Load Image
Advertisement

'டவுட்' தனபாலு

ஹிந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியம்: நேரடி தேர்வு முறை தான், மாணவர் தரம் உயர்த்தும் என்பதில் சந்தேகம் இல்லை. எனினும், திடீரென நேரடி தேர்வு தான் நடத்தப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளதை தான் மாணவர்கள் எதிர்க்கின்றனர். எனவே, இதை படிப்படியாக கொண்டு வர வேண்டும். அதன் பின், இறுதி தேர்வில் நேரடி தேர்வு நடத்தலாம்.


'டவுட்' தனபாலு: கல்லுாரிகளை கட்டுப்படுத்தும் உயர்கல்வித்துறை அமைச்சராக இருப்பவர், பொன்முடி. அவர், முதல்வருக்கு 'சீனியர்' -- கருணாநிதியுடன் இருந்தவர். அவரின் உத்தரவை எதிர்த்து, முதல்வரால் எதுவும் செய்ய முடியாதோ என்ற, 'டவுட்' ஏற்படுகிறது. ஏனெனில், ஒரு வாரமாக இந்த விவகாரத்தில் முதல்வர் குரல் கொடுக்காமல் மவுனம் சாதிக்கிறாரே...



தமிழக வேளாண் துறை அமைச்சர் பன்னீர்செல்வம்:
வேளாண் சட்டங்களை மத்திய அரசு வாபஸ் பெற்றது, விவசாயிகளின் ஒற்றுமைக்கு கிடைத்த வெற்றி. இது, தி.மு.க., தேர்தல் அறிக்கையில் கூறப்பட்ட உறுதிமொழிகளில் ஒன்று. தமிழகத்தில், தி.மு.க., அரசுக்கு விவசாயிகளின் ஆதரவு பெருகி வருகிறது. பா.ஜ., தோல்வியை நோக்கி சென்று கொண்டிருக்கிறது.


'டவுட்' தனபாலு: ஓராண்டுக்கும் மேலாக டில்லி அருகே விவசாயிகள் போராட்டம் நடந்து கொண்டிருக்கிறது. சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றியதை தவிர்த்து, வேறு எதையும் உங்கள் கட்சியோ, அரசோ செய்யவில்லை. இப்போது, மத்திய அரசு அந்த சட்டங்களை வாபஸ் பெற்றதும், உங்களுக்கு விவசாயிகளின் ஆதரவு பெருகி வருகிறது என்கிறீர்கள். தமிழக மக்களை விபரம் அறியாதவர்கள் என நினைத்து விட்டீர்களோ என்ற, 'டவுட்' வருகிறது!



பிரதமர் மோடி:
நாட்டு நலனுக்காகவே புதிய வேளாண் சட்டங்களை கொண்டு வந்தோம். அனைத்து விவசாயிகள் சங்கத்தினருடன் ஆலோசித்த பிறகே அதை செய்தோம். ஆனால், அந்த சட்டம் பற்றி தவறான தகவல்கள் பரப்பப்பட்டன. புரிய வைக்க முயற்சிகள் எடுத்தோம்; எனினும் முடியவில்லை. அதனால் அந்த சட்டங்களை திரும்ப பெறுகிறோம்.


'டவுட்' தனபாலு: பிரதமர் போன்ற முக்கிய பொறுப்பில் இருப்பது எவ்வளவு கடினமானது என்பது, நாட்டு மக்கள் அனைவருக்கும், 'டவுட்' இன்றி புரிந்திருக்கும். ஏனெனில், விவசாயிகள் சட்டம் விவகாரத்தில் ஓராண்டுக்கும் மேலாக நடக்கும் போராட்டங்களை முடிவுக்கு கொண்டு வர, மத்திய அரசு எடுத்த முயற்சிகள் தோல்வியில் முடிந்து விட்டன. அதை பார்க்கும் போது, இந்த போராட்டத்தின் பின்னணியில் அரசியல் உள்ளது, 'டவுட்' இன்றி புரிகிறது!


அ.ம.மு.க., பொதுச் செயலர் தினகரன்:
பிரதமர் அறிவித்திருப்பது நிம்மதி அளிக்கிறது. உயிர் தியாகங்கள் செய்து, விவசாயிகள் நடத்திய அறவழிப் போராட்டத்திற்கு வெற்றி கிடைத்துள்ளது. இதற்காக ஓராண்டு காலமாகப் போராடிய விவசாயிகள் மீது பதிவு செய்யப்பட்ட வழக்குகளை ரத்து செய்ய வேண்டும். எதிர்காலத்தில் வேளாண் சார்ந்த முடிவுகளை எடுக்கும்போது, விவசாயிகளை முழுமையாக கலந்தாலோசிக்க வேண்டும்.


'டவுட்' தனபாலு: நம் தமிழகத்தை எடுத்துக் கொண்டாலே, 20க்கும் மேற்பட்ட விவசாய சங்கங்கள் உள்ளன. அதில் பல, எதிர்க்கட்சிகளின் ஆதரவு சங்கங்கள். அதுபோல, நாடு முழுக்க, 2,000த்திற்கும் மேற்பட்ட சங்கங்கள் இருக்கின்றன. அவற்றில் பல கம்யூ.,க்களுடையது. எனவே, விவசாயிகளை அழைத்து பேசி, ஒருமித்த முடிவு எடுப்பதெல்லாம் நடக்கக் கூடிய விஷயமா என்ற, 'டவுட்' வருகிறது.


