி சென்ற ஆன்மீக பக்தர்களுக்கு ஒரு பொக்கிஷமாக தந்த ஒரு முருகராஜ் ஐயா அவர்களுக்கு நன்றி, இதில் எல்லாளரும் பாராட்டப்படவேண்டிய முக்கிய செய்தி, ஒரு கலைஞன் தான் பயின்ற , கற்ற , கலையை வைத்து மேலும் மேலும் பணம், பொருள் , பெயர் ஈட்டவே என்று வாழ்ந்து வரும் இந்த நிலையிலும் தன்னை முழுவதுமாக இறைவனுக்கே அர்ப்பணித்து, வரும் பத்திரிக்கை பக்தர்களுக்காக ஒரு அடியாவராக வாழ்ந்த ஒரு மகான் என்பதை மிக அழகாக பதிவு செய்ததற்கு பாராட்டுக்கள், பிறந்தார், வளர்ந்தா, வாழ்ந்தார் .. இறைவனடி சேர்ந்தார் என்பதே வாழ்க்கை இருந்தாலும் அதை மிக அழகாக அனுபவித்து ஒவ்வொரு நிலைகளிலும் திரு ஸ்ரீனிவாசன் ஐயா அவர்களின் வாழ்வியலை மிக அழகாக வெளிபப்டுத்தியதற்கு மிக்க நன்றி, வந்தே மாதரம்