தமிழக காங்., முன்னாள் தலைவர் இளங்கோவன்: தி.மு.க., கூட்டணியில் காங்கிரசுக்கு ராஜ்யசபா எம்.பி., 'சீட்' ஒன்று ஒதுக்கப்பட்டுள்ளது. கண்டிப்பாக அந்த சீட் எனக்கு கிடையாது. நானும் அதை விரும்பவில்லை. வரும் லோக்சபா தேர்தலில் காங்., மிகப் பெரிய வெற்றி பெறும்.
டவுட் தனபாலு: ராஜஸ்தான்ல நடந்த காங்கிரஸ் சிந்தனையாளர்கள் மாநாட்டுல, 'ஒரு குடும்பத்தில் ஒருவருக்கு தான் பதவி' என முடிவு செய்துட்டாங்களே... உங்க மகன் திருமகன் ஈ.வெ.ரா., இப்ப எம்.எல்.ஏ.,வா இருக்கார்... அந்த கோட்டாவுல உங்களுக்கு பதவி கிடைக்காதுன்னு தெரிஞ்சு தான், 'சீச்சீ, இந்தப் பழம் புளிக்கும்'னு சொல்றீங்களோ என்ற, 'டவுட்' வருது!
***
தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர்: தமிழக பெண்கள், நகர பஸ்களில் இலவசமாக பயணம் செய்யலாம் என்ற திட்டத்தை வழங்கி, அது சிறப்புற செயல்படுத்தப்படுகிறதா என முதல்வர் தொடர்ந்து கண்காணித்து வருகிறார். ஓராண்டில், 112 கோடி இலவசப் பயணங்கள் நிகழ்ந்துள்ளன. அதற்கான நிதியை முதல்வர் வழங்கி உள்ளார். இவ்வாறு ஏழை மக்களை பாதிக்காத வகையில், கட்டண உயர்வின்றி அரசு பஸ்கள் இயங்கி வரும் சூழலில், 'கட்டண உயர்வு அட்ட வணை தயாராகி விட்டது' என்ற தவறான செய்தியை பரப்ப வேண்டாம்.
டவுட் தனபாலு: அது வதந்தியாகவே இருந்து விட்டால், ரொம்பவும் சந்தோஷம்... ஆனா, இப்படி வதந்திகளை பரப்பி, மக்களை மனதளவில் தயார்படுத்தி விட்டு, கமுக்கமா கட்டண உயர்வை அமல்படுத்திடுவீங்களோன்னு லேசா ஒரு, 'டவுட்' எழத்தான் செய்யுது!
***
டி.ஜி.பி., சைலேந்திரபாபு: பேராசை காரணமாக, பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டிய போலீசாரே, 'பிட் காயின்' மோசடி நபர்களின் மாயவலையில் சிக்கி கோடிகளை இழந்திருப்பது வருத்தம் அளிக்கிறது. முதலீடுக்கு அதிக வட்டி தருவதாக கூறிய எந்த நிறுவனமும் சரியாக செயல்பட்டது இல்லை. இதனால், கிரிப்டோ கரன்சி மற்றும் பிட்காயின் மோசடி கும்பலிடம் பொதுமக்கள் மற்றும் போலீசார் என, அனைவரும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
டவுட் தனபாலு: பொதுமக்களை போலீசார் எச்சரித்த காலம் மலையேறி, போலீசாரை டி.ஜி.பி., எச்சரிக்கை பண்ண வேண்டியதாகிடுச்சு பார்த்தீங்களா... எங்களுக்கு என்ன, 'டவுட்'டுன்னா, சைபர் கிரைம் குற்றவாளிகள் அந்த அளவுக்கு புத்திசாலி ஆயிட்டாங்களா அல்லது அவங்களை பிடிக்கிற அளவுக்கு நம்ம போலீசாருக்கு பயற்சி பத்தலையா?
முதல்வர் கைக்காசையா வழங்கி மகளிருக்கு இலவச பேருந்து அளித்தார்? மக்கள் பணம்தான், கடைத்தேங்காய் வழிப்பிள்ளையார், இதில் பெருமை எதற்கு?