Advertisement

மூதாட்டி கண்களில் மிளகாய் பொடி தூவி நகை பறித்தவர் கைது

மூதாட்டி கண்களில் மிளகாய் பொடி துாவி நகை பறித்தவர் சிக்கினார்



வியாசர்பாடி : வியாசர்பாடி, பி.வி.காலனியைச் சேர்ந்தவர் பத்மாவதி, 60.

இவர், நேற்று மாலை வீட்டில் தனியாக இருந்தபோது, முகத்தில் 'மப்ளர்' அணிந்து வீட்டிற்கு வந்த மர்ம நபர், பத்மாவதி முகத்தில் மிளகாய் பொடி துாவி, அவரது 4 சவரன் செயினை பறிக்க முயன்றார்.


பத்மாவதி செயினை இறுக்கமாக பிடித்ததால், 3 சவரன் செயின் தப்பியது. 1 சவரன் உடன், மர்ம நபர் வீட்டை தாழ்ப்பாள் போட்டு தப்பினார்.

இது குறித்து, பத்மாவதி பக்கத்து தெருவில் வசிக்கும் தன் மகளுக்கு தகவல் தெரிவிக்க, அவர் வீட்டில் இருந்து பத்மாவதியை மீட்டு, எம்.கே.பி.நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

போலீசாரின் விசாரணையில், பத்மாவதி வீட்டின் பக்கத்து வீட்டில் வசிக்கும் ஆறுமுகம், 43, என்பவர், சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது.

3,000 ரூபாய் கடன் இருந்ததால், அதை அடைப்பதற்காக நகை திருட்டில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து, போலீசார் அவரை கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி நேற்று சிறையில் அடைத்தனர்.

பள்ளி மாணவி கொலை தனியார் ஊழியர் கைது



சென்னாவரம்: திருவண்ணாமலை மாவட்டம், சென்னாவரத்தைச் சேர்ந்தவர் யோகேஸ்வரன், 21; தனியார் நிறுவன ஊழியர். இவரும், அதே பகுதியைச் சேர்ந்த, 10ம் வகுப்பு படித்து வந்த மாணவியும் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. கடந்த, 23ம் தேதி முதல், ரேணுகாவை காணவில்லை. பெற்றோர் புகார்படி, வந்தவாசி போலீசார் மாணவியை தேடினர்.

மாணவி மொபைல் போனை ஆய்வு செய்த போது, கடைசியாக அவர் யோகேஸ்வரனிடம் பேசியது தெரியவந்தது. அவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அதில், இருவருக்கும் தகராறு ஏற்பட்டதில், ரேணுகாவின் துப்பட்டாவால், அவரின் கழுத்தை நெரித்து கொன்று, சடலத்தை முள்வேலியில் வீசியதாக தெரிவித்தார்.

மாணவி சடலத்தை மீட்ட போலீசார், யோகேஸ்வரனை கைது செய்தனர்.

பஸ்சில் சந்தனக்கட்டை கடத்தியவர் கைது



தஞ்சாவூர் : நேற்று அதிகாலை கும்பகோணம் பஸ் ஸ்டாண்ட் பகுதியில் போலீசார் ரோந்து சென்ற போது, சந்தேகப்படும்படி சூட்கேசுடன் நின்ற ஒருவரை பிடித்து விசாரித்தனர். அவர், சந்தனக் கட்டைகளை சூட்கேஸில் மறைத்து வைத்து, சென்னைக்கு பஸ்சில் கடத்த முயன்றது தெரிந்தது.

போலீசார் அவரை, வனத்துறை ரேஞ்சர் பொன்னுசாமியிடம் ஒப்படைத்தனர்.

வனத்துறையினர் நடத்திய விசாரணையில் அவர், தஞ்சாவூர், நாஞ்சிக்கோட்டை பகுதியைச் சேர்ந்த ராம்குமார், 65, என்பதும், இலுப்பக்கோரை, ஒத்தவீடு கிராமத்தில் இருந்த சந்தன மரத்தை வெட்டி, சூட்கேசில் சென்னைக்கு கடத்திச் செல்ல முயன்றதும் தெரிய வந்தது.

ராம்குமார் வைத்திருந்த 1.50 லட்சம் ரூபாய் மதிப்பிலான, 31 கிலோ சந்தனக் கட்டைகளை பறிமுதல் செய்து, அவரை கைது செய்தனர்.

போதையில் 4 பேருக்கு வெட்டு 4 சிறுவர்கள் உட்பட 5 பேர் கைது



மானாமதுரை : மானாமதுரையில் கஞ்சா, மது போதையில் இருந்த 4 சிறுவர்கள் உட்பட 5 பேர் மது குடிக்க பணம் இல்லாததால் வைகை ஆற்றுக்குள் சென்றவர்களை கண் மூடித்தனமாக விரட்டி, விரட்டி வெட்டினர். 5 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

மானாமதுரை வைகை ஆறு மேம்பாலத்திற்கு கீழே கஞ்சா மற்றும் மது போதையில் இருந்த 4 சிறுவர்கள் உட்பட 5 பேருக்கு மேலும் மது குடிக்க பணம் இல்லை.

இதனால் அவ்வழியாக வந்த விஜி 50, பாண்டியன் 63, குருசாமி 73, செல்லவேல் 60, ஆகிய 4 பேரை கண்மூடித்தனமாக கத்தி மற்றும் அரிவாளால் விரட்டி, விரட்டி வெட்டனர்.

இதில் காயமடைந்த அவர்கள் மானாமதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். சம்பவ இடத்திற்கு சென்ற மானாமதுரை போலீசார் 5 பேரையும் கைது செய்தனர்.

