Load Image
Advertisement

மினி தேயிலை தொழிற்சாலை திட்டம் பணிகள் தாமதமாவதால் நிதி திரும்ப செல்லும் அபாயம்

ஊட்டி;பழங்குடியினருக்கான மினி தேயிலை தொழிற்சாலை அமைக்க ஒதுக்கப்பட்ட நிதி வருவதற்கு காலதாமதம் ஏற்பட்டுள்ளதால் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

நீலகிரி மாவட்டம், கொணவக்கரை, ஜக்கனாரை, குஞ்சப்பனை ஊராட்சிக்கு உட்பட்ட செம்மனாரை, தாளமொக்கை, கோழித்தொரை, புதுார், கோழிக்கரை, சுண்டப்பட்டி, மந்தரை, அரியூர், பனகுடிசோலை, நட்டக்கல், மெட்டுக்கல் ஆகிய கிராமங்களில், சுமார், 5 ஆயிரத்திற்கு மேற்பட்ட இருளர், குரும்பர் பழங்குடியின மக்கள் வசித்து வருகின்றனர்.

பழங்குடியினரின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில், கடந்த, 2016ம் ஆண்டில், 'மினி தேயிலை தொழிற்சாலை' அமைக்க அப்போதைய அரசு நிதி ஒதுக்கியது. இடம் தேர்வு செய்யப்பட்டு அனைத்து துறை அனுமதியும் பூமி பூஜையும் நடத்தப்பட்டது. நிதி ஒதுக்கி, 6 ஆண்டுகள் நிறைவு பெற்றும் பணி நடக்காததால், தொழிற்சாலைக்கு ஒதுக்கப்பட்ட நிதி திரும்ப செல்லும் நிலை ஏற்பட்டுள்ளதால் பழங்குடியின மக்கள் கவலையடைந்துள்ளனர்.

நீலகிரி பழங்குடியினர் தேயிலை உற்பத்தியாளர் சங்க செயலாளர் சண்முகம் கூறுகையில், ''கடந்த, 2016ம் ஆண்டில் மினி தேயிலை தொழிற்சாலை அமைக்க, 80 லட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டது. ஆனால் எந்த பணியும் மேற்கொள்ளவில்லை. நிதி திரும்ப செல்லும் அபாயம் உள்ளதால், பழங்குடியினரின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டிருப்பதால், மாநில அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்,'' என்றார்.

பழங்குடியினர் ஆய்வு மைய இயக்குனர் உதயகுமார் கூறுகையில்,''இந்த திட்டத்துக்கு பின், 30 சதவீதம் அளவுக்கு கட்டுமான பொருட்களின் விலை உயர்ந்திருப்பதால், ஏற்கனவே ஒதுக்கப்பட்ட நிதி போதுமானதாக இல்லை. புதிய கட்டுமானத்துக்கு ஆகும் செலவை கணக்கிட்டு, கூடுதல் நிதி கோரி அரசுக்கு அறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. நிதி வந்ததும் விரைவில் பணிகள் மேற்கொள்ளப்படும்,'' என்றார்.


வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement