பல சகாப்தங்களாக மனித குலத்திற்கு கலங்கரை விளக்கமாக ஒளிர்ந்து கொண்டிருக்கும் இந்தியாவின் மிகச் சிறப்பான செழுமையான நாகரிகம் மற்றும் கலாசார வரலாறு, ஒருபோதும் விஞ்சப்பட முடியாதது.
தெற்கில் இருந்து வடக்கிற்கும், கிழக்கில் இருந்து மேற்கிற்கும் பரந்து விரிந்திருக்கும் இந்தியாவின் கலாசார நாகரிக சாரம், ஆழமான தத்துவ மற்றும் ஆன்மிக அடித்தளங்களில் வேர் விட்டுள்ளது. சில நேரங்களில் தவறுதலாக, இந்தியாவின் வடக்கும், தெற்கும் மாறுபட்ட இரு நீரோட்டங்களாக கருதப்படுகின்றன. இருப்பினும் உண்மை என்னவெனில், இரு பிராந்தியங்களும் ஆன்மிகம் மற்றும் தத்துவத்தில் செழுமையான தொடர்புகளை தொடர்ந்து பகிர்ந்து கொண்டுள்ளன.
இந்த இரு பிராந்தியங்களிலும் வழிபடப்படுகிற தெய்வங்களின் வழியாக, இதை காண முடியும். இது, பல ஆயிரம் ஆண்டுகளாக, ஆழமான வரலாற்று தொடர்புகளின் காட்சியாக நிலைத்திருக்கிறது. முதல் நோக்கில், இரு பிராந்தியங்களுக்கு இடையே மொழிகளில் வேறுபாடு இருப்பதை காணலாம். தென் மாநிலங்களில் தமிழ் தவிர, பல மொழிகள் பேசப்படுகின்றன. வட மாநிலங்களிலும் கூட ஹிந்தி தவிர, பல மொழிகள் பேசப்படுகின்றன. ஆனால், அவை ஒவ்வொன்றும் ஒரே மாதிரியான கலாசார, ஆன்மிக, தத்துவார்த்த பாரம்பரியத்தை பகிர்கின்றன.
தமிழகத்திற்கும், உ.பி., மாநிலம் வாரணாசிக்கும் இடையேயான பிணைப்பு, இந்த உறவின் அடையாளமாக இருக்கிறது.பல ஆயிரம் ஆண்டுகளாக பரவியுள்ள வளமான அறிவு மற்றும் ஹிந்து நாகரிக வரலாற்றின் செழுமை, தமிழர்கள் மற்றும் ஹிந்து சமயத்தின் புனிதமான கோவில்களில் ஒன்றான காசி விஸ்வநாதர் ஆலயம் இடையேயான தொடர்பாக காலந்தோறும் நீடிக்கிறது. இந்த புனித நகரில் ஞானம், தத்துவம், கலாசாரம், கடவுள் வழிபாடு, இலக்கியம், இந்திய கலைகள் மற்றும் கைவினைகள் மலர்ந்துள்ளன. மறுபக்கம், தமிழகம் என்பது கலாசாரம், கலைகள், கைவினைகள், இலக்கியம் ஆகியவற்றின் தொட்டிலாக விளங்குகிறது.
தேசிய கல்வி கொள்கை
புவியியல் ரீதியாக தூரத்தில் இருந்தாலும், இந்திய கலாசாரத்தின் இந்த இரு வெளிப்பாடுகளும் பல நுாற்றாண்டுகளாக, ஆழமான துடிப்புமிக்க இணைப்புகளை கொண்டிருந்தன என்ற, உண்மை மிகவும் முக்கியம். கடந்த 2021ல் மகாகவி சுப்பிரமணிய பாரதியின் நுாற்றாண்டு நினைவு நாள் நிகழ்ச்சியின் போது, அவரது கவிதைகளில் 'ஒரே பாரதம் உன்னத பாரதம்' என்ற தொலைநோக்கு பார்வை எதிரொலிப்பதை, பிரதமர் நரேந்திர மோடி எடுத்துரைத்தார்.
'சுதந்திரத்தின் அமிர்த பெருவிழாவை' இந்தியா கொண்டாடும் வேளையில், 'ஒரே பாரதம் உன்னத பாரதம்' என்ற உணர்வை நிலைநிறுத்த, காசி மற்றும் தமிழகம் இடையேயான தொடர்பை மீண்டும் உணர்த்த, வாரணாசியில் வரும் 17 முதல் டிச., 17 வரை, 'காசி தமிழ் சங்கமம்' என்ற நிகழ்ச்சிக்கு, பிரதமர் நரேந்திர மோடி அரசு ஏற்பாடு செய்துள்ளது.
