சேத்துப்பட்டு, இலவச சேலை வாங்கித் தருவதாக மூதாட்டிக்கு ஆசை காட்டி, மூன்று சவரன் நகை, 44 ஆயிரம் ரூபாயை,'ஆட்டை'யை போட்ட ஆட்டோ ஓட்டுனரை, போலீசார் கைது செய்தனர்.
திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி, ஆர்த்தமங்கலம் பகுதியில் வசிப்பவர் சரோஜா 80. இவர் சென்னையில் வசித்த போது, அமைந்தகரை தாலுகாவில், அரசின் முதியோர் உதவித்தொகை பெற்று வந்தார்.
தற்போதும், மாதம் ஒருமுறை சென்னை வந்து, உதவித்தொகை பெற்றுச் செல்வார்.
இதன்படி, கடந்த 23ம் தேதி உதவித்தொகை வாங்கிய சரோஜா, மதியம் 3:30 மணியளவில், அமைந்தகரை பூந்தமல்லி நெடுஞ்சாலையில், பேருந்துக்காக காத்திருந்தார்.
அப்போது, ஆட்டோவில் வந்த மர்ம நபர், 'மார்வாடி' ஒருவரின் வீட்டில் இலவச சேலை மற்றும் பணம் வழங்குவதாக ஆசை வார்த்தை கூறியுள்ளார்.
இதை நம்பி, மூதாட்டி அவருடன் ஆட்டோவில் செல்லும் போது, 'நகை அணிந்திருந்தால் பணம் தர மாட்டார்கள்' எனக் கூறியுள்ளார்.
உடனே மூதாட்டி, தான் அணிந்திருந்த மூன்று சவரன் தங்க நகைகள், பையில் வைத்திருந்த 44 ஆயிரம் ரூபாயை மர்ம நபரிடம் கொடுத்துள்ளார்.
சேத்துப்பட்டு, ஹாரிங்டன் சாலையில் மூதாட்டியை இறக்கிய அவர், காத்திருக்கும்படி கூறிவிட்டுச் சென்றுள்ளார்.
நீண்ட நேரமாகியும் அவர் திரும்பாததால், தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த மூதாட்டி, சேத்துப்பட்டு போலீசில் புகார் அளித்தார்.
தனிப்படை போலீசார் விசாரணையில், சம்பவத்தில் ஈடுபட்டது திருவள்ளூர் மாவட்டம், சோழவரம், எடப்பாளையத்தைச் சேர்ந்த சுந்தர், 34, என தெரிந்தது.
ஆட்டோ ஓட்டுனரான இவர், இதேபோல் பல இடங்களில், மூதாட்டிகளிடம் 'ஆட்டை'யை போட்டது தெரிந்தது.
இதையடுத்து, போலீசார் அவரை நேற்று கைது செய்து, பணம் மற்றும் நகைகளை பறிமுதல் செய்து, சிறையில் அடைத்தனர். இவர் மீது, பல குற்ற வழக்குகள் உள்ளன.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!