தி.மு.க., அமைப்புச் செயலர் ஆர்.எஸ்.பாரதி: தி.மு.க.,வை பொறுத்தவரை அ.தி.மு.க., எங்களுக்கு பங்காளி. பா.ஜ., என்றுமே பகையாளி; நிரந்தரமாக அவர்களோடு சேர முடியாது. பா.ஜ., பகல் கனவு காண்பது தவறு. தமிழகத்தில் அக்கட்சி என்றும், கால் ஊன்ற முடியாது.
டவுட் தனபாலு: பா.ஜ.,வுடன் 1999 முதல் 2004 வரை ஐந்தாண்டுகள் கூட்டணி வைத்து, வளமான மத்திய அமைச்சர் பதவிகள்ல வலம் வந்தீங்களே... அப்ப எல்லாம், உங்களுக்கு அவங்க பகையாளியா தெரியலையா என்பது தான் எங்க, 'டவுட்!'
சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன்: தேர்தல்களில், தி.மு.க.,வின் வெற்றிக்கு உதயநிதி பிரசாரம் முக்கியத்துவமாக அமைந்தது. அதன் அடிப்படையில், உதயநிதி அமைச்சராக வேண்டும் என விருப்பம் தெரிவித்துள்ளேன். முதல்வர் விரைவில் முடிவு எடுத்து அறிவிப்பார்.
டவுட் தனபாலு: அடேங்கப்பா... தி.மு.க.,வின் வெற்றிக்கு எத்தனை வட்ட, நகர, மாவட்ட நிர்வாகிகள் வியர்வையும், ரத்தமும் சிந்தி உழைச்சிருக்காங்க... அவங்களை எல்லாம் விட, உதயநிதியின் பிரசாரமே வெற்றிக்கு காரணம்னு நா கூசாம சொல்றீங்களே... அமைச்சரவையில, 'பெருசா' பதவி உயர்வை எதிர்பார்க்குறீங்க என்பது, 'டவுட்'டே இல்லாம தெரியுது!
அ.தி.மு.க., ஒருங்கிணைப் பாளர் பன்னீர்செல்வம்: தமிழகம் முன்னேற்றப் பாதையில் செல்வதற்கான அடித்தளமாக, போயஸ் கார்டன் வேதா நிலையம் விளங்கியது என்று சொன்னால் அது மிகையாகாது. சராசரிகளை சக்கரவர்த்திகளாக்கிய இடம். இன்று, நான் தமிழக மக்களால் நன்கு பேசப்படுகிறேன்; இந்திய மக்களால் நன்கு அறியப்படுகிறேன் என்றால், அதற்கு மூல காரணம் ஜெயலலிதா தான். என் வாழ்நாளில் மறக்க முடியாத இடம் வேதா நிலையம்.
டவுட் தனபாலு: ரொம்ப சரி... சராசரி தொண்டரா இருந்த உங்களை சக்கரவர்த்தியா மாத்தியதும் அந்த இடம் தான்... ஜெ., மறைவுக்கு பின், அந்த சக்கரவர்த்தி பதவியை உங்களிடம் இருந்து மிரட்டி பறித்ததும் அந்த இடம் தான்... அதனால, உங்களால வேதா நிலையத்தை கனவுல கூட மறக்க முடியாதுங்கிறதுல, 'டவுட்'டே இல்லை!
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!