இதையடுத்து நடந்த சமரசப்பேச்சில், நிவாரணமாக ஆறு லட்சம் ரூபாயும், அவரது மகளுக்கு பேரூராட்சியில் வேலையும் வழங்க அதிகாரிகள் ஒப்புக் கொண்டனர்.
துாத்துக்குடி மாவட்டம் உடன்குடி பேரூராட்சியில் சுடலைமாடன் 55, என்பவர் தூய்மைப் பணியாளராக பணியாற்றினார்.
அவருக்கு தூய்மைப் பணி மேற்பார்வையாளர்பதவி உயர்வு வழங்க தற்போது பேரூராட்சியின் தலைவியாக இருக்கும் ஹுமைராவின் மாமியாரும், பேரூராட்சி முன்னாள் தலைவியுமான ஆயிஷா லஞ்சம் கேட்டார். சுடலைமாடன் தன்னிடம் பணம் இல்லை எனக் கூறியுள்ளார்.
இதில் ஏற்பட்ட வாக்குவாதத்தில் அவரை ஆயிஷா அவதுாறாக பேசியுள்ளார். இதனால் மனமுடைந்த சுடலைமாடன், மார்ச் 17ல் விஷம் குடித்தார். துாத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த சுடலை மாடன் நேற்று முன்தினம் காலை இறந்தார்.
குலசேகரப்பட்டினம் போலீசார் ஆயிஷா, செயல் அலுவலர் பாபு ஆகியோர் மீது வன்கொடுமை சட்டப்பிரிவில் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
போராட்டம்
பேரூராட்சி முன்னாள் தலைவி மற்றும் செயல் அலுவலரை கைது செய்ய வேண்டும். தற்போதைய பேரூராட்சி தலைவி ஹுமைரா மீதும் வழக்குப்பதிவு செய்து பதவி நீக்கம்வேண்டும். சுடலை மாடன் குடும்பத்துக்கு இழப்பீடாக 50 லட்சம் ரூபாய் வழங்க வேண்டும்.
அவரது மகளுக்கு அரசுப் பணி வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி துாய்மைப் பணியாளர்கள் மற்றும் சுடலை மாடன் உறவினர்கள் உடன்குடியில் போராட்டம் நடத்தினர்.
அவரது உடலை பிரேத பரிசோதனைக்கு பிறகு பெற்றுக் கொள்ளவும் மறுத்தனர்.
இந்நிலையில், தூத்துக்குடி எஸ்.பி., பாலாஜி சரவணன் தலைமையில் நடந்த சமரசப் பேச்சில், சுடலை மாடன் மகளுக்கு, சாத்தான்குளம் பேரூராட்சியில் அரசுப் பணி வழங்க முடிவு செய்யப்பட்டது. இழப்பீடாக 6 லட்சம் ரூபாய் வழங்கப்பட்டது.
வழக்குப்பதிவு செய்யப்பட்ட இருவரும் விரைவில் கைது செய்யப்படுவர் என எஸ்.பி., வாக்குறுதி அளித்ததால், நேற்று உடலைப் பெற்று இறுதிச் சடங்குகள் செய்தனர்.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!