Load Image
Advertisement

ஆளுங்கட்சியில், அணி மாறி 'கலாட்டா' 'டாஸ்மாக் பாரில்' மூனு நம்பர் லாட்டரி ஓயாதா?

சித்ராவின் வீட்டுக்கு சென்ற மித்ரா, சோபாவில் அமர்ந்தவாறே, செய்தித்தாளை எடுத்து, படிக்க துவங்கினாள்.'கள ஆய்வுப்பணியில் கலெக்டர்' என்ற தலைப்பு கண்ணில் தென்பட, ''நம்ம கலெக்டரும், புதுசா வந்திருக்க சப் - கலெக்டரும், இப்பெல்லாம் நிறைய 'பீல்டு இன்ஸ்பெக்ஷன்' போறாங்க அக்கா. குறிப்பா சொல்லோணும்னா, கிராமங்களுக்கு போய் அங்க நடக்குற வேலைகளை பார்க்குறாங்க. நிறை, குறைகள சுட்டி காண்பிக்கிறாங்க,'' ஆரம்பித்தாள் மித்ரா.''அட, பரவாயில்லையே...'' என பாராட்டிய சித்ரா, ''போனவாரம், தெக்கலுாரில், கலெக்டரும், சப்-கலெக்டரும் இன்ஸ்பெக் ஷன் பண்ணாங்க. ஆனா, இதபத்தி பி.ஆர்.ஓ., ஆபீசில் இருந்து நிருபர்களுக்கு சொல்லவேயில்லையாம். ஆனா, சேதி சொல்ற மினிஸ்டர் எங்காவது போனா, ஆயிரத்தெட்டு போன் பண்ணி கூப்பிடறாங்களாம்...'' என்றாள்.''அமைச்சருக்கு வேல பார்த்தா, அரசாங்கத்துக்கே வேல பார்த்த மாதிரின்னு நெனச்சுட்டாங்க போல…,'' எனக்கூறி சிரித்தாள் மித்ரா.பாரபட்சம் எதற்கு?''ஜாதி, மதம் இல்லைன்னு பேசிட்டு இருந்தாலும், கலெக்டர் ஆபீஸ்ல நிறைய பார்க்கிறாங்களாம். அதுவும் ரீசன்டா ஜாய்ன் பண்ண அதிகாரியோட பி.ஏ., ஒருத்தரு, ரொம்பவே பாரபட்சம் பார்க்கிறாராம். இதப்பத்தி சி.எம்., வரைக்கும் புகார் போயிருச்சாம்,'' என்றாள் சித்ரா.''இதையெல்லாம் கண்டிப்பா கலெக்டரு கவனிப்பாருன்னு நினைக்கிறேன்'' என, நம்பிக்கையுடன் சொன்ன சித்ரா, ''பாதிரியார் சாவுல மர்மம் இருக்குதாம் மித்து'' என,'சட்'டென பேச்சை மாற்றினாள்.''என்னக்கா சொல்றீங்க…'' என, அதிர்ச்சியானாள் மித்ரா.''அவிநாசிக்கு பக்கமிருக்கிற தாசம்பாளையம் கிராமத்துல ஒரு சர்ச்ல போதகரா இருந்த ஒருத்தரு போனவாரம் திடீர்ன்னு இறந்துட்டாரு. அவரோட சபைல, 'பிஷப் ரேங்க்'ல இருந்தவராம்; இது, ரொம்ப பெரிய போஸ்டிங்ன்னு சொல்றாங்க...''''அவரு சேர்ல இருந்து கீழே விழுந்து இறந்துட்டார்ன்னு தான், போலீஸ்ல எப்.ஐ.ஆர்., போட்டிருக்காங்க. ஆனா, அவரோட உச்சந்தலையில பெரிய காயம் இருந்ததாவும், அவரோட சாவுல சந்தேகம் இருக்குண்ணும், போதகர்கள் சங்கத்தை சேர்ந்தவங்க சொல்றாங்க. 'போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட்'க்காக காத்துட்டு இருக்காங்க. அது வந்ததுக்கு அப்புறம் தான், பிரச்னை வில்லங்கமாக மாறப் போகுது,'' என மர்மம் விலக்கினாள் மித்ரா.மெத்தனம் வேண்டாமே!''கையும் களவுமா புடிச்சு கொடுத்தும், கோட்டை விட்டுட்டாங்களேன்னு, டூரிஸ்ட் கார் ஓட்ற டிரைவர்ங்க புலம்பறாங்களாம்,'' என வேறு மேட்டருக்கு தாவிய சித்ரா தொடர்ந்தாள்.''நிறைய பேரு சொந்த வண்டிகள வாடகை வண்டியா ஓட்டி சம்பாதிக்கிறாங்க. அதனால, எங்க பொழப்பு போகுதுன்னு, 'டி-போர்டு' கார் டிரைவர்ங்க, தொடர்ச்சியா புகார் சொல்லிட்டே இருக்காங்க. சம்மந்தப்பட்ட அதிகாரிகளும் கண்டுக்கவே இல்லையாம்,''''போன வாரம், வாடகைக்கு ஓடிட்டு இருந்த கேரள மாநில ரெஜிஸ்ட்ரேஷன் நம்பரோட ஒரு காரை பிடிச்சு, நார்த் ஆர்.டி.ஓ., ஆபீஸ்ல ஒப்படைச்சிருக்காங்க. அங்கிருந்த ஒரு அலுவலர், கார் சாவியை வாங்கி வைச்சுட்டு, கண்டிப்பா நடவடிக்கை எடுக்கிறோம்; 'பைன்' போடறோம்ன்னு சொன்னாராம்''''அத நம்பி, கார் டிரைவர்ங்க திரும்பி வந்துட்டாங்களாம். அடுத்த ஒன்-ஹவரில் பார்த்தப்போ, அந்தக்கார் அங்க இல்லையாம். பெரிய இடத்துல இருந்து வந்த பிரஷர்ன்னால தான், அதிகாரிங்க காரை விட்டுட்டாங்கன்னு டிரைவர்ங்க சொல்றாங்க,'' என்றாள் சித்ரா.''ம்ம்ம்... என்னத்த சொல்ல,'' என, சலித்துக் கொண்ட மித்ரா, ''ஆர்.டி.ஓ., ஆபீஸ்ல ரிஜிஸ்ட்ரேஷன், டிரைவிங் லைசென்ஸ் எல்லாம், 'ஸ்மார்ட் கார்டு'ல தர்றாங்க. சவுத் ஆபீஸ்ல 10 நாளா, 'ஸ்மார்ட் கார்டு' தர்ற வேலை நடக்கிறதே இல்லையாம். கேட்டா, 'கார்டு, ஸ்டாக் இல்ல; தீர்ந்து போச்சு'ன்னு சொல்றாங்களாம்; இதனால, நிறைய பேரு காத்திருக்காங்களாம்,'' என, புலம்பினாள் மித்ரா.''இதே மாதிரி தான், போயம்பாளையம், பிச்சம்பாளையத்துல, தனியார் மொபைல் போன் நெட்வொர்க் கம்பெனிக்காரங்க, தனியாருக்கு சொந்தமான இடங்கள், கார்ப்ரேஷன் ரோடுகளை கன்னாபின்னான்னு தோண்டி, 'பைபர் கேபிள்' பதிக்கிறாங்க...''''இது சம்மந்தம்மா, கார்ப்ரேஷன் அதிகாரிங்க கிட்ட கேட்டா, 'கேபிள் பதிக்க யாரும் அனுமதி தரலைன்னு சொல்ல, 'ரோட்டை சேதப்படுத்தறாங்க; நடவடிக்கை எடுங்க'ன்னு, பெரிய போலீஸ் அதிகாரிகிட்ட புகார் கொடுத்திருக்காங்க. 'சம்மந்தப்பட்ட போலீஸ் ஸ்டேஷன்ல போய் புகார் கொடுங்க,'ன்னு, மடை மாத்தி விட்டுட்டாராம்,''''இது ஒரு பக்கம் இருந்தாலும், 14,15 வயசு பசங்கள வைச்சு கேபிள் பதிக்கிற வேலைய செஞ்சிட்டு இருந்திருக்காங்க. உடனே, லேபர் டிபார்ட்மென்ட் ஆபீசர்களுக்கு சொல்லி, 'ஆக்ஷன்' எடுக்க வச்சிட்டாங்களாம்,''அச்சத்தை போக்கலாமே!''