கரூர் பஸ் ஸ்டாண்டில் தொடரும் அவலம் பயணச்சீட்டு முன்பதிவு மையத்தை தேடி அலையும் பயணிகள்
கரூர் பஸ் ஸ்டாண்ட் கட்டடம், பல ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டதால், சிமென்ட் மேற்கூரை அடிக்கடி இடிந்து விழுந்து வருகிறது. கடந்த, செப்.15ல், மாநகராட்சி ஆணையர் ரவிச்சந்திரன் சார்பில், மதுரை, திருச்சி பஸ்கள் நிற்கும் இடத்தில் உள்ள கடைகளை காலி செய்ய நோட்டீஸ் வழங்கப்பட்டது. பின், அந்த பகுதியில் மக்கள் செல்ல முடியாதவாறு, பேரி கார்டு மற்றும் இரும்பு தடுப்புகள் வைத்து அடைக்கப்பட்டன.
இந்நிலையில், கடந்த, 26ல் நடந்த மாநகராட்சி கவுன்சிலர் கூட்டத்தில், பஸ் ஸ்டாண்ட் தென்புறத்தில் உள்ள, 20க்கும் மேற்பட்ட கடைகள், கட்டண கழிப்பறை, அரசு விரைவுப் போக்குவரத்து கழக பயணச்சீட்டு முன்பதிவு மையம் உள்ள கட்டட பகுதிகளை இடித்து அப்புறப்படுத்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இந்நிலையில், இரும்பு தடுப்புகள் வைத்து அடைக்கப்பட்ட இடத்தில் இருந்த அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக முன்பதிவு மையம், பஸ் ஸ்டாண்ட் நடு பகுதியில் 'அம்மா' குடிநீர் பாட்டில் விற்பனை செய்யப்பட்ட இடத்துக்கு மாற்றப்பட்டுள்ளது.
இங்கு, பயணச்சீட்டு முன்பதிவுக்கு தேவையான இட வசதி இல்லாமல் பணியாளர் தவித்து வருகிறார். மழை பெய்யும் போது, சாரல் காரணமாக கணினி உள்ளிட்ட சாதனங்கள் நனைந்து விடுகிறது. இதனால், முன்பதி மையத்தை இரவு நேரத்தில் பூட்டி செல்லவே அச்சமாக இருக்கிறது என புலம்புகின்றனர்.
மேலும், முன்பதிவு மையத்துக்கு விளம்பர பலகை கூட வைக்கவில்லை. இதனால், பயணிகள் முன்பதிவு மையத்தை தேடி அலையும் நிலை உள்ளது. எனவே, முன்பதிவு மையத்துக்கு மாற்று இடம் வழங்க கோரி, மாநகராட்சி நிர்வாகத்திடம் முறையிடப்பட்டுள்ளது. அவர்கள், இடம் தராமல் இழுத்தடிப்பதாக புகார் எழுந்துள்ளது.
தற்போது, தீபாவளி பண்டிகை சமயமாக இருப்பதால் முன்பதிவு மையத்தை வேறு இடத்துக்கு மாற்ற, சம்மந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்களும், பயணிகளும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!