Load Image
Advertisement

நீதிபதிகள் நியமன சர்ச்சை முடிவு காண்பது முக்கியம்

நம் நாட்டில் உச்ச நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்றங்களுக்கான நீதிபதிகள் நியமனம், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தலைமையிலான கொலீஜியம் அமைப்பின் பரிந்துரை அடிப்படையில் நடைபெற்று வருகிறது. கொலீஜியத்தில் இடம் பெற்றுள்ள நீதிபதிகள் குழு, நீதிபதிகள் நியமனம் மற்றும் இடமாற்றம் தொடர்பான பரிந்துரைகளை மத்திய அரசுக்கு அனுப்பும். அந்த பரிந்துரை அடிப்படையில், மத்திய சட்ட அமைச்சகம், ஜனாதிபதியின் ஒப்புதலை பெற்று, அதற்கான அறிவிப்பை வெளியிடும்.

'கொலீஜியம் பரிந்துரைக்கும் பட்டியலை ஏற்று, மூன்று அல்லது நான்கு வாரங்களுக்குள் நீதிபதிகள் நியமிக்கப்பட வேண்டும். அதேநேரத்தில், கொலீஜியம் பரிந்துரைத்த பெயர்களில் அரசுக்கு மாற்றுக் கருத்து இருந்தால், அதற்கான காரணத்தை குறிப்பிட்டு, உடனடியாக பதில் அளிக்க வேண்டும்' என, கடந்த ஆண்டு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இந்நிலையில், நீதிபதிகள் நியமன விவகாரத்தில், மத்திய அரசு காலம் தாழ்த்தி வருவது தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரித்த உச்ச நீதிமன்ற அமர்வு, 'கொலீஜியம் பரிந்துரைத்த சில பெயர்கள், ஒன்றரை ஆண்டுகளாக நிலுவையில் உள்ளன. இந்த விஷயத்தில், மத்திய அரசின் கால தாமதம் எல்லை மீறிச் செல்கிறது. இதுதொடர்பாக, மத்திய அரசுக்கு அட்டர்னி ஜெனரலும், சொலிசிட்டர் ஜெனரலும் ஆலோசனை வழங்க வேண்டும்' என தெரிவித்துள்ளது.

மேலும், 'தேசிய நீதித்துறை நியமன ஆணையத்தை அமல்படுத்த உச்ச நீதிமன்றம் அனுமதிக்காததால், கோப்புகள் மீது அரசு நடவடிக்கை எடுக்கவில்லையா' என்றும் கேள்வி எழுப்பியிருக்கிறது.

இதற்கிடையில், கருத்தரங்கம் ஒன்றில் பேசிய மத்திய சட்ட அமைச்சர் கிரண் ரிஜிஜு, 'கொலீஜியம் அமைப்பில் உள்ள நீதிபதிகள், தங்களுக்கு வேண்டிய வழக்கறிஞர்களையே, நீதிபதிகள் பதவிக்கு பரிந்துரைக்கின்றனர். தங்களுக்கு தெரிந்த நீதிபதிகளையே, பதவி உயர்வுக்கும் பரிந்துரைக்கின்றனர். இந்த நடைமுறை சரியானதாக இல்லை. தகுதியானவர்கள் நீதிபதி பதவிக்கு பரிந்துரைக்கப்படுவதில்லை' என அதிருப்தி தெரிவித்திருந்தார்.

இது, மத்திய அரசுக்கும், உச்ச நீதிமன்றத்திற்கும் இடையே விரும்பத்தகாத கருத்துப் பரிமாற்றங்களை உருவாக்கியுள்ளது. அரசியல் சட்டப்பிரிவு, 124 (2)ன் படி, 'உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தவிர அனைத்து நீதிபதிகளையும், அவருடன் கலந்தாலோசித்த பிறகே, ஜனாதிபதி நியமிக்க வேண்டும். இந்த நியமன நடைமுறை அரசு நிர்வாகத்திற்கு உரியது' என, அரசியல் சட்டத்தை உருவாக்கியவர்கள் தெளிவாக கூறியுள்ளனர். 'இந்த நடைமுறையை மாற்றுவது சரியாக இருக்காது' எனவும் தெரிவித்துள்ளனர்.

இந்தச் சூழ்நிலையில் தான், கொலீஜியம் முறைக்கு எதிராக மிகப்பெரிய விமர்சனம் எழுந்து உள்ளது. இந்த விமர்சனமானது, அரசியல் சட்டத்தின் செயல்பாட்டையே கேள்விக்கு உள்ளாக்கி இருப்பதோடு, நீதிபதிகள் நியமனம் தொடர்பாக பல சந்தேகங்களையும் எழுப்பியுள்ளது.

மேலும், நீதிபதியாக பரிந்துரைக்கப்படுபவர்களில் சிலரின் பெயர்கள் ஏன் நிராகரிக்கப்படுகின்றன, ஏன் ஏற்கப்படுகின்றன என்பதற்கான காரணமும், அரசால் பகிரங்கமாக தெரிவிக்கப்படுவதில்லை. எனவே, இந்த நியமன விவகாரத்தில் மாற்றம் கொண்டு வர வேண்டியது அவசியமே.

உச்ச நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்றங்களுக்கான நீதிபதிகள் நியமனத்தில், வெளிப்படை தன்மை இருக்க வேண்டும் என்பதில், யாருக்கும் மாற்றுக் கருத்து இருக்க முடியாது. எனவே, அதற்கேற்ற வகையில், சில சீர்திருத்தங்களை ஏற்படுத்த அரசும், நீதித்துறையும் முன் வரவேண்டும். இந்த விஷயத்தில், இரு தரப்பினரும் கலந்து ஆலோசனை நடத்தி ஒரு சரியான தீர்வை காண வேண்டும்.

அப்போது தான், நீதிபதிகள் நியமனம் விரைவாக நடைபெறும். அப்படி நடைபெற்றால் தான், நீதிமன்றங்களில் வழக்குகள் தேங்குவதும் முடிவுக்கு வரும். தற்போதைய குழப்பமான சூழ்நிலை தொடர அனுமதிப்பது சரியானதல்ல. அரசுக்கும், நீதித் துறைக்கும் இடையே கருத்து மோதல்கள் நீடிப்பதும் சரியல்ல.



வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
+2 மாணவர்களே!
என்ன படித்தால் சிறந்த எதிர்காலம்?
தினமலர் வழிகாட்டி 2023 அனுமதி இலவசம்

Send Hi to 91505 74441

திருப்போரூர் திருவிழா - இது சொந்தவீடு வாங்கும் பெருவிழா!

Advertisement
 
Advertisement