அன்னுார் : மாற்றுத்திறனாளிகள் தேசிய அடையாள அட்டை பெற முகாமில் அறிவுறுத்தப்பட்டது.
கோவை மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம் சார்பில், மாற்றுத்திறனாளிகளுக்கு உபகரணங்கள் வழங்க அளவீடு செய்வதற்கான சிறப்பு முகாம் நேற்று அன்னுார் தெற்கு துவக்கப்பள்ளியில் நடந்தது. பேரூராட்சி துணை தலைவர் விஜயகுமார் துவக்கி வைத்தார். முகாமில், பொதுத்துறை நிறுவனமான அலிம்கோ வாயிலாக உபகரணம் வழங்குவதற்காக அளவீடுகள் எடுக்கப்பட்டன.
கேலிபர், பேட்டரி வீல் சேர், கைத்தடி ஆகிய வற்றுக்கு தலா இருவரும், செயற்கைகால், பேட்டரி நாற்காலி, மூன்று சக்கர வாகனம், தேசிய அடையாள அட்டை ஆகியவற்றுக்கு தலா ஒருவரும் என, பத்து மாற்று திறனாளிகள் பங்கேற்றனர்.
இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், 'அடுத்த முகாம் இன்று (டிச.1ம் தேதி) பேரூர் அருகே சுண்டக்காமுத்துார் துவக்க பள்ளியிலும், 5ம் தேதி நரசிம்மநாயக்கன்பாளையம் நடுநிலை பள்ளியிலும் நடக்கிறது.
வேறு வட்டாரத்தை சேர்ந்தவர்களும் இந்த முகாம்களில் பங்கேற்கலாம். தற்போது தேசிய அளவில் மேம்படுத்தப்பட்ட யூ.டி.ஐ.டி., என்னும் அடையாள அட்டை வழங்கப்பட்டு வருகிறது.
இந்த அட்டையை பிற மாநிலத்திலும் பயன்படுத்த முடியும். கோவை மாவட்டத்தில் இதுவரை, 16,250 பேர் யூ.டி.ஐ.டி., அடையாள அட்டை பெற்றுள்ளனர், மாற்றுத் திறனாளிகள் இந்த அடையாள அட்டையை பெற்று பயன் பெறலாம். மாற்றுத்திறனாளிகள் கோரிக்கை, குறைகள் இருந்தால் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலரை 94999 33471 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்," என்றனர்.
இம்முகாம் குறித்து முன்னதாகவே தகவல் தெரிவிக்கவில்லை. சரியாக விளம்பரப்படுத்தாததால் வெறும் பத்து பேர் மட்டுமே முகாமில் பங்கேற்றனர்.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!