அண்ணன் வீட்டில் தங்கிய நண்பரை கொன்ற தம்பி



சுப்ரமண்யாபுரா: அண்ணன் வீட்டில் தங்கியிருந்த அவரது நண்பரை கொலை செய்து விட்டு, தப்பியோடிய தம்பியை, போலீசார் தேடுகின்றனர்.

பெங்களூரின் ஜெ.பி.நகரில் வசித்தவர் கணேஷ், 45. இவர், 'ஹோம் கேர்' ஒன்றில் பணியாற்றினார். இவரது நண்பர் மல்லேஷ், 40, சார்வபவும நகரின் சாரதா நகரில் வசிக்கிறார். ஏதோ காரணத்தால், கணேஷ் தன் வீட்டில் வசிக்காமல், நண்பர் மல்லேஷின் வீட்டில் வசித்து வந்தார்.

இதே வீட்டில், மல்லேஷின் தம்பி நாராயணா, 35, என்பவரும் தங்கியுள்ளார். இவருக்கு கணேஷ் தங்களுடன் தங்கியது பிடிக்கவில்லை. 'என் அண்ணன் வீட்டில், நீ இருக்க வேண்டாம். உன் வீட்டுக்கு செல்' என தினமும் திட்டி, தகராறு செய்தார்.

இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு, மல்லேஷ் வெளியே சென்றிருந்தார். கணேஷ் வீட்டில் இருந்தார்.

அப்போது அங்கு வந்த நாராயணா, கணேஷை பார்த்து கோபம் அடைந்தார். 'இன்னும் ஏன் இங்கிருக்கிறாய்' என, கேட்டு சண்டை போட்டார். இருவருக்கும் கைகலப்பு ஏற்பட்டது.

இதே கோபத்தில் இருந்த நாராயணா, அதிகாலை 2:30 மணியளவில், இரும்புத் தடியால் கணேஷை பலமாக தாக்கிவிட்டு தப்பியோடினார். சத்தம் கேட்டு வந்த அக்கம், பக்கத்தினர் காயத்துடன் விழுந்து கிடந்த கணேஷை, மருத்துவமனையில் சேர்த்தனர். சிகிச்சை பலனளிக்காமல் அவர் உயிரிழந்தார்.தப்பிய நாராயணாவை சுப்ரமண்யபுரா போலீசார் தேடி வருகின்றனர்.

நமத்துபோன பிரியாணி கொத்தனார் தற்கொலை



அயப்பாக்கம் : அயப்பாக்கம், தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பைச் சேர்ந்தவர் கார்த்திக், 47; கொத்தனார்.

இவருக்கு மனைவி, இரண்டு மகள், மகன் உள்ளனர். நேற்று முன்தினம் இரவு 9:45 மணி அளவில், மது போதையில், 'பிரியாணி சூடாக இல்லை' எனக்கூறி மனைவியுடன் தகராறில் ஈடுபட்டுள்ளார்.பின், மன உளைச்சலில் இருந்த அவர், தனி அறைக்கு சென்று துாக்கிட்டு தற்கொலை செய்தார். திருமுல்லைவாயில் போலீசார் விசாரிக்கின்றனர்.

டூ - வீலரில் கஞ்சா கடத்தல் இருவருக்கு 5 ஆண்டு சிறை



சென்னை : திருவொற்றியூரில், 2020 அக்., 18ல் சாத்தாங்காடு போலீசாரின் வாகன சோதனையில் ஈடுபட்டனர். இதில், - வீலரில் கஞ்சா கடத்திய திருவல்லிக்கேணியைச் சேர்ந்த சண்முகம், 31, திருவொற்றியூரைச் சேர்ந்த சரவணன், 34, ஆகியோர் சிக்கினர்.

அவர்கள் அளித்த வாக்குமூலத்தின்படி, திருவள்ளூர், ஊத்துக்கோட்டையைச் சேர்ந்த சிவா, 42, என்பவரையும், போலீசார் கைது செய்தனர்; 9 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

வழக்கு, போதைப்பொருள் தடுப்பு வழக்குகளுக்கான சிறப்பு நீதிமன்ற முதன்மை நீதிபதி சி.திருமகள் முன் விசாரணைக்கு வந்தது. குற்றஞ்சாட்டப்பட்ட நபர்கள் தரப்பில், வழக்கறிஞர் டி.எஸ்.சீனிவாசனும், போலீசார் சார்பில் சிறப்பு அரசு வழக்கறிஞர் கே.ஜெ.சரவணன் ஆஜராகினர்.

இரு தரப்பு வாதங்களுக்கு பின், நீதிபதி பிறப்பித்த தீர்ப்பு:

சண்முகம், சரவணன் மீதான குற்றச்சாட்டுகள் சந்தேகத்துக்கு இடமின்றி, அரசு தரப்பு நிரூபித்துள்ளது. எனவே, அவர்களுக்கு தலா 5 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனையும், தலா 50,000 ரூபாய் அபராதமும் விதிக்கப்படுகிறது.

வழக்கில் சேர்க்கப்பட்டுள்ள சிவா மீதான குற்றச்சாட்டுக்கு எதிராக ஆவணங்களை, அரசு தரப்பு தாக்கல் செய்யாததால், அவர் வழக்கில் இருந்து விடுதலை செய்யப்படுகிறார்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.



வாசகர் கருத்து (2)

  • தமிழ் மைந்தன் - coiambatore,இந்தியா

    இதெல்லாம் ஸ்டாலின் கணக்கில் வராது?

  • அப்புசாமி -

    மூதாட்டி மீது மிள்காய்பொடி தூவினவனை உடம்பு முழுக்க மிளகாய்பொடி தூவி ஓட உடணும். இந்த ஜெயில் போன்ற விஷயங்கள் உதவாது.

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement