சான்டியாகோ டெல் எஸ்டிரோ: உலக கோப்பை கால்பந்து (20 வயது) காலிறுதிக்கு உருகுவே, தென் கொரியா அணிகள் முன்னேறின.
அர்ஜென்டினாவில், 20 வயதுக்குட்பட்டோருக்கான 'பிபா' உலக கோப்பை கால்பந்து 23வது சீசன் நடக்கிறது. சான்டியாகோ டெல் எஸ்டிரோவில் நடந்த 'ரவுண்டு-16' போட்டியில் உருகுவே, காம்பியா அணிகள் மோதின. முதல் பாதி கோல் எதுவுமின்றி சமநிலையில் இருந்தது. இரண்டாவது பாதியில் எழுச்சி கண்ட உருகுவே அணிக்கு 65வது நிமிடத்தில் டுவார்டே டா சில்வா ஒரு கோல் அடித்தார். இதற்கு காம்பியா வீரர்களால் பதிலடி கொடுக்க முடியவில்லை. ஆட்டநேர முடிவில் உருகுவே அணி 1-0 என்ற கணக்கில் வெற்றி பெற்று காலிறுதிக்குள் நுழைந்தது.
மற்றொரு 'ரவுண்டு-16' போட்டியில் ஈகுவடார், தென் கொரியா அணிகள் மோதின. அபாரமாக ஆடிய தென் கொரிய அணி 3-2 என்ற கணக்கில் வெற்றி பெற்று காலிறுதிக்குள் நுழைந்தது.
முதலிரண்டு காலிறுதியில் (ஜூன் 3) இஸ்ரேல்-பிரேசில், கொலம்பியா-இத்தாலி அணிகள் மோதுகின்றன. மற்ற காலிறுதிப் போட்டிகளில் (ஜூன் 4) தென் கொரியா-நைஜீரியா, அமெரிக்கா-உருகுவே அணிகள் விளையாடுகின்றன.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!