கொடைக்கானல் மலைப்பகுதியில் பட்டா நிலத்தில் உள்ள யுகாலிப்டஸ் மரங்கள் வனத்துறை அனுமதியுடன் வெட்டப்பட்டு அவை தரைப்பகுதிக்கு லாரிகளில் எடுத்துச் செல்லப்படுகிறது.
இதில் கூறப்பட்டுள்ள விதிமுறைகள் பின்பற்றப்படாமல் நுாதனமாக குறைந்த எண்ணிக்கையிலான மரங்களுக்கு அனுமதியைப் பெற்று அருகில் உள்ள நிலங்களில் ஏராளமான மரங்கள் வெட்டப்படுகிறது.
அரசு தரிசு நிலம், டிகேடி நிலங்களில் உள்ள மரங்களும் தப்பவில்லை. இது குறித்து விவசாயிகள் குறைதீர் கூட்டத்திலும் புகார் எழுந்தது.
மலைப் பகுதியில் நடக்கும் மரக்கடத்தலை வனத்துறை அதிகாரிகள் கண்டுகொள்ளாமல் இருப்பதால், இவர்களது ஆசியுடன் இயற்கை வளம் அழிந்து வருகிறது. இது போன்ற நுாதன மோசடியில் கொடைக்கானல் நகர்பகுதி, மேல்மலை பகுதிகளான மன்னவனுார், பூண்டி, வட கவுஞ்சி, வில்பட்டி, அடுக்கம், பூம்பாறை உள்ளிட்ட பகுதிகளில் மரங்கள் வெட்டப்படுகின்றன.
சமீபத்தில் அட்டுவம்பட்டியில் உள்ள அரசு கலை அறிவியல் கல்லுாரியில் நான்கு மரங்களுக்கு ஆர்.டி.ஒ., விடம் அனுமதி பெற்று ஏராளமான மரங்கள் வெட்டப்பட்ட சர்ச்சை எழுந்தது. தொடர்ந்து வனத்துறையினர் நடவடிக்கை எடுக்காது கண்துடைப்பில் ஈடுபட்டனர்.
ஆங்காங்கே அனுமதி பெறாமல் மரங்கள் இரவோடு, இரவாக வெட்டப்படுவதும் , கொடைக்கானல் நாயுடுபுரம் பகுதியில் கிரேன்கள் மூலம் மரங்கள் ஏற்றப்படுகிறது.
இதற்கு முழுமையும் வனத்துறை ஒத்துழைப்பு அளிப்பதால் மரங்கள் ஜோராக கடத்தப்படுகிறது. பெயரளவிற்கு வன பாதுகாப்படையினர் ரோந்து சென்றபோதும் இவை கட்டுப்படுத்தப்படவில்லை.
செண்பகனுார் பகுதியில் போக்குவரத்து ரோட்டில் மரங்கள் வெட்டப்பட்டு அவை பகிரங்கமாக போக்குவரத்துக்கு இடையூராக ஏற்றப்படுகிறது.
மர வியாபாரிகள் , வனத்துறையினர் இடையே ஒருங்கிணைப்பு ஏற்பட்டதால் இவ் விஷயங்கள் வெளியே கசியாமல் சிண்டிகேட் அமைத்து செயல்படுகின்றனர்.
ஊடகத்துறையினரும் மரக்கடத்தலில் ஈடுபடுவதால் வனத்துறையினருக்கு பிரச்னையின்றி வளம் காண்கின்றனர்.
கொடைக்கானலில் அரசு அனுமதியுடன் வெட்டப்படும் மரங்கள் குறித்து நிலங்களில் அதிகாரிகள் ஆய்வு செய்தால் உண்மை நிலை வெளிச்சத்திற்கு வரும். மேலும் அரசு நிலங்களில் கபளிகரம் செய்யப்படும் மரங்கள் குறித்த விவரமும் தெரியவரும்.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!