சிவன்மலை தைப்பூச தேரோட்டம் கோலாகல துவக்கம்: ஆயிரக்கணக்கான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர்
திருப்பூர் மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற கோவில்களில் ஒன்றான, காங்கேயத்தை அடுத்த சிவன்மலை சுப்ரமணியசுவாமி கோவிலில், தைப்பூச தேரோட்டம் நேற்று நடந்தது. விழாவையொட்டி அதிகாலை, 3:30 மணிக்கு பால், தயிர், பன்னீர், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட திரவியங்களால், சுவாமிக்கு அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து வேல் மற்றும் சேவற்கொடி கொண்டு, தேவியருடன் சிறப்பு அலங்காரத்தில் காலை, 6:00 மணிக்கு தேருக்கு சுவாமி எழுந்தருளினார். மாலை, 4:00 மணிக்கு தேர் வடம் பிடித்தல் நிகழ்ச்சி நடந்தது.
செய்திதுறை அமைச்சர் சாமிநாதன், ஈரோடு எம்.பி., கணேசமூர்த்தி, திருப்பூர் கலெக்டர் வினீத், திருப்பூர் இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் குமரதுரை, தாராபுரம் ஆர்.டி.ஓ., குமரேசன், சிவன்மலை உதவி ஆணையர் அன்னக்கொடி (பொறுப்பு), திருப்பூர் தி.மு.க., தெற்கு மாவட்ட செயலாளர் இல.பத்மநாபன், காங்கேயம் சேர்மன் மகேஷ்குமார், துணை சேர்மன் ஜீவிதா ஜவஹர், சிவன்மலை ஊராட்சி தலைவர் துரைசாமி மற்றும் அறநிலையத்துறை அதிகாரிகள், வடம் பிடித்து தேர் இழுக்க, பக்தர்களின் அரோகரா கோஷங்களுக்கு மத்தியில், கிரிவலப்பாதையில் அசைந்தாடியபடி திருத்தேர் உலா வந்தது. 200 மீட்டர் துாரம் இழுக்கப்பட்டு நடுவீதியில், மாலை, 4:43 மணிக்கு தேர் நிலை நிறுத்தப்பட்டது. இன்று, நாளையும் கிரிவல பாதையை தேர் சுற்றி வந்து நிலை சேரும்.
தேரோட்டத்தில் திருப்பூர், காங்கேயம், வெள்ளகோவில், ஊதியூர், தாராபுரம், பல்லடம், குண்டடம் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். ஏராளமான பக்தர்கள் காவடி, தீர்த்தக்குடம் எடுத்தும் பாதயாத்திரையாகவும் வந்தனர்.
விழாவை முன்னிட்டு நுாற்றுக்கும் மேற்பட்ட 'சிசிடிவி' கேமராக்கள் பொருத்தப்பட்டன. ௧௫௦க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!