தனிமைப்படுத்தி கொண்ட டாக்டர்கள்!
திருப்பூர்:அரசு மருத்துவ கல்லுாரியில், கொரோனா தொற்று பரிசோதனை மேற்கொண்ட டாக்டர்கள், தங்களை வீட்டிலேயே தனிமைப்படுத்தி கொண்டனர்.திருப்பூர், உடுமலை, அவிநாசி, தாராபுரம் உட்பட அரசு மருத்துவமனைகளில் பணிபுரியும் டாக்டர்கள், செவிலியர்கள் மற்றும் மருத்துவ பணியாளர்களுக்கு, கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.இதில், எவருக்கும் நோய் தொற்று இல்லை என்பதும் உறுதியாகியுள்ளது.இருப்பினும், நோய் தொற்று சந்தேகத்தில் வரும் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதால், சந்தேகத்தின் பேரில் டாக்டர்களும், தங்களை தனிமைப்படுத்திக் கொள்கின்றனர். அவ்வகையில், திருப்பூர் மாவட்டத்தில், ஊத்துக்குளி, அவினாசி, திருப்பூர் பகுதிகளைச் சேர்ந்த 6 டாக்டர்கள், கொரோனா பரிசோதனைக்கு பின், வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.இது குறித்து, அரசு மருத்துவ கல்லுாரி நிர்வாகத்தினர் கூறியதாவது:வெளிநாடு, பிற மாநிலங்கள் மற்றும் பிற மாவட்டங்களில் இருந்து வருவோருக்கு, பி.சி.ஆர்., பரிசோதனை மையம் வாயிலாக பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. நேற்றுமுன்தினம், ஆறுபெண் போலீசார், ஆறு டாக்டர்கள் உட்பட, 64 பேருக்கு, சளி மற்றும் ரத்த மாதிரிகள் சேகரம் செய்யப்பட்டு, பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.அவர்களில், சந்தேகத்தின் பேரில் டாக்டர்கள் அனைவரும் தங்களை வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொண்டுள்ளனர். பரிசோதனை முடிவுக்கு ஏற்றாற்போல், சிகிச்சை மற்றும் ஆலோசனை அளிக்கப்படும். மருத்துவமனை தனிமைப்படுத்தப்பட்ட வார்டில், 35 பேர் உள்ளனர்.இவ்வாறு, அவர்கள் தெரிவித்தனர்.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!