சென்னை, சென்னை மாநகராட்சியில், ஏழு லட்சம் பேர் சொத்து வரி செலுத்தியுள்ள நிலையில், ஐந்து லட்சம் பேர் செலுத்தாமல் இழுத்தடிப்பது தெரிய வந்துள்ளது. மார்ச் 31ம் தேதி முடிவடைய உள்ள நடப்பு நிதியாண்டிற்குள், வரி செலுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது. இல்லையென்றால், சொத்து உரிமையாளர்களுக்கு 'நோட்டீஸ்' வழங்கப்பட்டு, கட்டடம் 'சீல்' செய்யப்படும். அதைத் தொடர்ந்து வீடுகளில் உள்ள பொருட்கள் 'ஜப்தி' உள்ளிட்ட நடவடிக்கைகளையும் மேற்கொள்ள மாநகராட்சி முடிவு செய்துள்ளது.
சென்னை மாநகராட்சியின் வரி வருவாயில் பிரதானமானது, சொத்து வரி. இந்த வரி வாயிலாக, சென்னை மாநகருக்கு தேவையான அடிப்படை கட்டமைப்புகள், திடக்கழிவுகள் அகற்றுதல், தெரு விளக்குகள், பூங்காக்கள் மற்றும் சாலைகள் பராமரித்தல், பொது சுகாதாரம், நோய் தடுப்பு ஆகிய அத்தியாவசிய பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.
முந்தைய சென்னை மாநகராட்சி பகுதிகளில் 24 ஆண்டுகளுக்கு பின், 2011ல் மேலும் சில பகுதிகள் இணைக்கப்பட்டன. இப்பகுதிகளில், 14 ஆண்டுகளுக்கு பின் சொத்துவரி பொது சீராய்வு செய்யப்பட்டது.
இதை எதிர்த்து, 200க்கும் மேற்பட்ட சொத்து உரிமையாளர்கள், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். வழக்கில், உயர்த்தப்பட்ட சொத்து வரியை நீதிமன்றம் உறுதி செய்து தீர்ப்பு வழங்கியது.
இந்த நிலையில், 2022 - 23ம் நிதியாண்டில், சென்னையில் ஏழு லட்சத்திற்கும் மேற்பட்டோர் சொத்து வரி செலுத்தியுள்ளனர். அதேநேரம், ஐந்து லட்சத்துக்கும் மேற்பட்டோர் சொத்து வரி செலுத்தாமல் உள்ளனர். இந்த நிதியாண்டு முடிய இரண்டு மாதங்களே உள்ள நிலையில், சொத்து வரி செலுத்தாதோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என, மாநகாரட்சி எச்சரித்துள்ளது.
இது குறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது:
சென்னை மாநகராட்சி முனிசிபல் சட்டம் - 1919ன்படி, சொத்து வரியை அதன் உரிமையாளர்கள், ஒவ்வொரு அரையாண்டுகளின் துவக்கத்தின் முதல் 15 நாட்களுக்குள் செலுத்த வேண்டும். அவ்வாறு செலுத்தும் சொத்து உரிமையாளர்களுக்கு, 5 சதவீத ஊக்கத்தொகை வழங்கப்படுகிறது.
இந்தாண்டு சொத்து வரி வசூல் 1,500 கோடி ரூபாயாக இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. சொத்து வரி உயர்த்தப்பட்டதால், வட்டி இல்லாமல் இரண்டாம் அரையாண்டுக்கான சொத்து வரி செலுத்த ஜன., 15ம் தேதி வரை அவகாசம் வழங்கப்பட்டது.
அதில், ஏழு லட்சம் சொத்து உரிமையாளர்களிடமிருந்து, 1,213 கோடி ரூபாய் வசூலிக்கப்பட்டுள்ளது. மீதம், ஐந்து லட்சம் சொத்து உரிமையாளர்களிடம் இருந்து, 287 கோடி ரூபாய் வசூலிக்க வேண்டிஉள்ளது.
இந்த நிதியாண்டு, வரும் மார்ச் 31ம் தேதியுடன் முடிவடைகிறது. அதற்குள் சொத்துவரி செலுத்தாதவர்கள், மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய வரியை உடனடியாக செலுத்த வேண்டும்.
இல்லையென்றால், சொத்து உரிமையாளர்களுக்கு 'நோட்டீஸ்' வழங்கப்பட்டு, கட்டடம் 'சீல்' வைக்கப்படும். அதேபோல் வீட்டு கதவில் 'நோட்டீஸ்' ஒட்டுதல், அருகாமையில் பேனர் வைத்தல், பொருட்கள் ஜப்தி உள்ளிட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
தவிர, அதிக தொகை சொத்துவரி பாக்கி வைத்திருப்பவர்கள் பட்டியல், மாநகராட்சி இணையதளத்திலும் வெளியிடப்படும்.
ஏற்கனவே, சொத்து வரி செலுத்தாத 499 நிறுவனங்கள் மற்றும் தனிநபர் குறித்த பட்டியல், மாநகராட்சி இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. எனவே, மாநகராட்சி நடவடிக்கை எடுக்கும் முன், செலுத்த வேண்டிய வரியை உடனடியாக செலுத்த வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
சொத்து வரியை தபால் துறை ஊழியர்கள், வரி வசூலிப்பாளர்களிடம் காசோலை, வரைவோலை, கடன் மற்றும் பற்று அட்டைகள் வாயிலாக செலுத்தலாம். மேலும், இ - சேவை மையங்கள், சென்னை மாநகராட்சி இணையதளம், 'பேடிஎம்', 'நம்ம சென்னை' ஆகிய மொபைல் போன் செயலிகள் வாயிலாக, பரிமாற்ற கட்டணம் இல்லாமல் செலுத்த முடியும். மேலும், 'பாரத் பில் பேமண்ட் சிஸ்டம்' வாயிலாகவும் எளிதாக சொத்து வரியை செலுத்த முடியும்.
அதிகாரிகள் ஒன்றும் செய்ய போவதில்லை கடந்த பத்தாண்டுகளாக இன்னொருவர் கட்டவேண்டிய வீட்டு வரி மற்றும குடிநீர் பாக்கிக்காக சம்மந்தமே இல்லாத எனக்கு பலமுறை புகார் எழுத்து மூலம் அளித்தும் அதை குப்பையில் போட்டுவிட்டு தொடர்ந்து குறுஞ்செய்தி அனுப்பும் மாநகராட்சி அதிகாரிகள் சேவைதொடர்ந்து சிறப்பாக நடக்க வாழ்த்துக்கள்