எதிர்க்கட்சி கவுன்சிலர்கள் கெரோ தி.மு.க., நகராட்சி தலைவி ஓட்டம்
தென்காசி: செங்கோட்டை நகராட்சி கூட்டத்தில் அ.தி.மு.க., மற்றும் பா.ஜ., கவுன்சிலர்கள் 'கெரோ' செய்ததால் தி.மு.க., நகராட்சி தலைவி பின்வாசல் வழியாக ஓட்டம் பிடித்தார்.
தென்காசி மாவட்டம் செங்கோட்டை நகராட்சி தலைவியாக தி.மு.க.,வைச் சேர்ந்த ராமலட்சுமி பதவி வகிக்கிறார்.
செங்கோட்டை நகராட்சியின் 24 கவுன்சிலர்களில் அ.தி.மு.க., - 10, பா.ஜ., - 5 எதிர்க்கட்சியினர் பெரும்பான்மையாக உள்ளனர். சுயேச்சையாக போட்டியிட்டு வெற்றி பெற்ற ராமலட்சுமியை அ.தி.மு.க., மற்றும் பா.ஜ., கவுன்சிலர்கள் நகராட்சித் தலைவியாக தேர்வு செய்தனர்.
ஆனால் அவர், தி.மு.க.,வில் சமீபத்தில் இணைந்தார். அதன்பிறகு, நகராட்சி கூட்டம் நேற்று முன்தினம் நடந்தது. கூட்டத்தில் பேசிய அ.தி.மு.க., கவுன்சிலர் ஜெகன், “சில நாட்களுக்கு முன் நகராட்சியில் ஏற்பட்ட மோதல் தொடர்பாக நகராட்சி தலைவி ராமலட்சுமி மீது போலீஸ் வழக்குப் பதிவு செய்துள்ளது.
அந்த வழக்கில் அவர் இன்னும் ஜாமின் கூட பெறவில்லை.
எனவே, கூட்டம் நடத்தக் கூடாது. மக்கள் பிரச்னை ஏராளமாக உள்ள நிலையில், உப்புசப்பில்லாத தீர்மானங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன,” என்றார்.
ஜெகனின் கருத்துக்கு பெரும்பான்மையான கவுன்சிலர்கள் ஆதரவு தெரிவித்தனர்.
நகராட்சி தலைவி ராமலட்சுமி, “தொடர்ந்து மூன்று கூட்டங்களை நடத்தவில்லை என்றால் கவுன்சிலர்களின் பதவி பறிபோய்விடும்,”என்றார். அவரது பேச்சுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த அ.தி.மு.க. மற்றும் பா.ஜ. கவுன்சிலர்கள் ராமலட் சுமியை 'கெரோ' செய்தனர்.
இந்த சம்பவத்தை தி.மு.க.,வினர் நகராட்சி கூட்ட மன்றத்துக்குள் புகுந்து மொபைல் போனில் 'வீடியோ' எடுத்த னர். இதையடுத்து,கவுன்சிலர்கள் மொபைல் போன்களை பறித்தனர்.
இதனால், நகராட்சி கூட்ட மன்றத்தில் மோதல் ஏற்படும் சூழல் ஏற்பட்டது. போலீசார் கூட்ட அரங்கினுள் புகுந்தனர். அந்த களேபரத்தில் பின்வாசல் வழியாக நகராட்சி தலைவி ராமலட்சுமி தப்பி ஓடினார்.
நகராட்சி தலைவி தன் பதவியை ராஜினாமா செய்ய வேண்டுமென அ.தி.மு.க, மற்றும் பா.ஜ., கவுன்சிலர்கள் கோஷமிட்டனர்.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!