ஒரு மொழியின் வளர்ச்சி, அந்த மொழியின் மேல் மாறா பற்று கொண்டவர்களின் கைகளில் மட்டுமே உள்ளது. வேறு மொழிகள் வருவதால், தம்மொழி அழிந்து விடுமோ என்ற அச்சம் இருப்பதில் தவறில்லை. ஆனால், நம் மொழியை காப்பதும், வளர்ப்பதும் ஒவ்வொரு மொழி பற்றாளனின் கடமை. தமிழ் மொழிக்கு நாம் ஆற்ற வேண்டிய அந்த கடமையை, செய்ய தவறி விட்டோம் என்றே தோன்றுகிறது.
அரசியல் ஆதாயங்களுக்காக மட்டுமே, தமிழ் மொழி தமிழகத்தில் உபயோகப்பட்டுள்ளது. தவிர, 75 ஆண்டுகளுக்கு முன், நம்முடைய மக்களிடம் இருந்த தமிழ் ஆர்வம் இப்போது இல்லை; இதை யாரும் மறுக்க முடியாது.
முரணான சூழல்
தமிழகப் பள்ளிகளில், தமிழ் வழியில் பயில்வோரின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. அதற்கு காரணங்கள் பல இருந்தாலும், இந்த சரிவை சரி செய்ய, தமிழக ஆட்சியாளர்களுக்கு நேரம் இல்லை.
சமீப காலமாக, மீண்டும் தமிழகத்துக்குள் ஹிந்தி நுழைந்து விட்டதாக, பெரும் சர்ச்சை எழுந்திருக்கிறது. 'தமிழுக்கு ஆபத்து' என்று தி.மு.க.,வின் கூடாரங்களில் இருந்து பெரும் குரல் எழுந்துள்ளது.
ஒரு பக்கம் ஹிந்தி எதிர்ப்பு, மறுபக்கம் தமிழை வளர்ப்பதற்கு எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் இருப்பது போன்ற முரணான சூழல், இன்று தமிழகத்தில் நிலவுகிறது.
நீதிக் கட்சி, தி.க., - தி.மு.க., என, பல்வேறு காலகட்டத்தில் ஹிந்தி எதிர்க்கப்பட்டு, தமிழ் காக்கப்பட்டதாக கட்டுக் கதைகளை தி.மு.க., கட்டவிழ்த்து விட்டது. ஆனால், உண்மை என்ன என்று இனியாவது, மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
நீதி கட்சியில் ஹிந்தி எதிர்ப்பை பலர் விரும்பவில்லை. ஹிந்தி மொழிக்கு எதிராக, நீதி கட்சி சார்பில் எந்தவித போராட்டங்களும் முன்னெடுக்கப்படவில்லை.
கடந்த 1938ல் ஹிந்தி எதிர்ப்பு போராட்டங்கள் நடத்தியவர்களை, வரலாற்றில் இருட்டடிப்பு செய்தது மட்டுமே, தி.மு.க.,வின் சாதனை.
கடந்த, 1950ல் இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தை இயற்றிய அம்பேத்கர், '15 ஆண்டுகளுக்கு மட்டுமே ஆங்கிலம் நம்முடைய நாட்டின் ஆட்சி மொழியாக இருக்கும்; அதன் பின், ஹிந்தி மொழியே நாட்டின் ஒரே ஆட்சி மொழியாக இருக்கும்' என்று குறிப்பிட்டுள்ளார்.
தற்காப்பு ஆயுதம்
முன்னாள் பிரதமர் நேரு, தி.மு.க.,வின் கோரிக்கையை ஏற்று, 'ஹிந்தி பேசாத மாநிலங்கள் விரும்பும் வரை, ஆங்கிலம் ஆட்சிமொழியாக தொடரும்' என்றார். இருப்பினும், 1965ல் தேர்தலுக்கு முன்னதாக, மாணவர்களை துாண்டி விட்டு, ஹிந்தி மொழிக்கு எதிராக போராட்டங்களை தி.மு.க., நடத்தியது.
