சென்னை: அரசு பள்ளிகளில் படித்து, உயர்கல்வி கற்கும் மாணவியருக்கு, மாதம் 1,000 ரூபாய் வழங்கும் திட்டத்தில், அவர்களின் ஆதார் எண்களை இணைக்க, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
தமிழக அரசின் சமூக நலத்துறை சார்பில், ராமாமிர்தம் அம்மையார் உயர்கல்வி உறுதி திட்டம் செயல்படுத்தப் படுகிறது. இந்த திட்டத்தின் கீழ், அரசுப் பள்ளிகளில் படித்து, மேற்படிப்பில் சேரும் அனைத்து மாணவியருக்கும், சான்றிதழ், டிப்ளமா, பட்டப்படிப்பு, தொழிற்கல்வி ஆகியவற்றில், இடைநிற்றல் இல்லாமல் கல்வி படித்து முடிக்கும் வரை, மாதம் 1,000 ரூபாய், அவர்களின் வங்கிக் கணக்கில் நேரடியாக செலுத்தப்படும்.
இந்த திட்டத்தில் பயன்பெற விரும்பும் மாணவியர், தங்கள் அடையாளத்துக்கு, ஆதார் எண் வழங்க வேண்டும். ஆதார் எண் பெறாதவர்கள், www.udai.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பித்து, அதன் பதிவு எண்ணை வழங்க வேண்டும். ஆதார் எண் வரும் வரை, வங்கி அல்லது தபால் நிலைய கணக்கு புத்தகம், பான்கார்டு, பாஸ்போர்ட், குடும்ப அட்டை, வாக்காளர் அடையாள அட்டை உள்ளிட்ட, 10 ஆவணங்களில் ஏதேனும் ஒன்றை வழங்க வேண்டும்.
கல்வி நிறுவனங்கள், மாணவியர் ஆதார் அட்டை பெற, தேவையான ஏற்பாடுகளை செய்து கொடுக்க வேண்டும் என, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!