கல்குவாரியில் பாறைகள் சரிவு; மேலும் இருவரை மீட்பதில் சிக்கல்
திருநெல்வேலி : திருநெல்வேலி அருகே விபத்து நடந்த கல் குவாரியில் சிக்கியுள்ள 2 பேரை தேடும் பணியை தேசிய பேரிடர் மீட்புக் குழுவினர் நேற்றும் தொடர்ந்தனர். மீண்டும் பாறைகள் சரிவதால் மீட்பதில் சிக்கல் ஏற்பட்டது. ஒருவரது உடல் இருக்கும் இடம் தெரிந்தது.திருநெல்வேலி மாவட்டம் தருவை அருகே அடைமிதிப்பான்குளம் கிராமத்தில் தமிழக காங்., துணைத் தலைவர் சேம்பர் செல்வராஜ் நடத்திவரும் கிரஷர் மற்றும் குவாரியில் மே 14 இரவில் குண்டுக்கல் ஏற்றும் பணி நடந்தது.
300 அடி ஆழமுள்ள குவாரியில் மூன்று இயந்திரங்கள், இரண்டு லாரிகளில் ஆறுபேர் பணி செய்தனர். இரவு 11:30 மணி அளவில் திடீரென பாறை சரிந்து விழுந்ததில் 6 பேரும் சிக்கிக் கொண்டனர்.மே 15 காலையில் தீயணைப்பு மீட்பு குழுவினர், முருகன் மற்றும் விஜயன் ஆகிய இருவரை உயிருடன் மீட்டனர். மாலையில் மீட்கப்பட்ட செல்வம் வரும் வழியில் இறந்தார். டிரைவர்கள் ராஜேந்திரன், முருகன், செல்வகுமார் ஆகியோர் பாறை இடிபாடுகளுக்குள் சிக்கினர்.அரக்கோணத்தில் இருந்து வந்துள்ள தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் கமாண்டன்ட் விவேக் வத்சவ் தலைமையிலான 30 பேர் நேற்று முன்தினம் மாலையில் முருகன் என்பவரது உடலை மீட்டனர்.
3வது நாளாக நேற்றும் மீட்பு பணி நடந்தது. எஞ்சிய இருவரில் ஒருவரது உடல் பாறைகளுக்குள் சிக்கி இருப்பது தெரியவந்தது. தொடர்ந்து பாறை சரிவு ஏற்பட்டதால் உடலை மீட்பதில் சிக்கல் ஏற்பட்டது.கலெக்டர் விஷ்ணு கூறுகையில், ''பேரிடர் மீட்பு குழுவினரின் கயிறு அறுந்ததால் தூத்துக்குடி துறைமுகத்திலிருந்து இரும்பு கயிறு கொண்டு வந்து மீட்பு நடவடிக்கையை தொடர்கிறோம். கூடங்குளம் அணுமின் நிலையத்திலிருந்து கிரேன் வந்துள்ளது. போதுமான உபகரணங்கள் உள்ளன. பாறைச் சரிவு தொடர்வதால் மீட்பு நடவடிக்கைகள் சவாலாக உள்ளது,'' என்றார்.
தலைமறைவு
இங்கு அரசு அனுமதித்த அளவை விட அதிக அளவு கனிமம் தோண்டி எடுத்ததால் ஏப். 13 ல் குவாரியின் அனுமதி ரத்து செய்யப்பட்டுள்ளது. இருப்பினும் விதி மீறி இரவில் குவாரி நடத்தினர். இதுகுறித்த வழக்கில் சேம்பர் செல்வராஜ் அவரது மகன் குமார் ஆகியோரை போலீசார் தேடி வருகின்றனர்.
இருவரும் கேரள மாநிலம் வண்டிப்பெரியாறில் இருப்பதாக தகவல் அறிந்து அங்கு சென்றுள்ளனர்.குவாரியில் சிக்கிய ஆறு பேரில் இருவர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர். இருவர் இறப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இனி இருவரை மீட்க வேண்டும். இறந்த இருவரின் குடும்பத்திற்கும் அரசு சார்பில் தலா 10 லட்சம் ரூபாய், தொழிலாளர் நலத்துறை சார்பில் தலா 5 லட்சம் வீதம் 15 லட்சம் ரூபாய் வழங்க முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இன்றும் மீட்பு பணி தொடரும் என கலெக்டர் தெரிவித்தார். பாறைகளுக்குள் உடல்கள் இருக்கும் இடத்தை அறிய நேற்று இரவு போலீஸ் துறையின் மோப்ப நாய் ரெக்ஸ் ஈடுபடுத்தப்பட்டது.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!