இந்திய கலாசாரம் மற்றும் நெறிமுறைகளில் வேர் விட்டிருக்கும் அதேவேளையில், நவீன மற்றும் 21ம் நுாற்றாண்டு அணுகுமுறைகளோடு ஒருங்கிணையும் தலைமுறையை வளர்ப்பதற்கு, தேசிய கல்வி கொள்கை முக்கியத்துவம் அளிக்கிறது. தொன்மையான ஞானத்தை கண்டறிந்து, அதனுடன் நவீன சிந்தனை, தத்துவம், கல்வி முறை, தொழில்நுட்பம், தொழில் முனைவு, கைவினை தொழில் முனைவு ஆகியவற்றை ஒருங்கிணைப்பது, அறிவின் மதிப்புமிக்க உள்ளடக்கத்தை உருவாக்க, நமக்கு உதவி செய்யும்.
துாத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டத்தை சேர்ந்த சுவாமி குமரகுருபரர், காசி சுல்தானுடன் துணிவோடு வாதிடுவதில் சிறந்து விளங்கினார். கேதார் காட்டையும், விஸ்வேஸ்வர லிங்கத்தை பிரதிஷ்டை செய்வதற்கான இடத்தையும் பெறுவதற்கு, அவரது அரண்மனைக்கு சிங்கத்தின் மேல் அமர்ந்து சென்றார். அவர், காசி குறித்து 'காசி கலம்பகம்' என்ற பாடல்கள் தொகுப்பை எழுதியுள்ளார்.
பாண்டிய வம்சத்தைச் சேர்ந்த மன்னன் அதிவீர ராம பாண்டியன், காசிக்கு யாத்திரை சென்று திரும்பிய பின், தமிழகத்தின் தென்காசியில் சிவாலயத்தை அமைத்தார். அவரது, மூதாதையர்கள் சிவகாசியை நிறுவினர். ஸ்கந்த புராணத்தின் தமிழ் பாடல்களாக, அவர் 'காசி காண்டம்' எழுதினார். தமிழகத்திற்கும், வாரணாசிக்கும் இடையேயான பிணைப்பை போற்றி வலுப்படுத்தும் முதல் முயற்சியாக, ஒரு மாதம் தமிழ் காசி சங்கமம் இருக்கும்.
வாரணாசி என்று அறியப்படும் காசிக்கும்,தமிழகத்திற்கும் இடையே உள்ள ஆழமான கல்வி, பொருளாதாரம், சமூக கலாசார உறவுகளை வெளிச்சத்திற்கு கொண்டு வர, 'காசி தமிழ் சங்கமத்திற்கான' அறிவுசார் பங்குதாரர்களாக, சென்னையில் உள்ள சென்னை ஐ.ஐ.டி., கல்வி நிறுவனமும், பனாரஸ் ஹிந்து பல்கலையும் செயல்படும். சுதந்திர இந்திய வரலாற்றில் தன்மையிலும், அளவிலும் இத்தகைய முன்முயற்சி உருவாகவும் இல்லை; ஏற்பாடு செய்யப்படவும் இல்லை. எனவே, சுதந்திர அமிர்த பெருவிழாவை கொண்டாடும் ஆண்டில், இது நடத்தப்படுவது சிறப்பு முக்கியத்துவம் பெறுகிறது.
இரு நகரங்களுக்கு இடையே உள்ள தொடர்புகள் மற்றும் பகிரப்பட்ட மாண்புகளை வெளிக்கொண்டு வரும் நோக்கத்துடன், இந்திய கலாசாரத்தின் இரு தொன்மையான நகரங்களின், பல்வேறு தன்மைகள் குறித்து நிபுணர்கள் மற்றும் அறிஞர்கள் பங்கேற்கும் கருத்தரங்குகள், விவாதங்கள் போன்ற கல்வி சார்ந்த பரிமாற்றங்கள் நடக்கும். ஒரு மாத கால இந்த நிகழ்வு, மக்களிடையேயான பிணைப்பை ஆழப்படுத்துவதுடன், பகிரப்பட்ட பாரம்பரியத்தின் புரிதலை உருவாக்கும். இரு வித ஞானம் மற்றும் கலாசார பாரம்பரியங்களை நெருக்கமாக கொண்டு வரும்.
