இலங்கையின் வடக்கு மாகாணத்தின் வல்வெட்டித்துறையிலிருந்து வேப்பமரத்தினாலான கப்பல் ஒன்று அமெரிக்காவுக்கு வல்வெட்டித்துறை தமிழர்கள் கொண்டு சென்றார்கள் என்றால் நம்பமுடிகிறதா...? கோடிக்கணக்கில் உருவான டைடானிக்கே பாதித்தூரத்தில் மூழ்கியதென்றால் ஈழத்தமிழன் உருவாக்கிய பாய்மரமான அன்னபூரணி கப்பல் புயலுக்கும், மழைக்கும் தப்பி அமெரிக்கா சென்றதென்றால் தமிழனின் சாதனை எத்தகையது.
அன்னபூரணி அம்மாளின் அமெரிக்கப்பயணம் - 1938
வல்வெட்டித்துறையில் உள்ள மேற்குத்தெருவாடியில் வைத்து, 1930ஆம் ஆண்டில் சுந்தரம் மேத்திரியாரினால் உள்ளூர் வேப்ப மரத்தில் தயாரிக்கப்பட்ட “அன்னபூரணிஅம்மாள்” என்ற பெயரிலான இரட்டைப்பாய்மரக் கப்பல் 89அடி நீளமும், 19அடி அகலமும் கொண்ட ஒரு பாரிய கப்பலாக அந்த நாட்களில் விளங்கியது.அன்னபூரணி என்பது இமயமலையில் அமைந்திருக்கும் மலைச்சிகரங்களில் ஒன்றாகும். இன்றைய நேபாளத்தின் எல்லைக்குட்பட்ட இதன் உயரம் 26504அடிகளாகும். அத்துடன் அள்ளஅள்ளக்குறையாத அமுதசுரபி கொண்ட தெய்வமாக இந்துக்களால்ஆராதிக்கப்படும் பெண் தெய்வத்தின் பெயரும் அன்னபூரணியாகும். இப்பெயரே அன்னபூரணி அம்மாளின் சுட்டுப்பெயராக பல இடங்களிலும் பயன்படுத்தப்படுகின்றது.1936 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் வல்வெட்டித்துறைக்கு வருகை தந்திருந்த அமெரிக்கரான பிரபல கடலோடியான அமெரிக்கரான றொபின்சன்“Florence C. Robinson”அன்னபூரணியின்; அழகால் கவரப்பட்டவராக அதனை வாங்கிக் கொண்டு அமெரிக்காவுக்குக் கொண்டு செல்ல வேண்டுமென்று விரும்பினார். அதனைக் கொள்வனவு செய்ததும், அன்னபூரணி அம்மாள் என்ற பெயரில் உள்ள அந்தக் கப்பலை “Florence.C.Robinson”என்ற தனது மனைவியின் பெயருக்கு மாற்றிய பின்னரே அமெரிக்காவுக்குக் கொண்டுசென்றார்.வல்வெட்டித்துறை மாலுமிகளின் உதவியுடன் கொந்தளிக்கும் இராட்சச அலைகளையும் கடந்து சுயஸ்கால்வாயினூடாக அமெரிக்காவின் போஸ்ரன் துறைமுகத்திற்குக் கொண்டு செல்லப்பட்ட சாதனை இன்றும் உலகளாவிய ரீதியில் பேசப்படுகின்றது. சூயெஸ் கால்வாயினூடாக மத்தியதரைக் கடலில் பயணம் செய்த போது, ஏற்பட்ட புயலில்சிக்கிய கப்பல் 250 கடல்மைலகள் பின்புறமாக பெய்ரூத் வரை அடித்துச் செல்லப்பட்டது. இவ்வாறு பல்லாயிரக்கணக்கான மைல்களையும் பல கடல்களையும் கடந்து சென்ற இத்துணிகர கடற்பயணம்1938 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் முதலாம் திகதி அமெரிக்காவின் மசாசுசெட்ஸ் (Massachusetts) மாநிலத்தில் உள்ள குளோசெஸ்ரர் (Gloucester) துறைமுகத்தில் நிறைவடைந்தது.