போலீசுக்கு தகவல் கொடுத்த வாலிபர் தீர்த்துக்கட்ட முயன்ற போதை கும்பல்
திருவல்லிக்கேணி, போதைப் பொருள் விற்பனை குறித்து, போலீசாருக்கு தகவல் கொடுத்த வாலிபரை தீர்த்துக்கட்ட முயன்ற, சிறுவன் உட்பட நான்கு பேரை போலீசார் கைது செய்தனர்.
சென்னை, திருவல்லிக்கேணி, காந்தி நகர் பல்லவன் சாலையைச் சேர்ந்தவர் வெங்கடேஷ், 35; ஆட்டோ ஓட்டுனர். நேற்று முன்தினம் தீவுத்திடல் அருகே நின்றிருந்தார்.
அப்போது அங்கு வந்த நான்கு பேர் கொண்ட கும்பல், வெங்கடேஷை வழிமறித்து தகராறில் ஈடுபட்டு, கத்தியால் வெட்டினர். அவர்களின் பிடியில் இருந்து தப்பித்து வெங்கடேஷ் ஓடினார். அந்த கும்பலும் அவரை விடாமல் துரத்திச் சென்று கொலை செய்ய முயன்றனர்.
அதிர்ஷ்டவசமாக வெங்கடேஷ் தப்பிச் சென்று, திருவல்லிக்கேணி போலீசில் புகார் அளித்தார். புகாரின்படி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி, நேற்று நான்கு பேரையும் கைது செய்தனர்.
விசாரணையில் அவர்கள், திருவல்லிக்கேணி, காந்தி நகரைச் சேர்ந்த லோகேஷ், 19, சிந்தாதிரிப்பேட்டையைச் சேர்ந்த ஜேக்கப், 23, பஜார் தெருவைச் சேர்ந்த தனுஷ், 18, மற்றும் 17 வயது சிறுவன் என தெரிந்தது.
மேலும், பல்லவன் சாலை, காந்தி நகர் பகுதியில், கஞ்சா மற்றும் மதுபானம் ஆகியவை சட்டவிரோதமாக விற்கப்படுகிறது.
இது குறித்து, வெங்கடேஷ் போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளார். இதை தெரிந்துகொண்ட நால்வரும், அவரை கொல்ல முயற்சித்ததும் தெரிய வந்தது.
பிடிபட்ட நான்கு பேர் மீதும், கொலை முயற்சி மற்றும் அடிதடி வழக்குகள் உள்ளன. கத்தி உள்ளிட்ட ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!