மாணவர்கள் விபரங்கள் திருடி விற்பனை: போலீசில் கல்வித்துறை புகார்
சென்னை: பள்ளி மாணவர்களின் விபரங்கள் திருடப்பட்டு, தனியாருக்கு விற்கப்பட்டது குறித்து, சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில், கல்வித்துறை சார்பில், புகார் அளிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் உள்ள அரசு, அரசு உதவிபெறும் மற்றும் தனியார் பள்ளிகளில் பயிலும் அனைத்து மாணவர்களின் விபரங்களும், பள்ளிக்கல்வித்துறை இணையதளத்தில், சேகரித்து வைக்கப்பட்டுள்ளது.இந்த விபரங்கள் திருடப்பட்டு, தனியாருக்கு விற்பனை செய்யப்பட்டதாக, புகார்கள் எழுந்தன.
இது குறித்து, பள்ளிக் கல்வித்துறை செயலர், காகர்லா உஷா கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. தொடர்ந்து, நடந்த விசாரணையில், ‛ஜி-பே வாயிலாக, 10 ஆயிரம் ரூபாய் பெற்றுக் கொண்டு, பள்ளி கல்வித்துறையில் இருந்தே, வெளி நபர்களின் ‛இ-மெயில் முகவரிக்கு, தகவல்கள் அனுப்பப்பட்டிருப்பது தெரிந்தது.
மாநில பாடத்திட்டத்தில், சுமார் 6 லட்சம் பேர், சி.பி.எஸ்.இ., பாடத்திட்டத்தில் 35 ஆயிரம் பேரின் தகவல் திருடி விற்கப்பட்டதை, அதிகாரிகள் கண்டறிந்தனர்.
இது குறித்து, பள்ளி கல்வித்துறை அதிகாரி புண்ணியக்கோடி, சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில், அளித்துள்ள புகார் மனுவில் கூறப்பட்டுள்ளதாவது, ‛பள்ளி மாணவர்களின் விபரங்களை, தனிநபர்கள் சிலர், பணம் பெற்று கொண்டு, 20 மாவட்டங்களைச் சேர்ந்த, வெளி நபர்களுக்கு விற்றுள்ளனர். இது, மிகவும் கண்டிக்கத்தக்கது.
மாணவர்களின் பாதுகாப்பை இது, கேள்விக்குறியாக்கி உள்ளதால், உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், எனக் கூறப்பட்டுள்ளது. இப்புகார் குறித்து, சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரிக்கின்றனர்.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!