பா.ம.க., இளைஞரணி தலைவர் அன்புமணி: திருவாரூர் மாவட்டம், வேலங்குடி ஊராட்சியை சேர்ந்த லதா என்பவர், பிரதமர் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் வீடு கட்டியுள்ளார். வீடு கட்டும் பணி பெருமளவு முடிந்த நிலையில், லஞ்சம் கொடுத்தால் தான் நிதியை விடுவிப்பேன் என, பணி மேற்பார்வை அதிகாரி மகேஸ்வரன், லதாவின் மகன் மணிகண்டனிடம் கூறியிருக்கிறார். இதனால், விரக்திக்கு ஆளான மணிகண்டன் விஷம் குடித்து தற்கொலை செய்துள்ளார்.
டவுட் தனபாலு: 'எங்களுக்கு ஓட்டு போடாதவர்களும், இவங்களுக்கு ஓட்டு போடாம போயிட்டோமேன்னு வருந்தும் அளவுக்கு தி.மு.க., ஆட்சி இருக்கும்' என முதல்வர் ஸ்டாலின் அடிக்கடி சொல்றாரு... இதை எல்லாம் பார்க்கும் போது, 'ஏன்டா ஓட்டு போட்டோம்'னு தி.மு.க., தொண்டர்களே கவலைப்பட ஆரம்பிச்சிடுவாங்க என்பதில் கடுகளவும், 'டவுட்' இல்லை!
தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் மனோ தங்க ராஜ்: முந்தைய ஆட்சியில் அ.தி.மு.க., தலைவர்கள், லண்டன் மற்றும் அமெரிக்காவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டனர். ஆனால், முதலீடுகள் வரவில்லை. தொழில் முனைவோரின் கேள்விகளுக்கு, அவர்களால் சரியாக பதில் அளிக்க முடியாததே காரணம். தொழில் துறையினருடன் எந்த ஆலோசனையும் நடத்தவில்லை. ஊரை சுற்றி பார்த்து விட்டு திரும்பிஉள்ளனர்.
டவுட் தனபாலு: உங்க முதல்வர் தலைமையில ஒரு குழு துபாய் போய், சூப்பர் மார்க்கெட்டை தமிழகத்துக்கு கொண்டு வர்றதா அறிவிச்சாங்களே... அந்த மாதிரி, 'டெக்னிக்' எல்லாம் அ.தி.மு.க., தலைவர்களுக்கு தெரியலை போலும்... எது எப்படியோ... 'முதலீட்டை ஈர்க்க போறேன்'னு, அடுத்து ஒரு வெளிநாட்டு பயணத்துக்கு தயாராகுறீங்க என்பது, 'டவுட்'டே இல்லாம புரியுது!
மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் சுப்பிரமணியன்: தி.மு.க., அரசு பதவியேற்ற நாளில் இருந்து, கொரோனா தொற்றை விட, எங்களுக்கு அதிக சவாலாக இருந்தது பணியிட மாறுதல் தான். இதுவரை, 13 ஆயிரம் நர்ஸ்களுக்கு, எந்தவித செலவும் இல்லாமல் விரும்பிய இடத்திற்கு, வெளிப்படையாக பணி மாறுதல் வழங்கி இருக்கிறோம்.
டவுட் தனபாலு: நல்ல விஷயம் தான்... இதே வெளிப்படையான இடமாறுதலை, பத்திரப்பதிவு துறை, கல்வித் துறை, போக்குவரத்து துறையிலயும் புகுத்த நடவடிக்கை எடுக்கலாமே... அங்க எல்லாம், இடமாறுதலுக்கு லட்சக்கணக்குல பணம் கைமாறுவதா புகார்கள் வருதே... முதல்வருக்கு நெருக்கமான நீங்க, அவரிடம் எடுத்துரைத்து நல்லது நடந்தா, 'டவுட்'டே இல்லாம பாராட்டலாம்!
இந்தமாதிரி கமிஷன்,லஞ்சம் எல்லாம் கேட்பதற்கே தற்கொலை செய்தால், விடியல் அரசில் அடுத்தமுறை ஓட்டுப்போட குடும்ப உறுப்பினர்கள் மட்டும்தான் இருப்பார்கள். என்ன, இறந்தவர் குடும்பத்துக்கு ஒரு ஐந்து, பத்து லட்சம் - நம் வரிப்பணம்தான் - வீசியெறிந்து கேஸை முடித்துவிட்டால் தீர்ந்தது