நண்பனை கொலை செய்ய முயன்றவருக்கு 5 ஆண்டு சிறை
பெரியகுளம்: நண்பர்களுக்கிடையே சுடுகாட்டில் நடந்த தகராறில் பிளேடால் கழுத்தை அறுத்து கொலை முயற்சியில் ஈடுபட்டவருக்கு பெரியகுளம் சார்பு நீதிமன்றம் 5 ஆண்டு சிறை தண்டனை வழங்கப்பட்டது.
பெரியகுளம் தென்கரை தோட்டிகாலனியைச் சேர்ந்தவர் சிவக்குமார் 27. அதே பகுதியைச் சேர்ந்த இவரது நண்பர் லட்சுமணன் 27. இருவரும் கடந்தாண்டு பிப்.,28ல் இரவு 10:00 மணிக்கு பட்டாளம்மன் தெரு பின்புறம் சுடுகாட்டில் மது குடித்தனர். சிறிது நேரத்தில் இருவரும் தங்களது திருமணம் குறித்து பேசினர். 'உனக்கெல்லாம் யார் பெண் கொடுப்பார்கள்', என இருவரும் கூறி ஒருவருக்கொருவர் தகராறில் ஈடுபட்டனர்.
சிவக்குமாரின் கழுத்தை பிளேடால் லட்சுமணன் அறுத்தார். பின் தென்னை மட்டையால் அடித்தார். பலத்த ரத்த காயத்துடன் சிவக்குமார் தேனி மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
தென்கரை போலீசார் கொலை முயற்சி வழக்கு பதிவு செய்து லட்சுமணனை கைது செய்தனர். இவ் வழக்கு பெரியகுளம் சார்பு நீதிமன்றத்தில் நடந்தது.
வழக்கை விசாரித்த நீதிபதி மாரியப்பன், லட்சுமணனுக்கு 5 ஆண்டு கடுங்காவல் தண்டனையும், ரூ. 3 ஆயிரம் அபராதம் விதித்தார். பணம் கட்ட தவறினால் கூடுதலாக 3 மாதம் சிறை தண்டனை விதித்தார். அரசு தரப்பில் வழக்கறிஞர் கற்பூரசுந்தர் ஆஜரானார்.--
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!