ADVERTISEMENT
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்ட சிவன் கோயில்களில் கார்த்திகை சோமவாரத்தை முன்னிட்டு சங்காபிஷேகம் நடந்தது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.
கார்த்திகை சோமவாரத்தை முன்னிட்டு திண்டுக்கல் அபிராமி அம்மன் கோயிலில் 1008 சங்குகள், கூட்டுறவு நகர் செல்வவிநாயகர் கோயிலில் 108 சங்குகள், ரயிலடி சித்தி விநாயகர் கோயிலில் 108 சங்குகளுக்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டது.
அதில் நிரப்பியிருந்த தீர்த்தங்களை கொண்டு சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. அபிராமி அம்மன் கோயிலில் 1008 சங்குகளால் சிவபெருமான் தோற்றத்திலான வடிவமைப்பில் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது.
சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடந்தது. கிழக்கு ரத வீதி லிங்கேஸ்வரர் கோயில், நாகல்நகர் மாதா புவனேஸ்வரி அம்மன் கோயில்களில் 108 சங்காபிஷேகம் நடந்தது.
*கன்னிவாடி சோமலிங்கசுவாமி கோயிலில் கார்த்திகை சோமவாரத்தை முன்னிட்டு சங்காபிஷேகம் நடந்தது. சிறப்பு ஆராதனைகளுக்குப்பின் 108 சங்குகளில் வேதி தீர்த்தம் நிரப்பப்பட்டு மலர் அலங்காரத்துடன் விசேஷ பூஜைகள் நடந்தது.
ஓம்கார விநாயகர், நந்தி, சோமலிங்கசுவாமிக்கு திரவிய அபிஷேகத்துடன், மலர் அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது. திருவாசக முற்றோதலுடன், மூலவர், நந்திக்கு சங்காபிஷேகம் நடந்தது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.
*-நத்தம் கோவில்பட்டி கைலாசநாதர் கோயிலில் கார்த்திகை மாத முதல் சோமவார விழாவில் 1008 சங்காபிஷேக விழாவில் ஏராளமானோர் பங்கேற்றனர். இதையொட்டி மூலவர் கைலாசநாதர்-செண்பகவள்ளி அம்மனுக்கு பால், பழம், பன்னீர், விபூதி, சந்தனம், புஷ்பம், இளநீர், பஞ்சாமிர்தம், உள்ளிட்ட 16 வகையான அபிஷேகங்கள், அலங்காரம், தீபாராதனைகள் நடந்தது.
தொடர்ந்து உலக நன்மை வேண்டி காலையில் 108 சங்காபிஷேகமும் மாலை கோவில் வளாகத்தில் 1008 சங்காபிஷேகம் நடந்தது.
1008 சங்குகளை சிவலிங்க வடிவத்தில் அமைக்கப்பட்டு பின் சங்கில் இருந்த தீர்த்தங்கள் கைலாசநாதருக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. இதைப்போல சாணார்பட்டி வி.டி.பட்டி ஊராட்சி கோவில்பட்டியில் உள்ள பசுபதீஸ்வரர் கோயிலில் சங்காபிஷேகம் நடந்தது.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!