கவர்னரும், தமிழக அரசும் ஏட்டிக்கு போட்டியாக செயல்படுவது, கல்வியாளர்களிடம் கவலையை ஏற்படுத்தி உள்ளது. தமிழகத்தில், சென்னை பல்கலை, கோவை பாரதியார் பல்கலை, தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலை ஆகியவற்றில், துணை வேந்தர் பதவிகள் காலியாக உள்ளன. வழக்கமாக, துணை வேந்தர்களை தேர்வு செய்ய, கவர்னர் தேடுதல் குழுவை நியமிப்பார். இதற்கு, அரசு சார்பில் அரசாணை வெளியிடப்படும்.கடிதம்தேடுதல் குழுவில், கவர்னர், பல்கலை சிண்டிகேட், செனட் சார்பில், தலா ஒரு உறுப்பினர் இடம் பெறுவர். இக்குழு மூன்று பேர் பெயரை, கவர்னருக்கு பரிந்துரை செய்யும். அதில் ஒருவரை, துணை வேந்தராக, கவர்னர் தேர்வு செய்வார். இதன் அடிப்படையில், பல்கலை சிண்டிகேட், செனட் உறுப்பினர்கள் பெயரை பரிந்துரை செய்து, தேடுதல் குழு அமைக்கும்படி, கவர்னர் ரவிக்கு, அரசு தரப்பில் கடிதம் அனுப்பப்பட்டது.ஆனால், தேடுதல் குழுவில், யு.ஜி.சி., சார்பில் ஒரு பிரதிநிதியை நியமிக்க வேண்டும் என, கவர்னர் அறிவுறுத்தினார்; இதை தமிழக அரசு ஏற்கவில்லை. இதனால், பல்கலை துணை வேந்தர்களை தேர்வு செய்வதற்கு, தேடுதல் குழு அமைக்கப்படாமல் இருந்தது. இதுகுறித்து, கடந்த மாதம் 31ம் தேதி, நம் நாளிதழில் விரிவாக செய்தி வெளியிடப்பட்டது. பல்கலை மானியக் குழு விதிகளின்படி, மாநில பல்கலைக்கு துணை வேந்தரை நியமிக்க, யு.ஜி.சி., விதிகளை மட்டும் பின்பற்றினால் போதுமானது.யு.ஜி.சி., சார்பில் உறுப்பினரை சேர்க்க வேண்டும் என்ற கட்டாய விதிமுறை இல்லை என, தமிழக அரசு சார்பில், கவர்னருக்கு கடிதம் அனுப்பப்பட்டது. அதை ஏற்க மறுத்த கவர்னர், இம்மாதம் 6ம் தேதி, மூன்று பல்கலைகளுக்கும், யு..ஜி.சி., சார்பில் ஒரு பிரதிநிதியுடன் சேர்த்து, நான்கு பேர் கொண்ட தேடுதல் குழுவை, கவர்னர் ரவி நியமித்தார். இதன் விபரம், www.tnrajbhavan.gov.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டது.இதை தமிழக அரசு ஏற்கவில்லை. அதோடு, சென்னை பல்கலை துணை வேந்தரை தேர்வு செய்ய, கவர்னர் ரவி அறிவித்த தேடுதல் குழுவில் இடம் பெற்றிருந்த, யு.ஜி.சி., பிரதிநிதியை நீக்கி, மற்ற மூன்று பேர் அடங்கிய தேடுதல் குழுவை, தமிழக அரசு புதிதாக அறிவித்துள்ளது.அதிர்ச்சிகவர்னர் ரவி அறிவித்த தேடுதல் குழுவில், கர்நாடகா மத்திய பல்கலை துணை வேந்தர் பட்டு சத்யநாராயணா, ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ்., அதிகாரி தீனபந்து, பாரதிதாசன் பல்கலை முன்னாள் துணை வேந்தர் ஜெகதீசன், யு.ஜி.சி., தலைவரின் பிரதிநிதியாக, தெற்கு பீஹார் மத்திய பல்கலை முன்னாள் துணை வேந்தர் ரத்தோர் ஆகியோர் இடம் பெற்றிருந்தனர்.இவர்களில் ரத்தோரை மட்டும் நீக்கி விட்டு, மற்ற மூவர் அடங்கிய தேடுதல் குழுவை, தமிழக அரசு அறிவித்து, தமிழ்நாடு அரசிதழில் வெளியிட்டு உள்ளது. இந்த தேடுதல் குழு, பல்கலை துணை வேந்தர் பதவிக்கு, மூன்று பேர் பெயரை, கவர்னருக்கு பரிந்துரைக்கும் என, தெரிவிக்கப்பட்டுள்ளது. துணை வேந்தர் தேர்வுக்கு, கவர்னரும், தமிழக அரசும் தனித்தனியே குழு அமைத்திருப்பது, கல்வியாளர்களிடம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!