Advertisement

செய்திகள் சில வரிகளில்... ஈரோடு

மண்பாண்ட தொழிலாளர்
காங்., கட்சிக்கு ஆதரவு

இடைத்தேர்தலில் காங்., கட்சிக்கு ஆதரவு வழங்குவதாக, தமிழ்நாடு மண்பாண்ட தொழிலாளர் (குலாலர்) சங்கம் தெரிவித்தது. மாநில தலைவர் சேம.நாராயணன் கூறியதாவது: விநாயகர் சதுர்த்தி, கார்த்திகை மாத தீப விழாக்களின்போதும், மழையால் ஏற்படும் பாதிப்பை போக்க மழைக்கால நிவாரண நிதியாக, 5,000 ரூபாய் என முதல்வர் அளித்துள்ளார். எனவே இந்த ஆட்சிக்கு வலுச்சேர்க்கும் வகையில், காங்., வேட்பாளர் இளங்கோவனை ஆதரிக்கவும், பிரசாரம் செய்யவும் உள்ளோம். இவ்வாறு கூறினார்.


கொங்கலம்மன் கோவில் தேரோட்ட விழாகொங்கலம்மன் கோவில் தேரோட்டம், ஈரோட்டில் நேற்று பக்தி பரவசமாக நடந்தது.
ஈரோடு, கொங்கலம்மன் கோவிலில், நடப்பாண்டு தைப்பூச தேர்த்திருவிழா கடந்த மாதம், 27ம் தேதி பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. 28ம் தேதி கொடியேற்றம் நடந்தது. தொடர்ந்து மாலையில் சிறப்பு அலங்காரம், பூஜைகள் நடந்தன. கடந்த, 3ம் தேதி பொங்கல் வைபவம், மாவிளக்கு ஏற்றும் நிகழ்ச்சி நடந்தது.
முக்கிய நிகழ்வான தேரோட்டம் நேற்று நடந்தது. நுாற்றுக்கணக்கான பக்தர்கள் வடம் பிடித்து தேர் இழுத்தனர். ஆர்.கே.வி.ரோடு, மணிக்கூண்டு வழியாக சென்ற தேர், மீண்டும் கோவிலை அடைந்தது.


நிழற்கூடத்தை மறித்து'போலீஸ் செக்போஸ்ட்'
ஈரோட்டில், பயணிகள் நிழற்கூடத்தை மறித்து, போலீசார் செக்போஸ்ட் அமைத்துள்ளனர். இதனால் பயணிகள் வெயிலில் நிற்கின்றனர்.
கிழக்கு தொகுதி இடைத்தேர்தலை ஒட்டி, போலீசார் சார்பில் பல்வேறு இடங்களில், தற்காலிகமாக செக்போஸ்ட் அமைத்து, வாகன தணிக்கையில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் ஈரோடு-பெருந்துறை பிரதான சாலையில் குமலன்குட்டையில், பயணிகள் நிழற்கூடத்தை மறைத்து, ஷாமியானா போட்டு செக்போஸ்ட் அமைத்துள்ளனர். இதனால் பஸ் ஏற வரும் பயணிகள், வெயிலில் காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

ரூ.14.47 லட்சம் பறிமுதல்
ஈரோடு கிழக்கு தொகுதி தேர்தல் பறக்கும் படை, நிலை கண்காணிப்பு குழு, வீடியோ கண்காணிப்பு குழு என, 3 வகையான கண்காணிப்பு குழுவினர் பல்வேறு குழுவாக அமைத்து, 24 மணி நேரமும் கண்காணிப்பு, சோதனை, வாகன தணிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.
கடந்த, 20 முதல் நேற்று வரை, உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு வரப்பட்ட, 14 லட்சத்து, 11,840 ரூபாயை பறிமுதல் செய்து, மாவட்ட கருவூலத்தில் செலுத்தினர். மதுபானம், 30,610 ரூபாய் மதிப்பில், 43 லிட்டர் மது, 300 கிராம் கஞ்சா, புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர். இதுவரை பணம் மற்றும் பிற பொருட்கள் என, 14 லட்சத்து, 47,413 ரூபாய் மதிப்பில் பறிமுதல் நடந்துள்ளது.