தமிழக முதல்வர் ஸ்டாலின்:
மூன்று வேளாண் சட்டங்களையும் திரும்ப பெற போவதாக, பிரதமர் அறிவித்துள்ளதை வரவேற்கிறேன். மக்களாட்சியில் மக்களின் எண்ணங்கள் தான் மதிக்கப்பட வேண்டும். இதுவே, வரலாறு சொல்லும் பாடம். உழவர் பக்கம் நின்று போராடியதும், வேளாண் விரோத சட்டங்களுக்கு எதிராக, எங்கள் அரசு சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றியதும், பெருமை கொள்ளத்தக்கதாகும்.


'டவுட்' தனபாலு: நீங்கள் சொல்வது எல்லாம் சரி தான். விவசாய சட்டங்களை மத்திய அரசு வாபஸ் பெற்றுள்ளதால், பெரு விவசாயிகளுக்கு மட்டும் தான் லாபம், மகிழ்ச்சி. அதே நேரத்தில், சிறு, குறு, நடுத்தர விவசாயிகளின் நலன்கள் பாதிப்படைந்துள்ளனவே... அது பற்றி, ஓராண்டுக்கும் மேலாக போராடும் பெரு விவசாயிகளும், அவர்களுக்கு ஆதரவான நீங்களும் யோசிக்கவில்லையோ என்ற, 'டவுட்' வருகிறது!


அ.தி.மு.க., ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம்
: மூன்று வேளாண் சட்டங்களில் உள்ள பயன்களை விவசாயிகளின் ஒரு பிரிவினரிடம் புரிய வைக்க முடியவில்லை என தெரிவித்து, மூன்று சட்டங்களை திரும்பப் பெறுவதாக பிரதமர் அறிவித்துள்ளார். இதனால், பிரதமருக்கு உள்ள பெருந்தன்மையும், விவசாயிகள் மீது அவருக்கு உள்ள அக்கறையும் வெளிப்பட்டுள்ளது.


'டவுட்' தனபாலு: பிரதமரின் பெருந்தன்மையும், விவசாயிகள் மீதான அவரின் அக்கறையும் தெரிந்தது தான். அதே நேரத்தில், விவசாயிகளில் ஒரு சாரார் நடத்தும் போராட்டத்தை, உண்மை விவசாயிகளை வைத்து தடுக்கவோ, மறுத்து பேசவோ, அ.தி.மு.க., பெரிய அளவில் எந்த முயற்சியும் எடுக்கவில்லை. அதுபோல, மத்திய அரசு அல்லது பா.ஜ., தரப்பில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லையே ஏன்? இந்த விவகாரத்தை இப்படித் தான், இழுத்தடித்து முடிக்க வேண்டும் என முன்கூட்டியே மத்திய அரசு திட்டமிட்டு விட்டதோ என்ற, 'டவுட்' ஏற்படுகிறது!



வாசகர் கருத்து (6)

  • D.Ambujavalli - Bengaluru,இந்தியா

    ஒரு தொழிற்சாலை முதலாளி 'தொழிலாளர்கள் ஆனவரை போராடட்டும், கடைசியில் வயிறு காய்ந்தால் வழிக்கு வருவார்கள்' என்பதுபோல் ஒரு வருஷத்துக்குமேல் இந்தப் போராட்டத்தை இழுத்தடித்து, பின் வாபஸ் வாங்கிவிட்டு, விவசாயிகளின் கைகளை ஓங்கவிட்டு, இன்னும் எதிர்வரும் தேர்தல் பயத்தால்தான் என்ற கமெண்டும் வராமல், முன்பே இதை செய்திருந்தால் பெருந்தன்மை எனலாம்

  • rajan - erode,இந்தியா

    பிரதமரின் பெருந்தன்மையும், விவசாயிகள் மீதான அவரின் அக்கறையும் தெரிந்தது தான்.

  • rajan - erode,இந்தியா

    சிறு, குறு, நடுத்தர விவசாயிகளின் நலன்கள் பாதிப்படைந்துள்ளனவே. விவசாயிகள் மீது அக்கறை என்று சொன்ன மோடி செய்தது என்ன

  • rajan - erode,இந்தியா

    விவசாயிகளை அழைத்து பேசி, ஒருமித்த முடிவு எடுப்பதெல்லாம் நடக்கக் கூடிய விஷயமா என்ற, 'டவுட்' வருகிறது.

  • rajan - erode,இந்தியா

    விவசாயிகள் சட்டம் விவகாரத்தில் ஓராண்டுக்கும் மேலாக நடக்கும் போராட்டங்களை முடிவுக்கு கொண்டு வர, மத்திய அரசு எடுத்த முயற்சிகள் அரசு எடுத்த முயற்சி என்ன சட்டத்தை ஒருபோதும் நீக்க மாட்டோம் என்று சொன்னதை தவிர பேசியது என்ன

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
Advertisement