அ.தி.மு.க., - எம்.எல்.ஏ., கே.பி.முனுசாமி: தமிழகத்தை பொறுத்தவரை, அ.தி.மு.க., - தி.மு.க., இரு கட்சிகளும் பங்காளிகள். எங்களுக்குள் பகைமை இருக்கும். ஆனால், வேறு கட்சிகள் உள்ளே நுழைய முடியாது. இதை நீர்த்துப் போக செய்யும் வேலைகளில், பன்னீர் செல்வம் இறங்கியுள்ளார்.
டவுட் தனபாலு: தமிழகத்துல, 55 வருஷங்களா உங்க ராஜாங்கம் தானே நடக்குது... நீங்க, அவங்களை பழி சொல்றதும், அவங்க, உங்களை வசைபாடுறதுமா நிஜமான எதிரிகள் போலவே மக்கள் மத்தியில நடிக்கிறீங்க... 'பந்தியில நாங்க மட்டும் தான் சாப்பிடணும்... மத்தவங்களுக்கு இடமில்லை என்பதில் ரெண்டு கட்சிகளும் ஒற்றுமையா இருக்கோம்' என்பதை, 'டவுட்' இல்லாம விளக்கிட்டீங்க!
முதல்வர் ஸ்டாலின்: நான் விளம்பர பிரியராக இருப்பதாக சிலர் சொல்கின்றனர். அரசியலில், 55 ஆண்டுகளாக உள்ள எனக்கு, எந்த விளம்பரமும் தேவையில்லை. 27 சதவீத இட ஒதுக்கீட்டை, யார் பெற்று தந்தது என நினைத்தால், என் முகம் நினைவுக்கு வரும். அனைவரும் அர்ச்சகராகலாம் திட்டம், சமத்துவ நாள் அறிவிப்பு, பெண்களுக்கு பஸ்சில் இலவச பயணம் என்றால், என் முகம் தான் நினைவுக்கு வரும். நான் எதற்கு விளம்பரம் தேட வேண்டும்?
டவுட் தனபாலு: வாஸ்தவம் தான்... பெண்கள் தினமும் காஸ் அடுப்பை பத்த வைக்கும்போது, 'சிலிண்டருக்கு, 100 ரூபாய் மானியம் என்னாச்சு'ன்னு, நீங்க தான் நினைவுக்கு வருவீங்க... வறுமையில சிரமப்படும் மகளிர் எல்லாம், 'உரிமை தொகை 1,000 ரூபாய் எப்ப வரும்'னு உங்களை நினைப்பாங்க... 'பழைய பென்ஷன் திட்டம் எப்ப வரும்'னு, ஆசிரியர்களும், அரசு ஊழியர்களும் தினமும் உங்களை நினைச்சிட்டு தான் இருக்காங்க என்பதில் எந்த, 'டவுட்'டும் இல்லை!
முதன்மை கல்வி அலுவலர்களுக்கு, தொடக்க கல்வி இயக்குனர் அறிவொளி சுற்றறிக்கை: பள்ளிகளில் ஆண்டு விழாக்கள் கட்டாயம் நடத்த வேண்டும். பள்ளிகளில் நடக்கும் முக்கிய நிகழ்வுகள் மற்றும் கூட்டங்களுக்கு, எம்.பி.,க்கள் மற்றும் எம்.எல்.ஏ.,க்களை அழைக்க வேண்டும். அவர்களின் கருத்துக்களை, மாணவர்களிடம் தெரிவிக்க வேண்டும்.
டவுட் தனபாலு: பள்ளி விழாக்களுக்கு மக்கள் பிரதிநிதிகளை அழைக்கிறதுல தப்பில்லை... ஆனா, அவங்க, தங்களது தலைவர்களை போற்றி பாடிட்டு இருப்பாங்களே... அதெல்லாம், பள்ளி குழந்தைகள் படிப்புக்கு எந்த வகையில் பயன்படும் என்பது தான் எங்க, 'டவுட்!'
ஆமாம், சொல்லிப்புட்டோம், நாங்க அங்காளி, அப்பங்காளிகளா இருந்து முறை போட்டுக்கொண்டு மாநிலத்தை சுத்தமாக சுரண்டி முடிப்போம். வேறு யாருக்கும் இங்கு இடமில்லையாக்கும்