தோட்டா வெடித்து பைக்குகள் சேதம் மூடி மறைக்கும் வனத்துறையால் சர்ச்சை
சேலம் மாவட்டம், காடையாம்பட்டி தாலுகாவில், டேனிஷ்பேட்டை வனச்சரகம் உள்ளது. அங்கு காடையாம்பட்டி, தின்னப்பட்டி, தொப்பூர் பிரிவுகள் என, பல ஆயிரம் ஏக்கரில் காப்புக்காடு உள்ளது.
டேனிஷ்பேட்டை வனச்சரகராக தங்கராஜ் உட்பட, வன காப்பாளர், வனக் காவலர் என, 20க்கும் மேற்பட்டோர் உள்ளனர்.
கடந்த, 5ம் தேதி அதிகாலை, 3:00 மணிக்கு, தின்னப்பட்டி பிரிவு வெட்டுக்காடு பகுதியில், விலங்குகளை வேட்டையாடும் கும்பலை பிடிக்க, வன காவலர் கண்ணன், உள்ளூரைச் சேர்ந்த ஐந்து பேர் உதவியுடன் சென்றார்.
அப்போது நாட்டுத் துப்பாக்கியுடன் இரு பைக்குகளில் வந்த வேட்டை கும்பலை, தடுத்து நிறுத்தி பிடிக்க முயன்றனர். அப்போது, கும்பலுக்கும், வனத்துறையினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
துப்பாக்கியில் இருந்து தோட்டா வெடித்து சிதறிய, 'பால்ரஸ்' குண்டுகளால், கண்ணனின் 'ஹீரோ ஹோண்டா' பைக், கும்பலைச் சேர்ந்த ஒருவரது பைக் சேதமாகின. இதையடுத்து, துப்பாக்கியுடன் மர்ம நபர் ஓட்டம் பிடித்தார்.
தின்னப்பட்டி சசி, 21, கஞ்சமலை கார்த்தி, 22, ஆகிய இருவரை வனத்துறையினர் விசாரித்தனர்.
ஆனால், துப்பாக்கி சூடு சம்பவத்தை மறைத்து, பிடிபட்ட இருவர் மீதும், கண்ணி வைத்து வேட்டையாட வந்ததாக வழக்குப்பதிந்து, தலா, 40 ஆயிரம் ரூபாய் அபராதம் வசூலித்து அனுப்பினர்.
இந்த நடவடிக்கை வனத்துறை அலுவலர்களிடையே சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து உயர் அதிகாரிகளுக்கு வன ஊழியர்கள் புகார் அனுப்பியுள்ளனர்.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!