பால் கொள்முதல் பணம் வழங்க 3 மாதம் தாமதம் சென்னையில் காத்திருப்பு போராட்டம் நடத்த முடிவு
ஈரோட்டில், தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் சங்க மாநில குழு கூட்டம், தலைவர் முகமது அலி தலைமையில் நடந்தது.
பின், முகமது அலி நிருபர்களிடம் கூறியதாவது:
தற்போதைய அரசு, ஆவின் பால் லிட்டருக்கு, 3 ரூபாய் விற்பனை விலையை குறைத்தது. இதனால் ஆவின் நிர்வாகத்துக்கு ஆண்டுக்கு, 300 கோடி ரூபாய் நஷ்டம் ஏற்படுகிறது. இந்த தொகையை ஆவினுக்கு, அரசு வழங்க வேண்டும்.
இழப்பு தொகை
பால் விலையை தலா, 10 ரூபாய் உயர்த்த கோரினோம். 3 ரூபாயை மட்டும் உயர்த்தினர். இதனால் மேலும், பல கோடி ரூபாய் ஆவினுக்கு நஷ்டம் ஏற்படுகிறது.
இந்த விலை உயர்வை யாரும் ஏற்காததால், ஆவினுக்கான பால் கொள்முதல் விலை அதிகரிக்கவில்லை.
அதே நேரம், கால்நடை தீவனங்கள் விலையும் கடுமையாக உயர்ந்து விட்டது. எனவே பால் 1 லிட்டருக்கு, 10 ரூபாயாக உயர்த்தி, ஆவினுக்கான இழப்பு தொகையை வழங்க வேண்டும்.
ஆவின் நிர்வாகம், 500 கோடி ரூபாய்க்கு மேல் நஷ்டத்தில் இயங்குவதால், பல சொசைட்டிகள், 2 - 3 மாதங்களாக பால் கொள்முதலுக்கான பணத்தை வழங்காமல் உள்ளன.
கால்நடை தீவனத்தை மானிய விலையில் பால் உற்பத்தியாளர்களுக்கு வழங்க வேண்டும். அவ்வாறு வழங்காததாலும், பால் விலை அதிகம் என்பதாலும், தனியார் நிறுவனங்கள் பாலை கொள்முதல் செய்வது அதிகரித்துள்ளது.
நடவடிக்கை
தனியார் மூலம் கிடைக்கும் முட்டையை வாங்கி சத்துணவில் வழங்கினால், சிலருக்கு பலன் கிடைக்கும். பொதுத்துறை நிறுவனமான ஆவினில் பாலை வாங்கி கொடுத்தால் பயன் கிடைக்காது என்பதால் தவிர்க்கின்றனர்.
இதை மாற்றி சத்துணவு, அரசு மருத்துவமனைகளில் பால் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இக்கோரிக்கைகளை வலியுறுத்தி ஜன., 9ல் சென்னை நந்தனத்தில் உள்ள ஆவின் தலைமையகம் முன் காத்திருப்பு போராட்டம் நடத்துவது என முடிவு செய்து உள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
முன்னதாக நடந்த கூட்டத்தில், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில தலைவர் பி.சண்முகம், பால் உற்பத்தியாளர்கள் சங்க பொதுச் செயலர் பி.பெருமாள், பொருளாளர் ஏ.எம்.முனுசாமி, மாநில நிர்வாகிகள் சங்கர், தீர்த்தகிரி, கே.சி.ராமசாமி, வெண்மணி சந்திரன் ஆகியோர் பேசினர்.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!