அது ஒரு ஞாயிற்றுக் கிழமை
வானமே கூரையாகக் கொண்ட அமைந்தகரை வாழ் நடைபாதைவாசிகள் யாரையோ எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்
பசியால் குழிவிழுந்து பஞ்சடைத்துப் போன அவர்களின் கண்களில் திடீர் பிரகாசம்
‛கூட்டு பொரியல்காரம்மா' வர்ராங்க.. என்று ஒருவர் குரல் கொடுக்க ஆங்காங்கே சிதறியிருந்தவர்கள் ஒன்று சேர்கின்றனர்.
இருசக்கர வாகனத்தில் வந்திறங்கும் பெண்ணின் இரண்டு கைகளிலும் இரண்டு பைகள், அந்த பைகள் நிறைய உணவு பொட்டலங்கள்.
ஐயா எப்படி இருக்கீங்க, அம்மா நல்லாயிருக்கீங்களா, அண்ணே இப்ப கால்வலி பராவாயில்லையா என்று ஒவ்வொருவரையும் அன்போது விசாரித்தபடி தான் கொண்டுவந்திருந்த உணவு பொட்டலங்களையும் தண்ணீர் பாட்டிலையும் வழங்குகிறார்.பெரிய கும்பிடுபோட்டு அவரிடம் இருந்து உணவு பொட்டலங்களை வாங்கிக்கொள்ளும் பாவப்பட்ட மக்கள் பரபரவென பொட்டலங்களை பிரித்து சாப்பிடத்துவங்குகின்றனர்.
பொட்டலத்தின் உள்ளே சாம்பார் சாதம்,அப்பளம்,ஓரு கூட்டு, ஒரு பொரியல்,சர்க்கரை பொங்கல்,வடை என்று நிறைந்திருக்கிறது.
அவர்கள் திருப்தியாக சாப்பிடுவதைப் பார்த்துவிட்டு அடுத்த இடத்திற்கு விரைகிறார் அங்கும் இதே போல பசிப்பிணி நீக்கியபிறகு அடுத்த இடம் என்று இப்படியே ஐந்து கிலோமீட்டர் சுற்றளவிற்கு சென்றுவிட்டு பைகள் காலியான பிறகு வீட்டிற்கு திரும்புகிறார்.
யார் இவர்?
சென்னை வில்லிவாக்கத்தைச் சேர்ந்தவர் தேவிசித்ரா,இல்லத்தரசி.கணவர் விஜயகுமார் தனியார் நிறுவனத்தில் பணிபுரிகிறார்.
சிறுவயது முதலே அவரது மனது ஏழை எளியவர்களுக்கு இரங்கக்கூடியது ஒட்டலில் சாப்பிடப்போனால் போகும்போதே வாசலில் எத்தனை பேர் கையேந்தியபடி உட்கார்ந்திருக்கின்றனர் என்பதை எண்ணிப்பார்த்துவிட்டு உள்ளே தான் என்ன சாப்பிட்டாரோ அதையே பார்சலாக வாங்கிவந்து வெளியில் இருப்பவர்களுக்கு கொடுக்கக்கூடியவர்.கோவிட் நேரத்தில் தனது குடியிருப்பு பகுதியைச் சுற்றியுள்ளவர்களுக்கு ஒட்டலில் இருந்து உணவு பொட்டலங்களை வாங்கிவந்து கொடுத்தார், வணிக நோக்கோடு தயார் செய்யப்பட்ட அந்த உணவு அவர்களின் வயிற்றை நிரப்பியதே தவிர மனதை நிரப்பவில்லை என்பதை புரிந்து கொண்டு தாமே தயார் செய்து கொடுப்பது என்று முடிவு செய்தார்.
அதன்படி காலை நான்கு மணிக்கு எழுந்து ஐம்பது பேர் சாப்பிடக்கூடிய அளவிற்கு உணவு தயார் செய்து அந்த உணவுடன் ஒரு கூட்டோ பொரியலோ சேர்த்து பொட்டலம் போட்டு சுடச்சுட கொண்டு போய் கொடுத்தார் ருசியான உணவை திருப்தியாக சாப்பிட்ட சந்தோஷம் பெற்றவர்கள் கண்களில் தெரிந்தது.இவர் தரும் சாப்பாட்டில் எப்படியும் ஒரு கூட்டும் பொரியலும் இருக்கும் என்பதால் இவரது பெயரே கூட்டு பொரியல்காரம்மாவாகிவிட்டது.
வாரத்தில் ஒரு நாள் ஞாயிற்றுக்கிழமைதான் கணவருக்கு விடுமுறை, எப்போது விடுமுறை வரும் கணவரோடு பீச்,பார்க்,சினிமா என்று சுற்றுவோம் என்று காத்திருக்கும் மணைவிகளுக்கு மத்தியில் எப்போது ஞாயிற்றுக்கிழமை வரும் கணவரோடு போய் உணவளித்துவிட்டு வருவோம் என்று காத்திருப்பார் தேவி சித்ரா.
இந்த வாரத்தோடு 132 வது வாரத்தை வெற்றிகரமாக கடந்துவிட்டார்.ஞாயிற்றுக்கிழமை என்றால் உறவுகள் நட்புகள் வீட்டு விசேஷத்தைக்கூட தள்ளிவைத்துவிட்டு அன்னதான விஷயத்திற்குதான் முன்னுரிமை கொடுத்துவருகிறார்.அமாவசை போன்ற விசேஷ நாட்களில் வடை,பாயசம்,சர்க்கரை பொங்கல் என்று விசேஷ உணவு வழங்குவார்.
கொஞ்சம் காசு கையில் வந்தால் போதும் ஐம்பது போர்வையை வாங்கிக் கொண்டு நடுஇரவில் வண்டியில் சென்று யாரெல்லாம் போர்வை இல்லாமல் துாங்குகிறார்களோ அவர்களுக்கு, அவர்களுக்கே தெரியாமல் போர்த்திவிட்டு வந்துவிடுவார் இதே போல வேட்டி சேலை தானமும் உண்டு.
பத்துக்கு பத்தடி கொண்ட எங்கள் வாடகை வீட்டிற்குள் இருந்து கொண்டு அப்பா ஈசன்,உறவுக்கார குழந்தைகள் மணிமாறன்,துளசி ஆகியோர் உதவியுடன் எங்களது செலவுகளை எல்லாம் சுருக்கிக்கொண்டு இந்த விஷயத்தை சந்தோஷமாக செய்துவருகிறேன், எல்லாவற்றுக்கும் கணவர்தான் முக்கிய காரணம்,நாள்தோறும் உணவு வழங்க வேண்டும் என்பது நோக்கம் இறையருள் கூடிவரவேண்டும் என்று சொல்லும் தேவி சித்ராவின் எண்ணம் ஈடேற உங்கள் ஆசிகள் துணை நிற்கட்டும், அவரது எண்கள்:9841605054,9551371908.-எல்.முருகராஜ்
வஞ்சம், துரோகம்,பொறாமை,போட்டி நிறைந்த இந்த உலகத்தில் இது போன்ற மனிதர்களை பார்க்கும்போது மனம் சற்று ஆறுதல் அடைகிறது...