பெரம்பலுார் மாவட்டத்தில், பெரம்பலுார் மற்றும் ஆலத்துார் யூனியனில் உள்ள, 31 கல் குவாரிகளை, இன்று ஏலம் விடுவதாக, பெரம்பலுார் மாவட்ட புவியியல் மற்றும் சுரங்கத்துறை அறிவிப்பு வெளியிட்டது.
அதன்படி, ஏற்கனவே செயல்படும், 19 பழைய பிட் கல் குவாரிகளுக்கு, ஒரு குவாரிக்கு தலா, 1.36 கோடி ரூபாயும், 12 புது பிட் கல் குவாரிகளுக்கு, ஒரு குவாரிக்கு தலா 2 கோடி ரூபாயும் என டெண்டர் தொகை நிர்ணயிக்கப்பட்டது.
'பிளாக்'
இதற்கான விண்ணப்பங்களை போடுவதற்கு, பெரம்பலுார் கலெக்டர் அலுவலக வளாகத்தில் முதல் தளத்தில் உள்ள புவியியல் மற்றும் சுரங்கத்துறை அலுவலகத்தில் பெட்டி வைக்கப்பட்டது.
ஆனால், செங்குணம், கல்பாடி, பாடாலுார், திருவளக்குறிச்சி ஆகிய ஊர்களுக்கு உட்பட்ட, 20 குவாரிகளை, ஆளும் கட்சியைச் சேர்ந்த உள்ளூர் மற்றும் பக்கத்து மாவட்டத்தைச் சேர்ந்த அமைச்சர், ஆளுங்கட்சி எம்.எல்.ஏ., மாவட்ட செயலர் ஆகியோர், சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளின் துணையுடன், 'பிளாக்' செய்து, குவாரிகளை, ஊர் வாரியாக, பதவிக்கு தகுந்தாற்போல் பிரித்து இருந்ததாக கூறப்படுகிறது.
குவாரியை ஏலம் எடுக்க விரும்புபவர்கள், சம்பந்தப்பட்ட கல் குவாரிக்கு, ஒதுக்கீடு செய்துள்ள ஆளும் கட்சியைச் சேர்ந்த பிரமுகர்களை சந்தித்து, கட்சி நிதி என்ற பெயரில், அவர்கள் கேட்ட தொகையான, 7 - 10 லட்சம் ரூபாய் வரை கொடுக்க வேண்டும் என கூறப்படுகிறது.
ஏலம் கிடைத்தவுடன், அதிகாரிகள் மற்றும் அமைச்சர், எம்.எல்.ஏ., மாவட்ட செயலர், ஒன்றிய செயலர் உள்ளிட்டவர்களை 'கவனிக்க' மட்டும், 10 லட்சம் ரூபாயும் கொடுக்க வேண்டும்.
இது தவிர, அரசுக்கு கட்ட வேண்டிய டெண்டர் தொகையை, டி.டி.,யாக எடுத்து, டெண்டர் விண்ணப்பத்துடன் இணைத்து கொடுத்து விட வேண்டும்.
அதன் பிறகே, குவாரி கிடைக்கும் என்ற நிபந்தனையை தெரிவித்து, தி.மு.க.,வின் கூட்டணி கட்சியைச் சேர்ந்த வி.சி.க.,வினரையும் விண்ணப்பிக்க விடாமல் தடுத்து வந்தனர்.
எதிர்ப்பு
இந்நிலையில், பா.ஜ., வைச் சேர்ந்த, பெரம்பலுார் மாவட்டம், கவுல்பாளையம் ஊராட்சி மன்ற தலைவர் கலைச்செல்வன், 48, என்பவர், தன் தம்பி முருகேசன், 43, என்பவருக்கு, கல் குவாரி டெண்டருக்கு விண்ணப்பிப்பதற்காக, வேலுார் பா.ஜ., தொழில் துறை பிரிவு மாவட்ட தலைவர் முருகேசன், 46, என்பவருடன், நேற்று மதியம் 12:00 மணிக்கு பெரம்பலுார் கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தார்.
அங்குள்ள புவியியல் மற்றும் சுரங்கத்துறை உதவி இயக்குனர் அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ள பெட்டியில் விண்ணப்பத்தை போடுவதற்காக, விண்ணப்பம் மற்றும் 50,000 ரூபாய்க்கான இரண்டு டி.டி.,யுடன் சென்றார்.
அங்கு நின்று கொண்டிருந்த போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கரின் உதவியாளர் மகேந்திரன், பெரம்பலுார் தி.மு.க., - எம்.எல்.ஏ., பிரபாகரனின் பி.ஏ., சிவசங்கர் உள்ளிட்ட தி.மு.க., நிர்வாகிகள் சிலர், 'யாரும் விண்ணப்பத்தை போடக்கூடாது' என கூறினர்.
அதற்கு, கலைச்செல்வன், 'விண்ணப்பத்தை போட்டு விடுகிறோம்; பிறகு பேசிக் கொள்ளலாம்' என்று கூறி, போலீசார் உதவியுடன் விண்ணப்பத்தை போட அலுவலகத்துக்குள் சென்றார்.
ஆத்திரமடைந்த போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கரின் உதவியாளர் மகேந்திரன், எம்.எல்.ஏ., பிரபாகரனின் பி.ஏ., சிவசங்கர் மற்றும் தி.மு.க.,வினர், அவர்களிடம் இருந்து விண்ணப்பத்தை பறித்து, அதை கிழித்தெறிந்தனர்.
