மனித நேய டாக்டருக்கு குவிகிறது பாராட்டு
தென்காசி மாவட்டம், செங்கோட்டை பஸ் ஸ்டாண்ட் பகுதியில் மனநலம் பாதிக்கப்பட்ட சுமார் 30 வயது மதிக்கத்தக்க வாலிபர் மிகவும் பரிதாப நிலையில் இருந்தார்.
பொதுமக்கள் மருத்துவ துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். சமூக வலைதளங்களிலும் தகவல் பரவியது.
செங்கோட்டை அரசு மருத்துவமனை தலைமை டாக்டர் ராஜேஷ் கண்ணன், மனநலம் பாதிக்கப்பட்ட அந்த வாலிபரை மீட்டு, ஆஸ்பத்திரிக்கு அழைத்து வந்தார். அவருக்கு போதிய சிகிச்சை அளித்தார். தொடர்ந்து, வாலிபருக்கு, டாக்டர் புத்தாடை வழங்கினார். மனநலம் பாதிக்கப்பட்ட வாலிபர், ஆஸ்பத்திரியில் பராமரிக்கப்பட்டு வருகிறார்.
மனநலம் பாதிக்கப்பட்ட நபர் குறித்த எந்த தகவலும் தெரியவில்லை. தகவலறிந்த தென்காசி கலெக்டர் ரவிச்சந்திரன், சுகாதாரத்துறை அதிகாரிகள், செங்கோட்டை டாக்டரை பாராட்டினர்.
இதுகுறித்த தகவல் சமூக வலைதளங்களிலும் பரவி வருவதால், பொதுமக்களும் பாராட்டு தெரிவித்துள்ளனர்.
மனநலம் பாதிக்கப்பட்ட நபர் குறித்து தகவல் தெரிந்தால், செங்கோட்டை போலீஸ் ஸ்டேஷனில் புகார் தெரிவிக்கலாம் என, போலீசார் தெரிவித்துள்ளனர்.
செங்கோட்டை கேரளாவின் எல்லை பகுதியாகும். இதனால் கேரளாவில் இருந்து ஏராளமானோர் மனநலம் பாதிக்கப்பட்டவர்களை பஸ் அல்லது ரயில் மூலம் செங்கோட்டையில் இறக்கி விட்டுச் செல்கின்றனர்.
இவ்வாறு ஏராளமானோர் மனநலம் பாதிக்கப்பட்ட நிலையில் மிகவும் பரிதாபமாக சாலையில் திரிகின்றனர்.
இதுபோன்ற நபர்களை அடையாளம் கண்டு, அவர்களை காப்பகத்தில் சேர்க்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!