கரெக்ட்டா தான் பண்ணிருக்காங்க,'' என்ற சித்ரா, ''இரு மித்து காபி கலக்கி எடுத்து வர்றேன்'' என்றவாறு சமையலறைக்கு சென்றாள்.அப்போது, டிவியை 'ஆன்' செய்தாள் மித்ரா; 'பல்லடத்தில் சிறுத்தை பீதி' என்ற செய்தி ஒளிபரப்பானது. அடுத்த சில நிமிடங்களில், காபியும், பிஸ்கட்டும் எடுத்து வந்து மேஜை மீது வைத்தாள் சித்ரா.''பல்லடம் பக்கத்துல கரடிவாவி கிராமத்தில சிறுத்தை நடமாடியதா, பாரஸ்ட் டிபார்ட்மெண்டுக்கு மக்கள் தகவல் சொன்னாங்க. ஆய்வு செஞ்ச அதிகாரிங்க, அது நாயா இருக்கும்னு சொல்லிட்டு போக, மறுநாளே ரெண்டு ஆடுங்க செத்துப்போச்சு,''''கேமரா வச்சு கண்காணிக்கிறதா சொன்ன பாரஸ்ட் அதிகாரிங்க, 'கேமராவுக்கு பாதுகாப்பில்லை'ன்னு சொல்லிட்டு போயிட்டாங்களாம். ஊருக்குள்ள வந்த விலங்கு எதுன்னு தெரியாம மக்கள் ரொம்பவே பீதியில இருக்காங்க'' என்றாள் சித்ரா.''ரெண்டு நாளைக்கு முன்னாடி தான் பாரஸ்ட் மினிஸ்டர் அந்த ஊருக்கு வந்தாரே. அவர்கிட்ட இந்த விஷயத்தை சொல்லியிருக்கலாம்,'' என யோசனை சொன்னாள் மித்ரா.''அங்க மட்டுமில்ல மித்து. நம்ம 'டிஸ்ட்ரிக்ட்'ல நிறைய இடங்கள் வன விலங்குகளால மக்களுக்கும், மக்களால விலங்குகளுக்கும் பாதிப்பு இருந்துட்டு தான் இருக்கு. இதபத்தியெல்லாம் பாரஸ்ட் மினிஸ்டர் கவனத்துக்கு யாரும் கொண்டு போன மாதிரியே தெரியல; மனித - விலங்கு மோதல் மாதிரி எதுவும் பெரிசா நடந்ததுக்கு அப்புறம் தான், துாக்கத்தில் இருந்து விழிப்பாங்க போல,'' என சரியாக கணித்தாள் சித்ரா.''அதே ஊர்ல, என்.ஜி.ஆர்., ரோட்ல போக்குவரத்துக்கு இடையூறா நின்னுட்டு இருந்த சில வண்டிகள முனிசிபாலிட்டி அதிகாரிங்க எடுத்துட்டு போனாங்க. ஆனா, கொஞ்சம் வண்டிகள பத்திரமா கோவில்ல இறக்கி வச்சுட்டாங்கன்னு 'பப்ளிக்' பேசிக்கறாங்க. எல்லாம் அந்த 'விநாயகருக்கே' வெளிச்சம்,'' என, தனக்கு தெரிந்த விஷயத்தையும் சொன்னாள் மித்ரா.சூதாட்டம் தடுக்கலாமே!''லாட்டரி அடிக்கும்ன்னு நம்பி நிறைய பேரு பணத்தை விடறாங்களாம் மித்து. சிட்டியை தொட்ட மாதிரி அவுட்டர்ல இருக்க டாஸ்மாக் பார்களில் ஒரு நம்பர், மூனு நம்பர் லாட்டரி சூதாட்டம் பட்டய கெளப்புதாம். பார்ல இருக்கற டேபிள்ல ரவுண்டு கட்டி உட்கார்ந்து, சூதாட்டம் நடக்குறதா, 'பார்' க்காரங்களே சொல்றாங்கன்னா பார்த்துக்கோயேன்,'' என்றாள் மித்ரா.''