புரிந்து கொள்ளும் மேடை
ஞானம் மற்றும் கலாசாரத்தின் சிறப்புமிக்க இரு மையங்கள் வாயிலாக, இந்திய நாகரிக வரலாறுகளின் ஒற்றுமையை புரிந்து கொள்ளும் மேடையாக இது செயல்படும். இலக்கியம், தொன்மை நுால்கள், தத்துவம், ஆன்மிகம், இசை, நடனம், நாடகம், யோகா, ஆயுர்வேதம், கைத்தறிகள், கைவினை பொருட்கள், நவீன கண்டுபிடிப்புகள், வர்த்தக பரிமாற்றங்கள், கல்விசார் தொழில்நுட்பம், அடுத்த தலைமுறை தொழில்நுட்பம் போன்ற பல்வேறு அறிவுசார் தலைப்புகளை உள்ளடக்கிய தொடர்களாக, இந்த சங்கமம் மையம் கொண்டிருக்கும்.
இந்தியாவின் அறிவு முறைகள், கல்வி மற்றும் பயிற்சி முறைகள், கலைகள் மற்றும் கலாசாரம், மொழி மற்றும் இலக்கியம் போன்ற பல்வேறு முகங்கள் குறித்து மாணவர்கள், அறிஞர்கள், கல்வியாளர்கள், தொழில் முறையாளர்களுக்கு ஒப்பற்ற கற்றல் அனுபவமாக இருக்கும். தமிழகத்தில் இருந்து கலை, இலக்கியம், ஆன்மிகம், கல்வி உட்பட 12 துறைகளை சார்ந்தவர்களை, காசிக்கு சிறப்பு விருந்தினர்களாக அழைப்பதற்கான திட்டமும், இந்த ஒரு மாத நிகழ்வின் பகுதியாக இருக்கிறது.
சென்னை, கோவை, ராமநாதபுரம், ராமேஸ்வரம் ஆகிய இடங்களில் இருந்து வேறுபட்ட, 12 தேதிகளில் புறப்படும் ரயில்களில் இணைக்கப்பட்டுள்ள தனி பெட்டிகளில், இந்த விருந்தினர்கள் குழுக்களாக காசிக்கு பயணம் செய்வர். ஒவ்வொரு குழுவும் துவக்கத்தில் இருந்து திரும்பி வரும் வரை, மொத்தம் எட்டு நாட்கள் செலவிடுவர். இந்த சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக, அவர்கள் கல்வி சார்ந்த அமர்வுகளில் பங்கேற்பர்.
காசியையும், அயோத்தியாவையும், அவற்றை சுற்றியுள்ள பகுதிகளையும் பார்வையிடுவர். கங்கையில் படகு சவாரி மேற்கொள்வர். அனைத்து விருந்தினர்களும் காசியிலும், அயோத்தியாவிலும் கட்டணமின்றி பயணம் செய்யவும், தங்குவதற்கும் உரியவர்கள். பல சகாப்தங்களாக இடைவிடாமல் வளர்ந்த ஞானத்தின் இந்திய ஊற்றுகளாக விளங்கும் காசி, பிரயாக்ராஜ், அயோத்தியா முதல் காஞ்சிபுரம், புதுச்சேரி, மதுரை, தஞ்சாவூர், ராமேஸ்வரம், ஸ்ரீரங்கம், கன்னியாகுமரி,துாத்துக்குடி, திருநெல்வேலி இடங்கள் முக்கியமானவை.
இந்திய நாகரிகத்தின் அடையாள மையத்தில் இடம்பெற்றுள்ள 'ஒரே பாரதம்; உன்னத பாரதம்' என்ற உணர்வின் கீழ் பல நுாற்றாண்டுகளாக நிலைத்திருக்கும் தமிழ் கலாசாரம் மற்றும் காசிக்கு இடையேயான தொடர்புகளை மறுகண்டுபிடிப்பு செய்வதற்கும், மறு உறுதி செய்வதற்கும், கொண்டாடுவதற்குமான நேரம் இதுவாகும். இத்தகைய முதல் முயற்சி ஒரு துவக்கம் மட்டுமே.
பிரதமர் நரேந்திர மோடியின் ஆற்றல்மிகு தலைமையின் கீழ் இதுபோன்ற நிகழ்ச்சிகள் வாயிலாக, இந்தியாவின் புகழ்பெற்ற ஆன்மிக, கலாசார, தத்துவார்த்த அடிப்படைகளுக்கு உயிரூட்ட, நாட்டின் பல்வேறு பகுதிகளை இணைப்பதற்கு சிறப்பு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. - டாக்டர் எல்.முருகன்,மத்திய இணை அமைச்சர்
பாக்கலாம். அங்கே எத்தனை பீடா வாயனுங்க தமிழ் பச்சுட்டு வந்து பேசுறாங்கன்னு பாக்கலாம்.