9 வந்தே பாரத் ரயில் சேவை
அடுத்த கட்டமாக, நாட்டின் பல்வேறு முக்கிய வழித்தடங்களில், ஒன்பது, 'வந்தே பாரத்' ரயில்களின் சேவையை, பிரதமர் மோடி இன்று(செப்., 24) டில்லியில் இருந்து காணொலி வாயிலாக துவங்கி வைத்தார். திருநெல்வேலி ஜங்ஷன் ரயில் நிலையத்தில் வந்தே பாரத் ரயில் துவக்க விழாவில், மத்திய அமைச்சர் எல்.முருகன் உள்ளிட்ட பாஜ., தலைவர்கள் கல்நது கொண்டனர்.
தென் மாவட்ட மக்கள் மகிழ்ச்சி
சென்னை- திருநெல்வேலி இடையே வந்தே பாரத் ரயில் சேவை துவங்கியதால், தென் மாவட்ட மக்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர். 'ஏசி சேர் கார்' கட்டணம் 1,700 ரூபாய். உணவு இல்லாமல், 1,355 ரூபாய் கட்டணமும், சொகுசு பெட்டியில் ஒருவருக்கு, 3,090 ரூபாய் கட்டணமும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
இந்த ரயில்களுக்கான டிக்கெட் முன்பதிவு, நேற்று முன்தினம் இரவில் துவங்கியது. குறிப்பாக, எழும்பூர் - திருநெல்வேலி வந்தே பாரத் ரயிலில் பயணிக்க, பொது மக்கள் ஆர்வமாக டிக்கெட் முன்பதிவு செய்து இருந்தனர்.
9 வழி தடங்கள் எங்கே தெரியுமா?
1. ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர்- உதய்பூர்
2. சென்னை- திருநெல்வேலி
3. தெலுங்கானா மாநிலம் ஐதராபாத் - பெங்களூரு வந்தே பாரத் எக்ஸ்பிரஸ்
4. விஜயவாடா - சென்னை (ரேணிகுண்டா வழியாக) வந்தே பாரத் எக்ஸ்பிரஸ்
5. பாட்னா - ஹவுரா வந்தே பாரத் எக்ஸ்பிரஸ்
6. கேரளா மாநிலம் காசர்கோடு - திருவனந்தபுரம் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ்
7. ரூர்கேலா - புவனேஸ்வர் - பூரி வந்தே பாரத் எக்ஸ்பிரஸ்
8. ராஞ்சி - ஹவுரா வந்தே பாரத் எக்ஸ்பிரஸ்
9. ஜாம்நகர்- ஆகமதாபாத் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ்.
நம்பிக்கை
நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசியதாவது: வந்தே பாரத் ரயில்களில் 1.11 கோடி பயணிகள் பயணித்துள்ளனர். வந்தே பாரத் ரயில்கள் நாட்டின் அனைத்து பகுதிகளையும் இணைக்கும் நாள் வெகு தொலைவில் இல்லை.
அனைத்து இந்தியர்களும் புதிய இந்தியாவின் சாதனைகளைப் பற்றி பெருமிதம் கொள்கிறார்கள். சந்திரயான்-3 வெற்றியால் சாமானியர்களின் எதிர்பார்ப்பு விண்ணை எட்டியது.
ஜி 20 உச்சிமாநாட்டின் வெற்றி மூலம் இந்தியாவில் ஜனநாயகம், மக்கள்தொகை, பன்முகத்தன்மை ஆகியவற்றின் மீதான நம்பிக்கையை அதிகரித்துள்ளது.
பெண்கள் தலைமையிலான நமது வளர்ச்சியை உலகம் பாராட்டியுள்ளது. இந்த தொலைநோக்கு பார்வையை மேம்படுத்தவே மகளிர் இட ஒதுக்கீடு அரசு கொண்டு வந்தது. இதனால் ஒவ்வொரு துறையிலும் பெண்களின் பங்களிப்பை அதிகரிக்க உதவும். இவ்வாறு அவர் கூறினார்.
மத்திய ரயில்வேத்துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்னவ் பேசியதாவது: பிரதமர் மோடி தலைமையிலான பாஜ.,வின் 9 ஆண்டுக்கால ஆட்சியில் ரயில்வே துறை வளர்ச்சி அடைந்துள்ளது. பல்வேறு திட்டங்கள் மற்றும் உள்கட்டமைப்பு வசதிகள் கொண்டு வரப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
கன்னியாகுமரி வரைக்கும் நீட்டித்தால் நன்றாக இருக்கும்...