எப்படியாச்சும் பணம் சம்பாதிக்கணும்ன்னு தான் பார்க்கிறாங்களே தவிர, இப்படி தான் சம்பாதிக்கணும்ன்னு வரைமுறை இல்லாம போச்சு. இதையெல்லாம் கண்டுக்க வேண்டிய போலீசும், 'வாங்கறத' வாங்கிக்கிட்டு, கமுக்கமா இருக்காங்க...''என்றாள் சித்ரா.அரசியல்ல சகஜமப்பா!''தி.மு.க.,வுல, உதயநிதி கை ஓங்கிட்டு இருக்கறதால, நிறைய பேரு அவரோட ஆதரவாளரா மாறிட்டு இருக்காங்க்கா...'' என, அரசியல் மேட்டருக்கு தாவினாள் மித்ரா.''அவரோட பர்த்டே அன்னைக்கு மாவட்டத்துல இருக்கற முக்கிய நிர்வாகிங்க, அவருக்கு வாழ்த்து சொல்றதுக்காக சென்னைக்கே போய்ட்டாங்க. இதனால, யாரை வைச்சு நிகழ்ச்சி நடத்தறதுன்னு தெரியாம, லோக்கல் நிர்வாகிகள், கையை பிசைஞ்சிட்டு இருந்தப்போ, மா.செ.,வின் மகனை வைத்து கொண்டாடலாம்ன்னு முடிவு பண்ணி, அவர கூப்பிட்டாங்க...''''அவரோ, ஒன்றரை மணி நேரம் கழிச்சு வந்து, இனிப்பு கொடுத்து, நிகழ்ச்சியை நடத்தி வச்சிருக்காரு. 'நாங்கெல்லாம் கட்சிக்காக இத்தனை வருஷம் உழைச்சு என்ன பிரயோஜனம்; இப்படியெல்லாம் அரசியல் பண்ணாங்கன்னா, தாங்காது'ன்னு அங்க இருந்த சீனியர் கட்சிக்காரங்க புலம்பி தள்ளிட்டாங்களாம்,'' என்றாள் மித்ரா.''எல்லாப்பக்கமும் நிலைமை இப்டித்தான் இருக்குது. அக்கா... பல்லடத்தில, ஆயிரத்து ஐநுாறு ரூபா லஞ்சம் வாங்கி கைதான லேடி, எப்பவும் பண விஷயத்துல கறாராம். பல தடவை அதிகாரிகள் எச்சரித்தும், மாத்திக்கலை. இப்ப 'கம்பி' எண்றாங்க...''''உண்மைதாங்கா. அங்க, மட்டுமில்ல. மாவட்டத்துல பல இடங்களில், பல அதிகாரிங்க இன்னமும் வாங்கிட்டு தான் இருக்காங்க. மக்களும் சீக்கிரமா வேலை ஆகோணும்னு கண்ணை மூடிட்டு குடுத்துட்டுத்தான்இருக்காங்க...''''திருடனாய் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாதுங்கற சினிமா பாடல் எவ்ளோ துாரம் உண்மைன்னுபாரு மித்து,'' சொன்ன சித்ராவிடம், ''சரிங்க்கா டைம் ஆகுது; நான் கிளம்பறேன்,'' எனக்கூறி புறப்பட்டாள் மித்ரா.



வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
+2 மாணவர்களே!
என்ன படித்தால் சிறந்த எதிர்காலம்?
தினமலர் வழிகாட்டி 2023 அனுமதி இலவசம்

Send Hi to 91505 74441

திருப்போரூர் திருவிழா - இது சொந்தவீடு வாங்கும் பெருவிழா!

Advertisement
Advertisement