இதுவரை 59 விதிமீறல்வழக்குகள் பதிவு
இடைத்தேர்தலில் இதுவரை தேர்தல் விதிமீறியதாக, ௫௯ வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
கிழக்கு சட்டசபை தொகுதி இடைத்தேர்தல் அறிவிப்பு, கடந்த, 18ல் வெளியானது. அப்போது முதல் தேர்தல் நடத்தை விதிமுறை அமலுக்கு வந்தது. உரிய நேரத்தில் துப்பாக்கியை ஒப்படைக்காதது, கொடி கம்பம் அகற்றாதது, பேனர் வைத்தது, போஸ்டர் வைத்தது என கடந்த, 1ம் தேதி வரை, நடத்தை விதிமீறியதாக, 42 வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்நிலையில், 4ம் தேதி நள்ளிரவு வரை நடத்தை விதிமீறல் தொடர்பாக, 17 வழக்கு பதிவானது. மொத்தம், 59 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக, போலீசார் தெரிவித்தனர்.


தேர்தல் பணிக்குழு கூட்டம்இந்திய கம்யூ., கட்சி, ஈரோடு கிழக்கு தொகுதி தேர்தல் பணிக்குழு கூட்டம், பொறுப்பாளர் பிரபாகரன் தலைமையில், மாவட்ட அலுவகத்தில் நேற்று நடந்தது. தேர்தல் பணி மற்றும் செயல்பாடு குறித்து, இ.கம்யூ., முன்னாள் தேசிய குழு உறுப்பினர் ஸ்டாலின் குணசேகரன், முன்னாள் மாவட்ட செயலாளர் திருநாவுக்கரசு உள்ளிட்ட பலர் விளக்கினர். முன்னதாக காங்., வேட்பாளர் இளங்கோவனை ஆதரித்து, தினமும் வீடு, வீடாக சென்று வாக்கு சேகரிக்க எட்டு குழு அமைக்கப்பட்டது. இக்குழுக்கள் மூலம் நுாற்றுக்கும் மேற்பட்ட கட்சி தொண்டர்கள், தேர்தல் பணியாற்றுவதென கூட்டத்தில் முடிவு செய்தனர்.


கைப்பந்து போட்டி துவக்கம்
முதல்வர் ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு, நம்பியூர் அருகே சாவக்காட்டுபாளையம் தி.மு.க., சார்பில், மாநில அளவிலான ஆண்கள், பெண்கள் கைப்பந்து போட்டி, சாவக்காட்டுபாளையம் அரசு மேல் நிலைப்பள்ளி மைதானத்தில், நேற்று தொடங்கியது. இதில் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த, 30க்கும் மேற்பட்ட ஆண்கள் அணி, 10க்கும் மேற்பட்ட பெண்கள் அணி பங்கேற்றுள்ளன. நேற்று நடந்த பெண்களுக்கான முதல் போட்டியை, நம்பியூர் பேரூராட்சி தலைவரும், நம்பியூர் ஒன்றிய தி.மு.க., செயலாளருமான செந்தில்குமார் தொடங்கி வைத்தார்.

குண்டடத்தில் நாளைமா.திறனாளிகள் முகாம்
குண்டடம் வட்டார அளவிலான மாற்றுத்திறனாளிகளுக்கான முகாம், குண்டடம் அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில், நாளை காலை, 10:00 மணி முதல், மதியம், ௧:௦௦ மணி வரை நடக்கிறது. முகாமில் அடையாள அட்டை, தனித்துவம் வாய்ந்த தேசிய அடையாள அட்டை பதிவு, தகுதியான மாற்றுத் திறனாளிகளுக்கு மாதாந்திர உதவி தொகை, தேவைக்கேற்ப உதவி உபகரணங்கள் தொடர்பான விண்ணப்பங்கள் பெறப்படும்.

தொழிலாளி தற்கொலைகோபி அருகே வேட்டைக்காரன்கோவிலை சேர்ந்தவர் வினோத்குமார், 23, கூலி தொழிலாளி; நேற்று முன்தினம் இரவு துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரின் தந்தை கோவிந்தராஜ் கொடுத்த புகாரின்படி, இறப்புக்கான காரணம் குறித்து, கோபி போலீசார் விசாரிக்கின்றனர்.