அதற்கு பின் ஆட்சிக்கு வந்த தி.மு.க., தமிழை வளர்க்க ஆக்கப்பூர்வமான முன்னெடுப்புகளை தவிர்த்து விட்டு, தங்கள் ஆட்சி சரிவை நோக்கி பயணிக்கும் போதும், எதிர்க்கட்சியாக இருக்கும்போதும் மட்டும் ஹிந்தி எதிர்ப்பை, தற்காப்பு ஆயுதமாக பயன்படுத்தியது; இதுவே வரலாறு.
அதிர்ச்சி தகவல்
கடந்த 2021ல் நடத்தப்பட்ட கணக்கெடுப்பில், தமிழகத்தில் மூன்றாம் வகுப்பு மாணவர்களில், வெறும் 25 சதவீதத்தினர் மட்டுமே, தமிழில் பிழையின்றி எழுத, படிக்க தெரிந்தவர்களாக இருக்கின்றனர் என, தெரியவந்துள்ளது.
மேலும், 2018ல் வெளியான கல்வி நிலை அறிக்கையின்படி, ஐந்தாம் வகுப்பு மாணவர்களில், 40 சதவீதத்தினர் மட்டுமே, ஒரு எளிய கட்டுரையை வாசிக்கும் திறன் உள்ளவர்களாக இருக்கின்றனர் என்கிற அதிர்ச்சி தகவல் தெரிய வந்துள்ளது.
பல காலமாக ஹிந்தி எதிர்ப்பில் காட்டிய அக்கறையை, தமிழ் வளர்ச்சியில் காட்டாததன் விளைவு இது.
ஒரு வேளை, ஈ.வெ.ரா., சொன்னது போல, 'காட்டுமிராண்டி மொழியான தமிழை விட்டுவிட்டு, ஆங்கிலம் தமிழர்களின் வீட்டு மொழியாக மாற வேண்டும்' என்பதை தாரகமந்திரமாக ஏற்று, தி.மு.க.,வினர் நடைமுறைபடுத்தி விட்டனரோ என்று எண்ண தோன்றுகிறது.
தமிழ் மொழி வளர்வது நம் கையில் தான் உள்ளது. பள்ளிகள் மற்றும் கல்லுாரிகளில் தான் தமிழை வளர்த்தெடுக்க முடியும்.
எனவே, ஆளும் தி.மு.க., அரசுக்கு, தமிழக பா.ஜ., சார்பில் சில கோரிக்கைகளை வைக்கிறோம்...
மேல்நிலை பள்ளிகளில், தமிழ் வழியில் பயிலும் மாணவர்களுக்கு மாதம் 2,500 ரூபாய் ஊக்கத் தொகை; மருத்துவம், பொறியியல் உள்ளிட்ட தொழில் கல்வி படிக்கும் மாணவர்களுக்கு, மூன்று சதவீத உள் இடஒதுக்கீடு; அரசு பள்ளிகளில் தமிழ் ஆசிரியர்களுக்கு சிறப்பு சலுகைகளை வழங்க வேண்டும்
சங்கம் வைத்து தமிழ் வளர்த்த மண் இது. நம்முடைய மாணவர்களின் கற்றல் திறனை வளர்ப்பது, நம்முடைய கையில் உள்ளது. தேவாரம், திருவாசகம், தொல்காப்பியம் போன்ற இலக்கண, இலக்கியங்களின் பெருமையை, பள்ளியில் பயிற்றுவிக்க சிறப்பு ஆசிரியர்களை நியமிக்க வேண்டும்
நாம் வளர என்ன தேவை என்பதை சிந்திப்போம். நம் மொழியை காக்க வெற்று விளம்பரங்கள் மற்றும் போராட்டங்கள் மட்டும் போதாது என்பதை, தமிழக அரசு இனியாவது உணர வேண்டும்.
இங்கிலிஷ், தமிழ் என்ற அழகான மொழிகள் இருக்கஇந்தி எதுக்குயா?... குஜராத்தி காரங்களுக்கு இந்தி மேல அவ்வளவு அக்கறை. ஓட்டு வாங்கி என்னைக்கும் பதவியில இருக்கலாம்., அதுக்கு தானே. இந்திக்காரன் முதல்ல தென்னிந்திய பாஷை ஒன்றை அக்கறையா படிச்றட்டு தேர்ச்சி பெறட்டும்.பார்க்கலாம்.