தமிழக அரசு, கடந்தாண்டு ஜூலை மாதம், மின் கட்டணத்தை உயர்த்தியது. சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்கள் என்றும் பாராமல், 'பீக் ஹவர்' மின்கட்டணம் நிர்ணயிக்கப்பட்டது. மின்சார நிலை கட்டணம், 430 சதவீதம் அளவுக்கு உயர்த்தப்பட்டது.
தொழில் நிறுவனங்கள், சொந்த முயற்சியில் அமைத்த மேற்கூரை சோலார் மின் கட்டமைப்புக்கு, யூனிட்டுக்கு, 1.54 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இத்தகைய கட்டண உயர்வு மற்றும் 'பீக்ஹவர்' கட்டணத்தை முழுமையாக ரத்து செய்ய கோரி, தொழில்துறையினர் போராடி வருகின்றனர்.
சீரற்ற நிலையில் இருந்த தொழில் நிலை முன்னேற்றம் அடைந்த பின்னரும், மின் கட்டண உயர்வு, பேரிடியாய் இறங்கியுள்ளது. இனியும், மின் கட்டண சுமையை சுமக்க முடியாது என்று அதிருப்தியடைந்து, மாநில அளவில் தொடர் போராட்டம் நடந்து வருகிறது.
தமிழ்நாடு தொழில்துறை மின்நுகர்வோர் கூட்டமைப்பை உருவாக்கி, மாநில அளவிலான, அறப்போராட்டங்கள் நடத்தப்படுகிறது. அதன் ஒருபகுதியாக, மனிதசங்கிலி போராட்டம், டிச., 4ம் தேதி, மாவட்ட தலைநகர்களில் நடக்குமென, அறிவிக்கப்பட்டுள்ளது.
இனியும் முடியாது...
இதுகுறித்து திருப்பூர் தொழில் அமைப்புகள் கூட்டமைப்பினர் கூறியதாவது:
மின் கட்டண உயர்வால், திருப்பூர் பனியன் தொழில் பல்வேறு சிரமங்களை சந்தித்து வருகிறது. இனியும் தொழில் நடத்த முடியாது என்பதால், 'பீக் ஹவர்' மின் கட்டணம் உள்ளிட்ட கட்டண உயர்வுகளை திரும்ப பெறக்கோரி போராட்டம் நடத்தி வருகிறோம்.
அதன்படி, வரும் டிச., 4ம் தேதி, மாவட்ட தலைநகர்களில், திட்டமிட்டபடி, மனித சங்கிலி போராட்டம் நடக்கும். அன்றைய தினம், குமரன் சிலையில் இருந்து, மாநகராட்சி அலுவலகம் வரை, மனித சங்கிலி நடத்தப்படும். தொழில்துறையினர் மட்டுமல்லாது, தொழிலாளர்களும் குடும்பத்துடன் இப்போராட்டத்தில் பங்கேற்க விருப்பம் தெரிவித்துள்ளனர்.
மனித சங்கிலி போராட்டத்துக்கு பின்னரும், தமிழக அரசு அழைத்து பேசி, தீர்வு வழங்காதபட்சத்தில், 18ம் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டம் நடத்த வேண்டிய நிலை ஏற்படும்.
இவ்வாறு, அவர்கள் கூறினர்.
சீரற்ற நிலையில் இருந்த தொழில் நிலை முன்னேற்றம் அடைந்த பின்னரும், மின் கட்டண உயர்வு, பேரிடியாய் இறங்கியுள்ளது. இனியும், மின் கட்டண சுமையை சுமக்க முடியாது என்று அதிருப்தியடைந்து, தொடர் போராட்டம் நடந்து வருகிறது
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!