பேரூராட்சி கவுன்சிலர்
தி.மு.க.,வில் ஐக்கியம்
பேரூராட்சி அ.தி.மு.க., கவுன்சிலர், அமைச்சர் முன்னிலையில் தி.மு.க.,வில் ஐக்கியமானார்.
சென்னிமலை பேரூராட்சியில் மொத்தம், 15 வார்டுகள் உள்ளன. இதில், 14 வார்டு கவுன்சிலர்கள் தி.மு.க.,வை சேர்ந்தவர்கள். 15வது வார்டு கவுன்சிலர் குமார், அ.தி.மு.க.,வை சேர்ந்தவர். அ.தி.மு.க.,வில் வார்டு செயலாளர், நகர துணை செயலாளராக இருந்தார். இந்நிலையில் செய்தி துறை அமைச்சர் சாமிநாதன் முன்னிலையில், தனது ஆதரவாளர்கள் சிலருடன் தி.மு.க.,வில் நேற்று இணைந்தார். இதனால் சென்னிமலை பேரூராட்சி, எதிர்க்கட்சியினர் இல்லாத நிர்வாகமாக மாறியுள்ளது.


தேரோட்டத்துக்கு சென்றகாவலாளி விபத்தில் பலி
தேரோட்டம் பார்க்க சென்ற, கூட்டுறவு வங்கி காவலாளி, விபத்தில் பலியானார்.
சென்னிமலை அருகே சென்னியங்கிரிவலசை சேர்ந்தவர் துரைசாமி, 68; சென்னிமலை கூட்டுறவு வங்கி காவலாளி. சென்னிமலையில் நேற்று நடந்த தேர்த்திருவிழாவை காண, வீட்டிலிருந்து சென்னிமலைக்கு நடந்து சென்றார்.
ஈங்கூர் ரோட்டில் அதே திசையில் வந்த ஒரு லாரியின் பின்சக்கரத்தில் துரைசாமி தவறி விழுந்து விட்டார். இதில் பலத்த காயம் அடைந்த துரைசாமி சம்பவ இடத்தில் பலியானார். லாரி டிரைவரான திருச்சி மாவட்டம், மணப்பாறையை சேர்ந்த கிருஷ்ணனிடம், சென்னிமலை போலீசார் விசாரித்து வருகிறனர்.---

முருக பக்தர்களுக்கு பா.ஜ., சார்பில் உணவு
பாதயாத்திரை செல்லும் பக்தர்களுக்கு, பா.ஜ.,வினர் உணவு வழங்கினர்.
தைப்பூசத் திருவிழாவையொட்டி, தாராபுரத்தில் அலங்கியம் சாலை வழியாக, பல்வேறு பகுதிகளை சேர்ந்த முருக பக்தர்கள், பழநி கோவிலுக்கு நேற்று பாத யாத்திரை சென்றனர். அவர்களுக்கு, 173வது பூத் கமிட்டி பா.ஜ., பொறுப்பாளர் குமார் தலைமையில், உணவு வழங்கப்பட்டது. நகர தலைவர் சதீஷ் உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.

நுால் வெளியீட்டு விழா டி.என்.பாளையம் அடுத்த கள்ளிப்பட்டியை சேர்ந்தவர் பூந்துறயான் ரத்தினமூர்த்தி. ஆப்பக்கூடல் சக்தி மேல்நிலைப் பள்ளியில், 36 ஆண்டுகாலம் ஆசிரியராக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். இவர், 18 நுால்களை வெளியிட்டுள்ளார். தமிழில் ஆழ்ந்த அறிவும், பன்முகத்தன்மையும் கொண்டவர். கடந்த ஆண்டு பிப்.,௫ம் தேதி காலமானார். முதலாமாண்டு நினைவேந்தல் நிகழ்ச்சி நேற்று மாலை கள்ளிப்பட்டியில் நடந்தது.
இதில் அவர் எழுதிய, வாழ்வியல் விழுமியங்களை வெளிப்படுத்தும் நுாலை, இந்திய மொழிகள் நடுவண் நிறுவனத்தின் முன்னாள் துணை இயக்குனரும் பேராசிரியருமான சாம் மோகன்லால் வெளியிட, மக்கள் சிந்தனை பேரவையின் தலைவர் ஸ்டாலின் குணசேகரன் பெற்றுக் கொண்டார்.



வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
+2 மாணவர்களே!
என்ன படித்தால் சிறந்த எதிர்காலம்?
தினமலர் வழிகாட்டி 2023 அனுமதி இலவசம்

Send Hi to 91505 74441

திருப்போரூர் திருவிழா - இது சொந்தவீடு வாங்கும் பெருவிழா!

Advertisement
 
Advertisement