அனுமதி பெறாத கட்டடங்களை திறந்து வைத்தார் அமைச்சர் நேரு
திருநெல்வேலி: திருநெல்வேலி மாநகராட்சியில், நகர் ஊரமைப்பு துறை உட்பட பல்வேறு துறைகளின் அனுமதி பெறாமல் கட்டப்பட்ட வர்த்தக மையம் உள்ளிட்ட, 'ஸ்மார்ட் சிட்டி' திட்ட கட்டடங்களை அமைச்சர் நேரு திறந்து வைத்தார்.
திருநெல்வேலி மாநகராட்சியில், 2017ல் ஸ்மார்ட் சிட்டி திட்டம் அறிவிக்கப்பட்டது. இந்த திட்டத்தின் கீழ், 1,000 கோடி ரூபாய் செலவில் பஸ் ஸ்டாண்ட், பூங்காக்கள், வர்த்தக மையம், மார்க்கெட் வளாகம் ஆகியவை கட்டப்பட்டுள்ளன.
இந்த கட்டடங்களுக்கு நகர ஊரமைப்பு துறை அனுமதி பெறப்படவில்லை. மேலும், 18 மீட்டர் உயரமுள்ள ஜங்ஷன் பஸ் ஸ்டாண்ட் கட்டடத்துக்கும் தீயணைப்புத்துறை, மாசுக் கட்டுப்பாட்டு வாரியம், நெடுஞ்சாலைத் துறை மற்றும் சுகாதாரத்துறை என பல்வேறு துறைகளில் அனுமதி பெறப்படவில்லை.
பஸ் ஸ்டாண்ட் கட்டும் முன், பொதுமக்களிடம் காண்பிக்கப்பட்ட பஸ் ஸ்டாண்ட் மாதிரி வடிவம் வேறு மாதிரி இருந்தது. தற்போது பஸ் ஸ்டாண்டுக்குரிய வசதிகள் இல்லாமல் கல்லுாரி வளாகம் போல கட்டப்பட்டுள்ளது.
இதுகுறித்து, சமூக ஆர்வலர் பெர்டின் ராயன் தகவல் பெறும் உரிமைச் சட்டத்தில் பெற்ற பதிலில், மாசுக் கட்டுப்பாட்டு வாரியம், நெடுஞ்சாலைத்துறை, நகர் ஊரமைப்பு துறை, போலீஸ் என எந்த துறைகளிடமிருந்தும் முன் அனுமதி பெறவில்லை என தெரிய வந்துள்ளது.
நகர ஊரமைப்பு இயக்க அதிகாரிகள் ஏற்கனவே நடத்திய ஆய்வில், பல்வேறு விதிமுறைகள் மீறப்பட்டு இருப்பதாக தகவல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதே காரணங்களை காட்டி, விண்ணப்பிக்கும் போது அதிகாரிகள் கொடுத்த தகவலுக்கும், தற்போது உள்ள கட்டுமானத்துக்கும் முரண்பாடுகள் இருப்பதாக, தீயணைப்பு துறைனரும் அனுமதி வழங்க மறுத்துள்ளனர். இந்த தகவல்கள் தகவல் அறியும் உரிமைச் சட்டம் வாயிலாக தெரிய வந்துள்ளது.
இந்நிலையில், நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் நேரு, ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் கட்டடங்களை திறந்து வைத்தார். ஏற்கனவே திறந்து அரசு இலக்கிய விழாக்கள் நடத்தப்பட்ட நேருஜி கலையரங்கத்தை அவர் மீண்டும் திறந்து வைத்தார்.
வர்த்தக மையம் உள்ளிட்ட அனுமதி பெறாத கட்டடங்களையும் அமைச்சர் திறந்து வைத்தார். ஐகோர்ட்டில் வழக்கு நிலுவையில் இருப்பதால், ஐங்ஷன் பஸ் ஸ்டாண்ட் திறப்பது இப்போதைக்கு சாத்தியம் இல்லை.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!