சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள முட்டுக்காட்டில், 60 ஏக்கரில், பன்னாட்டு அரங்கம் கட்டப்பட இருப்பதாகவும், இந்த இடம், ஆளவந்தார் அறக்கட்டளைக்கு சொந்தமானது என்றும், செய்திகள் வெளியாகின.
வன்னியர் சமுதாயத்தைச் சேர்ந்த ஆளவந்தார், ஆன்மிக பணிகளுக்காக, 1550 ஏக்கர் நிலங்களை வழங்கினார். இந்நிலையில், 'ஆன்மிகம், கல்வி தவிர மற்ற பணிகளுக்காக, ஆளவந்தார் அறக்கட்டளை நிலத்தை பயன்படுத்தக் கூடாது' என, பா.ம.க., நிறுவனர் ராமதாஸ், அரசுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ஆளவந்தார் அறக்கட்டளை நிலத்தில், பன்னாட்டு அரங்கம் கட்டும் முடிவை கைவிடாவிட்டால், தி.மு.க.,வுக்கு கடும் நெருக்கடி கொடுக்கும் வகையில் போராட்டம் நடத்த, ராமதாசும், அன்புமணியும் முடிவு செய்துள்ளதாக, பா.ம.க.,வினர் தெரிவிக்கின்றனர்.
இது தொடர்பாக, ராமதாஸ் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: அரசின் முடிவு கடும் கண்டனத்திற்குரியது. பன்னாட்டு அரங்கம் அமைக்க, சென்னையைச் சுற்றி, அரசுக்கு சொந்தமான ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் உள்ளன. அவற்றில் பன்னாட்டு அரங்கத்தை கட்டாமல், ஆளவந்தார் அறக்கட்டளை நிலத்தில் கட்டக் கூடாது.கிழக்குக் கடற்கரை சாலையில், மிகவும் முக்கியமான இடத்தில் உள்ள ஆளவந்தார் அறக்கட்டளை நிலம், ஆட்சியாளர்களின் கண்களை உறுத்திக் கொண்டே இருக்கிறது. அதில் திரைப்பட நகரம், சூரிய ஒளி மின்சாரம் உள்ளிட்ட திட்டங்கள் செயல்படுத்த, அரசு திட்டமிட்டது.
இதை கண்டித்து, ஜூலை 12ல், முதல்வர் ஸ்டாலினுக்கு கடிதம் எழுதியிருந்தேன். அதை தொடர்ந்து, திரைப்பட நகரம் பூந்தமல்லிக்கு அருகே மாற்றப்பட்டதாக அறிகிறேன். ஆளவந்தாரின் நிலங்களை காக்க வேண்டிய அரசே, அவற்றை பறிக்க துடிக்க கூடாது.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
தமிழக பா.ஜ., செயலர் அஸ்வத்தாமன் கூறியதாவது:வன்னிய சத்திரிய குலத்தில் பிறந்த ஆளவந்தார், ஒரு வள்ளல். ஆயிரக்கணக்கான ஏக்கர் சொத்துக்களை, வைஷ்ணவ சேவைகளுக்காக எழுதி வைத்துள்ளார்.ஏற்கனவே, ஆளவந்தார் அறக்கட்டளைக்கு சொந்தமான நிலங்களை எடுத்து, அரசு திட்டங்கள் நிறைவேற்றப்பட்டு உள்ளன; மசூதியும் கட்டப்பட்டுள்ளது. அதை அப்புறப்படுத்த, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஆக்கிரமிப்பில் சிக்கியுள்ள ஆளவந்தார் அறக்கட்டளை சொத்துக்களை மீட்க, எந்த நடவடிக்கையும் எடுக்காத தமிழக அரசு, அந்த சொத்துக்களை அபகரிப்பதை நிறுத்த வேண்டும்.தமிழகத்தில் எந்த ஒரு அரசு திட்டம் தொடங்குவது என்றாலும், முதலில் கோவில், ஹிந்து அறக்கட்டளைகளுக்கு சொந்தமான சொத்துக்களை குறிவைக்கும் கேவலமான பழக்கத்தை, தி.மு.க., அரசு நிறுத்த வேண்டும்.தேவாலயங்களுக்கும், மசூதிகளுக்கும் சலுகை களை வழங்கும் தி.மு.க., அரசு, ஹிந்துக்கள் என்று வந்து விட்டால், அவர்களது சொத்துக்களை தின்று தீர்ப்பதிலேயே குறியாக இருப்பது ஏன்?இவ்வாறு அவர் கூறினார்.
வாசகர் கருத்து (10)
செத்தும் கொடுத்தான் சீதக்காதின்னு சொல்லுவாங்க. செத்தும் கெடுக்கறதுக்குன்னு ஒருத்தர் தமிழ்நாட்ல பொறந்தாரு.
மருத்துவர் ஐயாவுக்கு வாழ்த்துக்கள். கழகத்தை முட்டுக்கட்டை போட்டு நிறுத்தும் தீரம் இவரிடம் உள்ளது.
ஆளவந்தார் இடம் மாற்றான் தோட்ட மல்லிகை😉.
நான் வன்னியர் இல்லை, ஆனால் ஒவ்வொரு முறையும் கிழக்கு கடற்கரை சாலையில் செல்லும் போதெல்லாம் பராமரிப்பு இல்லாமல் இருக்கும் பரந்து விரிந்து கிடக்கும் ஆளவந்தார் அறகட்டளை இடத்தை பார்க்கும் போது மனம் வேதனை படும். நல்ல ஆன்மிக நோக்கத்திற்காக கொடுத்த இடம். பேய் ஆட்சி செய்தால் பிணம் தின்னும் சாத்திரம் என்ற பழமொழி ஞாபகத்திற்கு வருகிறது.
சொந்தமான இடத்தை எடுத்துக்க வேண்டியதுதானே?