தெற்காசிய நாடொன்றில் உள்ள சின்னஞ்சிறிய தீவான இலங்கையில் உள்ள வல்வெட்டித்துறையில் கட்டப்பட்டு காற்றின் துணையுடன் இயங்கும் கப்பலொன்று 'இந்து சமுத்திரத்தைக் கடந்து ஐரோப்பாவின் ஊடாக மத்திய தரைக்கடலையும் கடந்து அத்திலாந்திக் சமுத்திரத்தின்ஊடாக அமெரிக்காவின் குளோசெஸ்ரர் துறைமுகம் வரை பயணம் செய்தது' உலக வரலாற்றில் இதுதான் முதல் தடவையும் கடைசித்தடவையுமாகும்.இச்சாதனை நிறைந்த கடற்பயணத்தில், வல்வெட்டித்துறையைச் சேர்ந்த தண்டையல் கனகரத்தினம் தம்பிப்பிள்ளை(48வயது) தலைமையில், பூரணவேலுப்பிள்ளை சுப்பிரமணியம் (29வயது), தாமோதரம்பிள்ளை சபாரத்தினம் (28வயது) சின்னத்தம்பி சிதம்பரப்பிள்ளை, (28வயது)) ஐயாத்துரை இரத்தினசாமி (24வயது) ஆகிய ஐந்து கடலோடிககளும் பயணத்தின் இறுதி இலக்குவரை பங்கேற்றிருந்தனர்.அமெரிக்காவின் தலைநகரான வாசிங்டன் நகருக்கு அண்மையில் உள்ள பால்ரிமோர் என்ற துறைமுகத்தில் தரித்து நின்றபொழுது எடுக்கப்பட்ட படத்தை அது தொடர்பான கட்டுரையுடன், பால்ரிமோரில் இருந்து வெளிவரும்“Baltimore Sun”என்ற செய்தித்தாள் பிரசுரித்திருந்தது. அன்னபூரணி அம்மாள் கப்பலைஅமெரிக்காவுக்குக் கொண்டு செல்லும் பொழுது கப்டன் மக்குயிஸ் என்பவரின் தலைமையில், வல்வெட்டித்துறை மாலுமிகளின் உதவியுடன் பயணம் செய்து குளோசெஸ்டர் துறைமுகத்தைச் சென்றடைந்தது.அன்று குளோசெஸ்டர் நகரில் இருந்து வெளியிடப்பட்ட ஊடகங்கள் பிரசுரித்த கருத்துக்கள் மிகச் சிறந்த சான்றுகளாகவும், ஆதாரங்களாகவும் விளங்கின.அன்னபூரணி அம்மாளின் இந்த திகில் நிறைந்த பயணம் பற்றிய இலக்கியங்கள் நூல்களாகவும் பத்திரிகைகள் சஞ்சிகைகளில் கட்டுரைகளாகவும் வெளிவந்துள்ளமை அதன் சிறப்பைப் பல மடங்கு உயர்த்தியுள்ளது.இச்சாதனைப் பயணம் பற்றிய விபரங்கள் 02ஓகஸ்ட்1938 வெளிவந்த The Boston Globe பத்திரிகையில் Voyage Ended By Brigantine Barrows என்பவரால் விவரிக்கப்பட்டிருந்தது. மற்றும் அன்றையநாளில் வெளிவந்த மற்றொரு தினசரியான 02.08.1938 அன்று வெளியிடப்பட்ட Gloucester Time பத்திரிகையில் Ceylon Brige Arrives After Long Voyage எனவும் மேற்படி அன்னபூரணியின் நீண்ட கடற்பயணம் அதன் முன்பக்க செய்தியாக வெளிவந்திருந்தது. அதில் குறிப்பிடப்பட்ட பின்வரும் செய்திக்குறிப்பினூடாக தமிழர்களின் கடல் ஆளுமைகளை பற்றி மேற்கத்தைய நாட்டவர்களின் உள்ளக் கிடக்கையையும் கருத்தையும் அறிய முடிகின்றது.“வல்வெட்டித்துறையில் கட்டப்பட்ட ஒன்பது பாய்களையும்விரித்தபடி கம்பீரமாக ஆடிஆடிப் பயணம் செய்து கொண்டிருந்த கப்பல் ஒன்று அத்திலாந்திக் சமுத்திரத்தையும் கடந்து அமெரிக்கக் கிழக்குக்கரையை அடைந்ததோர் நீண்ட கடல் பயணம் பற்றிய உண்மைக்கதை. இத்தகைய கப்பல்கள் வல்வெட்டித்துறையிலும் அதனை அடுத்துள்ள பருத்தித்துறையிலும் கட்டப்பட்டு வல்வெட்டித்துறைக் கடலோடிகளால் செலுத்தப்பட்டன.இவை தமிழ் நாட்டில் பணம் படைத்த செட்டிமாருக்காகவும்வல்வெட்டித்துறையை வதிவிடமாகக் கொண்ட செட்டிமாருக்காகவும் வல்வெட்டித்துறை வணிகர்களுக்காகவும் இலங்கை வடக்கில் உள்ள வல்வெட்டித்துறை பருத்தித்துறை மேஸ்திரிமார்களால் கட்டப்பட்டவை.”அன்னபூரணி அம்மாளுடன் அமெரிக்கா சென்றடைந்த வல்வெட்டித்துறையைச் சேர்ந்த மாலுமிகள் அங்கிருந்து திரும்பும்போது தம்முடன் எடுத்துவந்த இருபத்திரிகைக் குறிப்புகளே மேற்கண்டவையாகும்.அமெரிக்கா சென்ற மூன்றாவது மாதத்தில் அன்னபூரணி 22 நவம்பர் 1938இல் தென்பசிபிக் (South Pacific) சமுத்திரத்தில் உள்ள Tahiti தீவைநோக்கி ஒரு துணிகர பயணத்தை மேற்கொண்டது. இம்முறையும் மீண்டும் மூன்றுநாட்கள் கடும் புயலில் சிக்கிக்கொண்டது. அத்திலாந்திக்கடலில்100மைல் வேகத்தில் வீசியகாற்றையும் 40அடி உயரத்திற்கு எழுந்த அலைகளையும் அன்னபூரணி அனாசயமாக வெற்றிகொண்டவாறு தனது பயணத்தை தொடர்ந்தது.வல்வெட்டித்துறையின் உறுதியான வேப்பமரகட்டுமானமும் அதன் செய்வினைத் தொழில்நுட்பத்திறனும் இவ்வெற்றிக்கு காரணங்களாகின. இறுதியில் 8196மைல்களைக் கடந்து 15பெப்ரவரி 1939இல் பசிபிக்சமுத்திரத்தில் உள்ள Tahiti தீவை அடைந்து தனது இரண்டாவது உலக சாதனைப்பயணத்தையும் வெற்றிகரமாக முடித்துக் கொண்டது. அன்னபூரணியின் Tahiti பயணம்பற்றிTahiti Bound மற்றும் Wandere எனும் இருநூல்கள் வெளிவந்துள்ளன.Florence C. Robinsonஇன் இப்பயணத்தின்போது அமெரிக்க தலைநகரான Washington நகருக்கு அண்மையில் உள்ள Baltimore துறைமுகத்திற்கு அண்மையில் நிறுத்தப்பட்டிருந்த கப்பலின் படத்தின் மூலம் தனது ஒன்பது பாய்களையும் முழுமையாக விரித்தபடி ஓடிவரும் இரட்டைப் பாய்மரக்கப்பலான அன்னபூரணியின் கண்ணைக்கவரும் கம்பீரத் தோற்றத்தை இதில் உள்ள புகைப்படத்தில் பார்க்கலாம்.பொங்கியெழும் கடலின் இராட்சத அலைகளின் மத்தியில் துணிகரப்பயணத்தின் மூலம் சுயெஸ் கால்வாயினூடாக அமெரிக்காவின் போஸ்ரன் துறைமுகத்திற்கு வல்வை மாலுமிகளால் கொண்டு போய்ச் சேர்க்கப்பட்ட அந்த வரலாற்றுச் சாதனை இன்றும் உலக மக்களால் பெருமையாகப் பேசப்படுகின்றது.