பின் ஏற்பட்ட வாக்குவாதத்தை தொடர்ந்து, கலைச்செல்வன், முருகேசன் ஆகியோர் மீது கொலை வெறித் தாக்குதல் நடத்தினர்.
அப்போது, அலுவலகத்தில் இருந்த கனிம வளத்துறை துணை இயக்குனர் ஜெயபால், வருவாய் ஆய்வாளர் குமரி அனந்தன், உதவி புவியியலாளர் இளங்கோவன், போலீஸ் ஒருவரையும் கடுமையாக தாக்கி, அவர்களின் சட்டையைக் கிழித்து, அராஜகத்தில் ஈடுபட்டனர்.
அடித்து நொறுக்கினர்
அங்கிருந்த பெரம்பலுார் டி.எஸ்.பி., பழனிசாமியை கீழே தள்ளி விட்டனர். கனிமவளத் துறை அலுவலகத்தில் இருந்த கம்ப்யூட்டர் உள்ளிட்ட பொருட்களை, தி.மு.க.,வினர் அடித்து நொறுக்கினர்.
இதையறிந்து, கனிம வளத்துறை அலுவலகத்திற்கு வந்த கலெக்டர் கற்பகத்தை, தி.மு.க.,வினர் ஒருமையில் பேசினர். அங்கு பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டதை தொடர்ந்து கலெக்டர், எஸ்.பி., ஷ்யாமளாதேவியை போனில் அழைத்து, அங்கு உடனடியாக வருமாறு தெரிவித்தார்; எஸ்.பி., வந்தார்.
தாக்குதலுக்குள்ளான ஊராட்சி மன்ற தலைவர் கலைச்செல்வன், முருகேசன் உள்ளிட்ட மூன்று பேரும், கலெக்டர் அலுவலக அறை அருகில் உள்ள பார்வையாளர் காத்திருப்பு அறையில் தஞ்சம் புகுந்தனர்.
போக்குவரத் துறை அமைச்சர் சிவசங்கரின் உதவியாளர் மகேந்திரன் மற்றும் குண்டர்கள், 300க்கும் மேற்பட்டோர் அந்த அறையில் புகுந்து, அறையில் இருந்த முருகேசனின் பேன்டை உருவி தாக்கினர்.
அங்கிருந்தவர்களை வெளியில் இழுத்து வந்து, போலீசார் முன்னிலையில் கடுமையாக அடித்து, உதைத்தனர்.
செய்தி சேகரிப்பதற்காக சென்ற செய்தியாளர்கள் சிலரை, வீடியோ, போட்டோ எடுக்கக்கூடாது என மிரட்டியதுடன், 'டிவி' நிருபர் ஒருவரையும் தாக்கினர்.
சத்தியம் 'டிவி' நிருபர் மாரியப்பன் என்பவரின் மொபைல் போனை வலுக்கட்டாயமாக பறித்து சென்றனர்.
இதனால், கலெக்டர் அலுவலகம், கலவர களமாக காட்சியளித்தது. கலெக்டர் அலுவலகத்தில் இருந்த அதிகாரிகள், பெண் அலுவலர்கள், அலுவலகத்தில் உள்ள கதவை சாத்திக் கொண்டு, உயிர் பயத்தில் நடுங்கினர்.
தாக்குதல் நடத்திய 300 பேரும் முகத்தை துண்டால் கட்டிக்கொண்டு, தாக்குதலை அரங்கேற்றினர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த குண்டர்கள், பணம் கொடுத்து அழைத்து வரப்பட்டவர்கள் என கூறப்படுகிறது. இதனால், அந்த இடமே போர்க்களம் போல காட்சியளித்தது.
ஏலம் ரத்து
இதனால், கல் குவாரி டெண்டரை ரத்து செய்து, பெரம்பலுார் கலெக்டர் கற்பகம் உத்தரவிட்டுள்ளார்.
இது குறித்து, அவர் வெளியிட்ட அறிக்கையில், 'நிர்வாக காரணங்களால், பெரம்பலுார் மாவட்ட கனிமவள குவாரிகள் ஏலம் தற்காலிகமாக ரத்து செய்யப்படுகிறது' என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வாசகர் கருத்து (81)
இன்னும் இரண்டு வருடம் இருக்கு .... இது வெறும் ட்ரைலரர்தான்.... ...
நான் கருணாநிதி மகன் பொய் சொல்லுவேனா என்று சொல்லி சொல்லி மொத்த தமிழ்நாட்டையும் நாறடித்து விட்டார்
Please leave them All are mentally disturbed MANA NALAM KUNRIYAVARGAL. CCTVcamera not working. Our Scotland yard police are busily searching the real சுலபரிட்ஸ் In press conference they may say that no such incident happened. Long live cycle பாபு
நாலும் தப்பு சொல்ல முடியாத ஆட்சி என்று சொன்னாரே அது இதுதானோ
ஆக பெ.ம்பலூர் கலெக்டர் அலுவகத்தில் பலர் முன்னிலையில் திராவிட கலாசாரம் புகுந்து விளையாடி விட்டது.முதல்வரின் சாட்டை சூழன்று வைக்கோல் பிரிகளுக்கு இடையில் ஒளிந்து கொள்ளும். தன்மானமுள்ளயரசு. அனாவசியமா திராவிட பசங்களை குறை சொல்லாதீர். வாய் வெந்து போகும்..