இவ்வளவு சாதனைகளையும் செய்து இந்து சமுத்திரம் அத்திலாந்திக் சமுத்திரம் பசுபிக் சமுத்திரம் என உலகத்தை சுற்றியஅன்னபூரணியின் பயணம் 1957ஆம் ஆண்டு Tahitiயில் மூழ்கி தனது வாழ்வை முடித்துக் கொண்டது. ஆயினும் சாகசம் மிக்க கடற்பயணத்தை மேற்கொண்ட அன்னபூரணி என்ற அந்த இரட்டைப் பாய்க்கப்பல் வல்வெட்டித்துறையின் பெருமைமிக்க ஒரு அடையாளமாகும்.அமெரிக்க மற்றும் ஸ்ரீ லங்காப் படையினர் இணைந்து நடத்திய 'ஒப்ரேசன்பசுபிக்ஏஞ்சல்' நிகழ்விற்காக (15.08.2016) அமெரிக்க தூதுவரான அதுல்ஹேசப் (Atul Keshap) யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்திருந்தார். அங்கு அவர் தனதுரையில் 1813இல் அமெரிக்க மிசனரியினர் ஏற்படுத்திய இலங்கைக்கான தொடர்பினை தாம் உருவாக்கிய அன்னபூரணிஅம்மாள் என்ற பாய்க்கப்பலில் அமெரிக்காவின் குளோஸ்ரர் துறைமுகத்திற்கு வந்த வல்வெட்டித்துறை கடலோடிகள் மீளவும் தொடர்ந்துள்ளனர் என்பதைச் சுட்டிக்காட்டினார். அத்துடன் ஆச்சரியமிக்க அன்னபூரணியின் இக்கடல்வழிப் பயணம் சரித்திரபூர்வமானது என்பதையும் அவர் குறிப்பிடத் தவறவில்லை.இலங்கைமக்கள் அனைவரும் குறிப்பாக ஈழத்தமிழர்கள் கூட மறந்துவிட்ட ஒருநிகழ்வினை எழுபத்தைந்து வருடங்களின் பின் யாழ்ப்பாண மண்ணில் மீண்டும் ஓர் அமெரிக்கர் நினைவு கூர்ந்துள்ளார். இதுபோலவே 1987மே மாதத்தில்; வடமராட்சியை கைப்பற்றுவதற்காக அப்போது பாதுகாப்பு அமைச்சராக இருந்த லலித்அத்துலத்முதலியின் பணிப்பின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சிறிலங்கா படையினரின் 'லிபரேசன் ஒப்பரேசன்' எனும் பெயரில் பெரும் தாக்குதலை தொடுத்திருந்தனர்.இதனைத் தொடர்ந்து உலகவங்கியைச் சேர்ந்த சில அதிகாரிகள் வல்வெட்டித்துறைக்கு விஜயம் செய்திருந்தனர். அவர்களில் ஒருவர் குறிப்பிட்ட அன்னபூரணி அம்மாளின்பயணம் பற்றி அன்று உதவி அரசாங்க அதிபராக இருந்த வை.வேலும்மயிலும் அவர்களிடம் தெளிவாக உரையாடியிருந்தமையும் இவ்விடத்தில் குறிப்பிடத்தக்கது.75 ஆண்டுகளுக்கு முன்னர் தொழில்நுட்பத்திறனும் அறிவியல்நுட்பங்களும் விருத்தியடைந்திராத காலத்தில் உள்ளூர் வேப்பமரங்களைக் கொண்டு பாயும் நீரையும்கிழித்துச் செல்லக்கூடிய பல கப்பல்களைத் தயாரித்த தமிழர்கள் அன்று அமெரிக்கா மட்டுமின்றி பர்மா, காக்கிநாடா, தூத்துக்குடி போன்ற பல துறைமுகங்களுக்குச் சென்று வர்த்தகத் தொடர்பைஏற்படுத்தித் திரவியம் தேடி நமது நாட்டுக்கே பெருமை சேர்த்தவர்கள் வல்வெட்டித்துறை தமிழர்கள்.- நமது செய்தியாளர் ஞானகுணாளன்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!